திங்கள், 8 ஜூலை, 2019

முகிலன் ...கவிஞர் தாமரை உண்மையாகவே தாமரையின் கவிஞர் ஆகிவிட்டார்?

மனுஷ புத்திரன் :முகிலனும் தாமரையும்...
அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு.
அதிகாரம் ஒருவரை அழிக்க நினைத்தால் ஒன்று அவரை 'என்கவுண்டர்' செய்கிறது அல்லது ' கேரக்டர் அசாசினேஷன் ' செய்கிறது.
ஆனால் தாங்களும் அதிகாரத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் அந்த ஆயுதத்தை எடுப்பது தான் வியப்பாக உள்ளது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விவகாரங்களில் இருவரில் ஒருவர் மீது மற்றவருக்கு புகார்கள் இருக்குமெனில் தனிப்பட்ட முறையிலோ சட்டப்படியோ அதற்குத் தீர்வுகளைக் காண உரிமையுண்டு.
ஆனால் மக்களின் நீதிக்காக போராடும் ஒருவன் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் போது அவனுக்கு சமூகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய தார்மீக ஆதரவு எதுவும் கிடைக்க விடாமல் அந்த சமயத்தில் அவனது தனிப்பட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்துவது அவனைப் படுகொலை செய்வதற்குச் சமமானது.
தருண் தேஜ்பாலை அரசும் ஊடகங்களும் மூர்க்கமாக வேட்டையாடியது அவர் ஒரு பெண்ணிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டார் என்பதால் மட்டுமா?

அவரது தெஹல்கா இதழ் நடத்திய ஸ்டிங்க் ஆபரேஷன் குஜராத் கலவரத்தின் கோர முகத்தை வெளிக் கொணர்ந்தது என்பதால் தான்.
ஒரு பெண் விவகாரத்தை பயன்படுத்தி அவர் வேட்டையாடப்பட்டார். இது சர்வதேச அளவிலும் நடக்கிறது.
அமெரிக்கா நாடுகளை எப்படி உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்திய ஜீலியன் அசாங்கேவை நாடு நாடாகத் துரத்தி கடைசியில் ஒரு பாலியல் விவகாரத்தில் வேட்டையாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தியைத்தை எதிர்த்து உலகையே அதிரவைத்தவனுக்கு எதிராகவும் இந்த பாலியல் ஆயுதம் தான் கையிலெடுக்கப் பட்டிருக்கிறது.
இதுபோன்ற விவகாரங்களில் கண்ணை மூடிக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர்க்க குதிப்பவர்கள் அதன் உண்மைத் தன்மையை ஆராயும் வரை காத்திருப்பதில்லை.
குற்றம் சொல்பவர் வேறு நோக்கங்கள் உடையவராகவோ வேறு யாராலோ தூண்டப்பட்டவராகவோ இருக்கலாம் என்கிற வாய்ப்பைக் கூட சிந்திப்பதில்லை.
வைரமுத்து மீதான மீ டு குற்றச்சாட்டுகள் ஆண்டாள் விவகாரத்திற்குப் பிறகு எழுப்பப்பட்டது தற்செயலானது தானா?
காணாமல் போன ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளி முகிலன் நேற்றுக் காவல்துறையால் இழுத்துச் செல்லப்படும் காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சமயத்தில் கவிஞர் தாமரையின் "முகிலன் வரட்டும் ..பெண் விவகாரம் காத்திருக்கிறது"
என்ற பதிவைக் கண்டு அதிர்ந்தேன். முகிலன் காணாமல் போன சமயத்தில் அவருக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தப் பெண் விவகாரம் ஒரு பேச்சுக்கு உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.
அப்போது கூட அரசதிகாரத்தால் உரிமைகளுக்கான போராட்டத்தில் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்க வேண்டாமா?
நாம் நம் வாழ்வின் வெளிச்சங்களாகக் கொண்டிருக்கக் கூடிய பல மகத்தான ஆளுமைகளின் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளின் வழியாக மட்டுமே அந்த ஆளுமைகளின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுக்க முடியுமா?
காந்தியின் பாலியல் சோதனைகள் மட்டுந்தான் காந்தியா? காரல் மாக்ஸுன் பணிபெண்ணுடனான உறவு குறித்த கதைகள் தான் காரல் மார்க்ஸா? எர்னஸ்டோ சேகுவேராவின் பெண் வேட்கை அவரது வரலாற்றில் ஒரு பகுதியாக நிலைத்து நிற்கிறதே...
ஆண் பெண் விவகாரங்களை நமக்குச் சொல்லப்படும் தகவல்களின் அடிப்படையில் ஏதோ ஒரு ஒற்றைப் பரினாணத்தில் புரிந்து கொண்டு யாரை வேண்டுமாலும் தூக்கில் போடுவோம் என்பது அபத்தமானதும் ஆபத்தானதுமான சூழல்.
தனிமனித உறவு சார் பிரச்சினைகளை பெரும் அரசியல் பிரச்சினைகளில் ஒரு திசை திருப்ப்புன் கருவியாகப் பயன் படுத்துவதைத் தொடர்ந்து ஏற்கப் போகிறோமா?
ஒரு பெண்ணின் உறவு சார்ந்த மீறல்களை சமூக வெளியில் வைத்து விவாதித்து அவளை அவமதிப்பதை எப்படி ஏற்க முடியாதோ அப்படித் தான் ஒரு ஆண் இந்த விவகாரங்களால் பொதுவெளியில் வேட்டையாடப்
படுவதையும் ஏற்க முடியாது.
ஆண்களின் பலியாகப் பெண்களும் பெண்களின் பலியாக ஆண்களும் எந்த நேரமும் மாறக்கூடிய ஒரு பின் நவீனத்துவ பண்பாட்டுச் சூழலில் அதை அந்தத் தளத்தில் தான் விவாதிக்க
வேண்டுமே தவிர அரசியல் பிரச்சினைகளாககுவது என்ன நியாயம்?
அரைவேக்காட்டுப் பெண்ணுரிமைப் போராளிகள் அரசின் வேட்டைக் கருவிகளாவது பெரும் அவலம்.
நன்றி
தோழர்.மனுஷ்ய புத்திரன்

கருத்துகள் இல்லை: