ஞாயிறு, 7 ஜூலை, 2019

பாலியல் வழக்கில் சமூக ஆர்வலர் முகிலன் கைது!

முகிலன்முகிலன்vikatan.com-கலிலுல்லா.ச
பாலியல் வழக்கில் சமூக ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். சூழலியலாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15 -ம் தேதி அன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய வீடியோ ஆவணம் ஒன்றை வெளியிட்டார். பின்னர் மதுரை செல்வதாக கூறி எழும்பூரில் ரயில் ஏறிய அவர், காணாமல் போனார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் வசமிருந்த இந்த வழக்கு, பின்னர் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக ஆட்கொணர்வு மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் முகிலனை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இப்படியிருக்க `முகிலனை திருப்பதியில் பார்த்ததாக’ அவரது நண்பர் சண்முகம் கூறினார். ஆந்திர ரயில்வே போலீஸார் வசம் அவர் இருப்பதாகவும் சண்முகம் கூறினார்.


கோஷமிட்டபடி முகிலனை போலீஸார் அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்றும் வெளியானது. அதைத் தொடர்ந்து காட்பாடி கொண்டுவரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சென்னைக்கு முகிலன் அழைத்துவரப்பட்டார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவரை, நாய் கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், சரியான உணவு எடுத்துக் கொள்ளாததால் அவர், மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்தது.



முகிலன்




மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டார் முகிலன். சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து காலை 11 மணியிலிருந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது 140 நாள்களாக எங்கே இருந்தீர்கள், என்ன செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை போலீஸார் அவரிடம் கேட்டுள்ளனர்.




முழுமையான விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் முகிலன் கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் காணாமல்போன பிறகு, கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.



முகிலன்




இது தொடர்பாக குளித்தலை காவல்நிலையத்தில் ஐபிசி 417, 376, ஆகிய பிரிவுகளின் கீழ் முகிலன் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர், குளித்தலை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முகிலன், கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். டிரான்ஸிட் வாரன்ட் பெற்று அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: