திங்கள், 21 ஜனவரி, 2019

லயோலா கல்லூரி.. வீதி விருது விழாவில் சமுக நீதி ஓவியங்கள்

சர்ச்சைக்குரிய படங்கள்: மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி!
மின்னம்பலம் : வீதி விருது விழா நிகழ்ச்சியில் இந்து மதத்தை விமர்சிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்திருந்த நிலையில், லயோலா கல்லூரி நிர்வாகம் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் அரவணைப்பு மையமும், மாற்று ஊடக மையமும் இணைந்து ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் வீதி விருது விழாவை நடத்தியது. இதில், கல்லூரியின் கலை இலக்கியப் பிரிவு, தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தன்னார்வக் கலைஞர்கள் சங்கம் ஆகியன இதனை இணைந்து நடத்தின.

லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட கண்காட்சியில், ராம ராஜ்யம் மீ டூ என்று பாரத மாதாவையும், ஏகாதிபத்திய தாசன் என்று பிரதமர் நரேந்திர மோடியையையும் இழிவுபடுத்தியதாகக் குற்றம்சாட்டியது இந்து மக்கள் கட்சி. பெண் பிறப்பு உறுப்பில் திரிசூலம் வரைந்து ரத்தம் வருவது போலவும், பாஜகவின் பயங்கரவாத ஆட்சியில் எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பும் வகையிலும், ஸ்வாச் பாரத் என்ற அடையாளத்தை நீளும் விவசாயிகள் தற்கொலை என்றும் குறிப்பிட்டுள்ளதாகப் புகார் தெரிவித்தது.
இந்த நிகழ்வுக்குத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தங்களுக்குத் தெரியாமல் இவ்வாறு நடந்துவிட்டதாகவும், இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான எந்தச் செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டவுடன் சர்ச்சை ஓவியங்கள் நீக்கப்பட்டன” என்று லயோலா கல்லூரியின் பேராசிரியரும், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் காளீஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
வீதி விருது விழாவிற்கு வழங்கிய அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது கவனத்துக்கு வந்தவுடன் சர்ச்சைக்குரிய படங்கள் அகற்றப்பட்டுவிட்டன என லயோலா கல்லூரி நிர்வாகம் கூறியது பச்சை பொய் என பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: