ஞாயிறு, 4 நவம்பர், 2018

விரைவில் இடைத்தேர்தல்: காரணம் ரஜினி?

விரைவில் இடைத்தேர்தல்: காரணம் ரஜினி?மின்னம்பலம: திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு காரணமாக 18 தொகுதிகளும் காலியாகியுள்ளது. 30 நாட்களுக்குள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்படாமல் இருந்தால். ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி. ராவத் தெரிவித்திருந்தார்.
மேல்முறையீடு செய்ய போவதில்லை என்றும் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளோம் என்றும் தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரை 20 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டாலும், தேர்தல் இப்போது வரவேண்டாம் என்ற எண்ணத்திலேயே உள்ளது.
தினகரன் தரப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரை தங்கள் பக்கம் இழுத்து அவரை வைத்து உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வைக்கலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் திட்டமாக இருந்தது. எனினும், அவ்வாறு செய்தால், அந்த ஒரு தொகுதியில் மட்டுமே தேர்தல் நடத்த தடை விதிக்கப்படலாம் அல்லது விதிக்கப்படாமலும் போகலாம் என்பது முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த திட்டத்தை அவர் கைவிட்டார்.
இந்நிலையில்தான், இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ள ரகசிய தகவல் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமிக்கு சென்றுள்ளது. இதனை எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மற்றும் சென்றுகொண்டிருக்கும் அமைச்சர்களை உடனடியாக சென்னைக்கு திரும்ப அவர் உத்தரவிட்டார். தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்களுடன் நேற்று அவசர ஆலோசனையையும் அவர் நடத்தியுள்ளார்.
அப்போது, 20 தொகுதிகளில் குறைந்தது 8 தொகுதிகளிலாவது வெற்றி பெறவேண்டும் என்று பொறுப்பாளர்களிடம் கூறிய எடப்பாடி, ஆர்.கே.நகரை போல் விட்டுவிடக்கூடாது என்றும் பேசியுள்ளார்.
இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ள தகவல் திமுக தரப்புக்கும் சென்றுள்ளது. இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்த அக்கட்சிக்கும் இந்த தகவல் அதிர்ச்சியையே அளித்துள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பிலும் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் தேதி தொடர்பாக தேர்தல் ஆணையமும் ஆலோசித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளையும் மீறி இடைத்தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் காட்டிவரும் முனைப்பின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக அதிமுக தரப்பு கருதுகிறது. ஆனால், இதன் பின்னணியில் ரஜினிகாந்த் உள்ளது திமுக தலைமையை ஆழ்ந்த ஆலோசனைக்கு தள்ளியுள்ளது.

கருத்துகள் இல்லை: