திங்கள், 5 நவம்பர், 2018

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டம்?

ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டம்மாலைமலர் : ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டமிட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் கொழும்பில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கொழும்பில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென அதிபர் சிறிசேனா நீக்கினார். பிறகு தனது சுதந்திரா கட்சியில் தனி அணியாக செயல்பட்டு வந்தவரும், கடந்த 3 வருடங்களாக எதிரியாக இருந்தவருமான ராஜ்பக்சேவை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் காரணமாக இலங்கையில் பிரதமர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டுமானால் பாராளுமன்றத்தை கூட்டி இருவரையும் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் எழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் பாராளுமன்றத்தை 16-ந்தேதி வரை முடக்கி அறிவித்தனர். இதை கண்டித்து ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாராளு மன்றத்தை கூட்ட சிறிசேனா முன் வந்தார். முதலில் 5-ந்தேதி பாராளுமன்ற கூடும் என்று தகவல் வெளியானது. பிறகு 7-ந்தேதி கூடும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி பாராளுமன்றம் கூட்டப்படும் என்றும் அன்றே பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று சிறிசேனா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை அரசிதழில் இது வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் தனக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்க ராஜபக்சே போராடிய படி உள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
சிறிசேனா-ராஜபக்சே அணியினருக்கு 96 எம்.பி.க்கள் ஆதரவே உள்ளது. 4 எம்.பி.க்கள் மாற்று கட்சிகளில் இருந்து வந்திருப்பதால் அவர்களது பலம் 100 ஆக உள்ளது. இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆதரவை பெற ராஜபக்சே முயற்சி செய்தார். ஆனால் ஒரு தமிழ் எம்.பி.யை சுமார் ரூ.30 கோடி மற்றும் மந்திரி பதவி கொடுத்து இழுத்து விட்டதால் ராஜபக்சே மீது தமிழ் எம்.பி.க்களின் கோபம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசிய எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். மேலும் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிக்கப் போவதாக கூறி உள்ளனர்.

ஏற்கனவே பாராளுமன்றத்தில் ரணில் விக்ரம சிங்கேவுக்கு 103 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. தமிழ் தேசிய எம்.பி.க்கள் 15 பேர் ஆதரவு அவருக்கு கிடைத்தால் ரனில் விக்ரம சிங்கேயால் பெரும்பான்மை பலத்தை எளிதாக நிரூபித்து காட்ட முடியும்.
மெஜாரிட்டி பலம் இல்லாத காரணத்தால் ராஜபக்சேவும், அவரது ஆதரவாளர்களும் எந்த எல்லைக்கும் செல்ல தீவிரமாக உள்ளனர். தமிழ் தேசிய எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை உள்நாட்டு போரின்போது கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்யவும் ராஜபக்சே தயாராகி வருகிறார்.
இது தவிர பணம் மற்றும் பதவிகளை அள்ளித்தரவும் மாற்றுக்கட்சி எம்.பி.க்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டு வருகிறது. தற்போது தங்கள் பக்கம் வரும் எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி வரை கொட்டிக் கொடுக்க ராஜபக்சே பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ராஜபக்சேயின் பணம் இலங்கை எம்.பி.க்களின் கைகளில் வெள்ளமாக போய் சேர தொடங்கி உள்ளது. இதனால் ரணில் ஆதரவாளர்களாக உள்ள 4 எம்.பி.க்கள் ராஜபக்சே பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் உள்ள 2 பெரிய முஸ்லிம் தலைவர்கள் இதுவரை ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இருந்தனர். தற்போது அவர்கள் ராஜபக்சே பக்கம் சாய பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மை பலத்துக்கு தேவையான எம்.பி.க்களை விலைக்கொடுத்து வாங்கி விட வேண்டும் என்பதில் ராஜபக்சேவும், அவரது மகன் நமலும் தீவிரமாக உள்ளனர்.
இதற்கிடையே ராஜபக்சே தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்து காட்ட இலங்கையில் மிகப்பெரிய ஊர்வலத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார். இலங்கை முழுவதிலும் இருந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் இந்த ஊர்வலத்துக்காக கொழும்பில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கொழும்பில் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.
கடந்த மாதம் இறுதியில் கொழும்பில் ராஜபக்சே ஆதரவாளர்கள் பேரணி நடத்தியபோது பயங்கர கலவரம் வெடித்தது. பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மீண்டும் ராஜபக்சே ஆதரவாளர்கள் பேரணிக்கு வருவதால் முன்புபோல கலவரம் வெடிக்குமோ என்ற பயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க் களை விலை கொடுத்து வாங்க முடியாவிட்டால் அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம்என்று ராஜபக்சே ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாராளுமன்றத்தை கலைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிறிசேனா மட்டும் சற்று தயங்கிய நிலையில் இருப்பதால் ராஜபக்சே ஆலோசித்து வருகிறார்.
என்றாலும் பாராளுமன்றத்தில் தோல்வி ஏற்பட்டால் தேர்தலை சந்திக்க ராஜபக்சே அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை தேர்தல் அதிகாரி அறிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை: