ஞாயிறு, 20 ஜனவரி, 2019

சபரிமையில் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - பா.ஜ.க அறிவிப்பு!

.vikatan.com - சத்தியா கோபாலன் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஒருபுறம், பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயல்வதும், மறுபுறம் அவர்களைப் பக்தர்கள் தடுப்பதும் தொடர் கதையாக நடைபெற்று வந்தது.
 இதற்கிடையில், கடந்த 2-ம் தேதி, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம்செய்தனர். இவர்கள் கோயிலுக்குள் சென்றதைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் போராட்டக் களமாக மாறியது.  சில இந்து அமைப்புகளும், கேரள பா.ஜ.கவினரும் இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  பல இடங்களில் கலவரம், கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்களும் செய்தனர். இந்நிலையில் மகர பூஜைகள் நிறைவடைந்ததால் சபரிமலை கோயில் நடை இன்று முதல் அடைக்கப்படுகிறது.
சபரிமலைக்குச் சென்ற இரு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் இரு பெண்களுக்கும் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் போது சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தற்போது வரை 51 பெண்கள் கோயிலினுள் சென்று சாமி தரிசனம் செய்ததாகக் கேரள அரசு அறிக்கை சமர்ப்பித்தது.

இது பற்றி பேசிய கேரள பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன், “ சபரிமலை விவகாரத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். பக்தர்களிடம் நம்பிக்கையைக் காக்கும் போராட்டத்தில் பாஜக தோற்றுவிட்டது. எங்களின் போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெறவில்லையென்றாலும் எங்களால் முடிந்தவரைப் போராடினோம். போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் மேலும் சிலர் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டுள்ளன அதையும் திரும்ப பெறவேண்டும். இது குறித்து ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்படும். அனைவரும் தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: