சனி, 19 அக்டோபர், 2019

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி: பன்னீருக்கு எடப்பாடியின் பகீர் நிபந்தனை!

டிஜிட்டல் திண்ணை:  மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி:  பன்னீருக்கு எடப்பாடியின் பகீர் நிபந்தனை!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“சில நாட்களாகவே அதிமுக சீனியர்கள் முதல், தொண்டர்கள் வரை பலரும் விவாதித்துக் கொள்ளும் ஒரு சப்ஜெக்ட் என்றால் சசிகலா பற்றி ஓ.பன்னீர் கூறியதுதான். சத்தியத்தின் கோட்டைக்குள் சாத்தான்கள் நோட்டமா என்று நமது அம்மாவில் சசிகலா வகையறாக்களை சாத்தான்கள் என்று குற்றம் சாட்டி எடப்பாடி உத்தரவின் பேரில் கவிதை வெளியான சில நாட்களிலேயே, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி தலைமை முடிவு செய்யும் என்று பல படிகள் ஒரேயடியாக இறங்கி வந்து பேட்டி கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம். இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்புகள் கிளம்பிவிட்டன.

இதற்குப் பின்னணியாக சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே தனக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிட வேண்டும் என்று ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் கடும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு ஓ.பன்னீரும் தீவிரமாக டெல்லியில் லாபி செய்தார். ஆனால் எடப்பாடியின் தலையீட்டில், அது தடுத்து நிறுத்தப்பட்டதாக அப்போதே பேசப்பட்டது. அதிமுக சார்பில் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி தர பாஜக முன் வந்தது. அந்த ஒருவர் யார் என்பதில் சீனியர் வைத்திலிங்கத்துக்கும் ஓபிஆருக்கும் போட்டி ஏற்பட்டதால் யாருக்குமே வேண்டாம் என்று மறுத்துவிட்டார் எடப்பாடி.
இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க இருக்கும் சூழலில் எப்படியாவது மத்திய அமைச்சராகிவிட வேண்டும் என்று மீண்டும் காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் ஓ.பி. ரவீந்திரநாத். சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் தன் அறையின் கதவைத் தாழிட்டுக் கொண்டவர் நெடுநேரமாகியும் கதவைத் திறக்கவே இல்லை. அனைவரும் பதற்றமாகி பன்னீருக்குத் தெரியப்படுத்த, அவரும் மகனிடம் பேச முயற்சித்திருக்கிறார். அப்போது பன்னீரிடம் போனிலேயே, ‘என்னை மத்திய அமைச்சர் ஆக்குவீங்களா... ஆக்க மாட்டீங்களா? நீங்கதான கட்சியின் ஒருங்கிணைப்பாளர்? உங்களால முடியாதா? உங்களால முடியலைன்னா எடப்பாடிகிட்ட பேசுங்க. என்னை மத்திய அமைச்சர் ஆக்கலைன்னா, நான் ஒரே ஒரு எம்பிதான், பிஜேபியில சேர்ந்து மத்திய அமைச்சர் ஆகிடுவேன்’ என்று கூறியிருக்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்.
மகனை சமாதானப்படுத்திய ஓ. பன்னீர் இதுபற்றி மீண்டும் முதல்வர் எடப்பாடியிடம் பேசியிருக்கிறார். ‘பையன் மத்திய அமைச்ச்ர் ஆகறதுக்கு ரொம்பவும் ஆசைப்படுறாரு, ஒரே ஒரு எம்பி . இந்த முறை நடக்கும் கேபினட் மாற்றத்துல அவரை சேக்க சொல்லிடலாமே?’ என்று எடப்பாடியிடம் கேட்டிருக்கிறார் ஓ;பன்னீர்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட எடப்பாடி, ‘சரிண்ணே... பண்ணிடலாம்னே...’ என்றதும் பன்னீர் செல்வம் முகத்தில் பிரகாசம். ஆனால் அது சில நிமிடம் கூட நீடிக்கவில்லை. ‘சரிண்ணே... தம்பிக்கு செஞ்சிடலாம். நீங்க இங்க என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிக்கங்க’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அதாவது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் பன்னீர் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே எடப்பாடியின் அழுத்தம். இதைக் கேட்ட பன்னீர் அதிர்ச்சியடைந்து கூனிக்குறுகிப் போனதாய் உணர்ந்து அஙகிருந்து கிளம்பிவிட்டார். மகனுக்கு மத்திய அமைச்சர் என்ற தனது கோரிக்கையை வைத்தே தன்னை துணை முதல்வர் பதவியில் இருந்து விலகச் சொல்லும் எடப்பாடியின் திட்டம் பன்னீருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது. சுகர் அதிகமாகிவிட்டது, ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது. அதோடு சேர்ந்து முதுகுவலியும் பாடாய் படுத்திவிட்டது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதைத் தாண்டி துணை முதல்வர் என்ற பதவி இருப்பதால்தான் ஓரளவு கட்சியினராவது பன்னீரிடம் வருகிறார்கள் போகிறார்கள். பன்னீரும் டெல்லி தொடர்புகளை பராமரிக்க துணை முதல்வர் பதவியையே பயன்படுத்துகிறார். அதை கழற்றிவிட்டுவிட்டால் பன்னீரின் செல்வாக்கை இன்னும் சரிக்கலாம் என்பதுதான் எடப்பாடியின் திட்டம். அதற்கு தோதாக அவரது மகனையே பயன்படுத்தியிருக்கிறார். ‘அப்பா துணை முதல்வர் மகன் மத்திய அமைச்சர் என்றால் கட்சியில் சீனியர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது’ என்பதுதான் எடப்பாடியின் நிலைப்பாடு.
இந்தப் பின்னணியில்தான் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி நல்ல முடிவெடுக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் பேட்டி கொடுத்திருக்கிறார். சசிகலா பெயரைச் சொல்லி இப்படி ஒரு கருத்தை வெளியிடுவதன் மூலம் எடப்பாடிக்கு சிக்கல் ஏற்படுத்தலாம் என்று கருதுகிறார் பன்னீர் செல்வம்.
இதற்கிடையில் ஓ.பன்னீரின் நிதித்துறை, வீட்டுவசதித்துறை, குடிசை மாற்று வாரியம், சிஎம்டிஏ ஆகிய துறைகளில் பெரிய அளவில் தலையீடு செய்யாமல் இருந்த முதல்வர் எடப்பாடி மீண்டும் அத்துறைகளின் முக்கிய , பெரிய முடிவுகளில் தலையிடத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள். தான் இறுதி செய்த பிறகே முக்கிய ஃபைல்களில் துறை அமைச்சரான பன்னீர் கையெழுத்திட வேண்டும் என்று அத்துறையின் முக்கிய அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டுவிட்டது. இப்படி பன்னீரும் எடப்பாடியும் ஒருவருக்கு எதிராக ஒருவர் கடுமையான காய் நகர்த்தல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: