செவ்வாய், 22 ஜனவரி, 2019

இந்திய ரூபாய்க்கு நேபாளத்தில் தடை... மோடியின் விசிட் நேபாளம் மகிமை

இந்திய ரூபாய்க்கு நேபாளத்தில் தடை!மின்னம்பலம் :100 ரூபாய்க்கு மேல் மதிப்புடைய
இந்திய ரூபாய் தாள்களை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
நேபாள பயணிகள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 100 ரூபாய்க்கு மேற்பட்ட ரூபாய் தாள்களை உபயோகிப்பதை அல்லது பெறுவதை நிறுத்துமாறு அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஷ்ட்ரா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாக காத்மண்டு போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இதன்படி இந்திய 200, 500 மற்றும் 2,000 ரூபாய் தாள்களை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி தடை விதித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டின்படி நேபாள நாட்டு குடிமக்கள் 100 ரூபாய்க்கு மேற்பட்ட ரூபாய் தாள்களை இந்தியாவைத் தவிர வேறெங்கும் பயன்படுத்த இயலாது. இந்திய ரூபாய் தாள்களைப் போல மற்ற சில நாடுகளின் ரூபாய் தாள்களைப் பயன்படுத்தவும் நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சுற்றுலாப் பயணிகளால், ரூபாய் தாள்கள் நேபாளத்தில் பெருமளவு புழக்கத்தில் இருப்பதாகவும், அதைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்திய நேபாள எல்லையில் உள்ள பல இந்தியர்கள் நேபாளத்துக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். அவர்கள் இனி உயர் மதிப்பு ரூபாய் தாள்களைப் பயன்படுத்த இயலாது என்பதால் யூரோவுக்கோ அல்லது டாலருக்கோ மாற்ற வேண்டியிருக்கும். இந்தத் தடைக்கான முடிவை நேபாள நாட்டு அமைச்சரவை டிசம்பர் 13ஆம் தேதியே எடுத்துள்ளது. இருப்பினும் நேபாள அரசின் இந்த முடிவானது விசிட் நேபாளம் திட்டத்துக்குச் சற்று பின்னடைவை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: