ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஒரு ஓட்டுக்கு 300 கோடி ரூபாய்!.. இலங்கை மதிப்பில்...

மின்னம்பலம்: இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது. இந்நேரத்தில் நடுநிலை வகிப்பது ஆராஜகம் வெற்றிபெறவே வழிவகுப்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த முடிவு ராஜபக்சே தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேரத்திலும் ராஜபக்சே தரப்பு ஈடுபட்டு வருகிறது. கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. பலித ரங்கே பண்டாரா, “அவர்கள் என்னை அணுகி தங்களுக்கு ஆதரவு அளித்தால் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 48 கோடி ரூபாய்) அளிப்பதாகவும், அமைச்சர் பதவி அளிப்பதாகவும் கூறினார்கள்.
கொழும்புவில் இருக்கும் ஒரு புத்தர் கோயிலில் வைத்து காலையில் பணம் கொடுக்கப்படும் என்றும், மாலையிலேயே அமைச்சராக பதவி ஏற்கலாம் என்றும் உத்தரவாதம் அளித்தனர்.
ஆனால் நானோ அந்தப் பணத்தை அனமதுவா பகுதியில் இருக்கும் என் வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தால் இந்த வேண்டுகோளைப் பரிசீலிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு பதிலாகத்தான் எனக்கு இந்த மெசேஜ் வந்திருக்கிறது” என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவிலான விலை கொடுத்து வாங்கப்படுகிறார்கள். என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து எம்.பி.க்கள் தங்களின் வாக்கை விற்கக்கூடாது என் ஜனநாயகத்திற்கான இயக்கம் வலியுறுத்தியது. ரனிலை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது.
சந்தையில் உள்ளது போன்று எம்பி.க்கள் வாங்க மற்றும் விற்கப்படுகின்றனர் என்று இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வேதனை தெரிவித்திருந்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 எம்.பி.க்களில் ரனில் பக்கம் 103 எம்.பி.க்களும் ராஜபக்சே பக்கம் 100 எம்.பி.க்களும் உள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரனிலுக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சியமைக்க 113 எம்பி.க்கள் ராஜபக்சேவுக்கு தேவை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களில் ஒருவர் ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மீதமுள்ளவர்களையும் இழுக்க ராஜபக்சே தரப்பு முயன்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையிலான கலந்துரையாடல்கள் மற்றும் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள போராளிகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர் என்றும் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ரிசாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஸ்லீம் எம்.பி.க்கள் 6 பேர் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபக்சேவுக்கு ஆதரவாக வாக்களிக்க தலா ஒரு எம்.பி.க்கு இலங்கை மதிப்பில் ரூ.300 கோடி (இந்திய மதிப்பில். ரூ.127 கோடி) வரை பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: