புதன், 7 நவம்பர், 2018

மதுரை அரசுமருத்துவ மனை.. உடலை கொடுக்க தீபாவளி இனாம் வாங்கும் ஊழியர்கள்

Mahalaxmi : தீபாவளியை முன்னிட்டு மதுரை அரசுமருத்துவமனை உடற்கூராய்வு அறையில் ‘பட்டாசு வசூல்’ நடைபெற்றுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்து உடல்களை பெற்றுக்கொள்ள வரும் உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் தீபாவளி பட்டாசுகள் வாங்கித்தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் தினம்தோறும் 10-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
உடற்கூராய்வுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்குகிறது. இருப்பினும் உடற்கூராய்விற்கு உடல்களைக் கொண்டு வரும் உறவினர்களிடம் கத்தி, சோப்பு போன்ற பொருள்களுக்கு பணம் கேட்டு சிலர் நச்சரிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனைக்கு வருவோர்களிடம் பட்டாசுகள் வாங்கித் தர வலியுறுத்தியும், தராவிட்டால் உடற்கூராய்வு தாமதமாகும் எனவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் பரமக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரதுஉடல் உடற்கூராய்விற்காக எடுத்து வரப்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் ராஜேந்திரனின் உறவினர்களிடம் பட்டாசுகள் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

அதுவும் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின்பட்டாசுதான் வேண்டுமென்றும் கேட்டுள்ளனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் ராஜேந்திரனின் உறவினர்களும் ரூ. 1500 மதிப்புள்ள பட்டாசுகளை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
ஊழியர்களுக்கு பட்டாசுகள் வாங்கிக் கொடுக்கும் சம்பவத்தை ராஜேந்திரனின் உறவினர்கள் செல்லிடப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: