செவ்வாய், 10 ஏப்ரல், 2018

IPL மைதானத்துக்குள் பாம்புகள் வரலாம் ... வேல்முருகன் அறிவிப்பு ... பாம்பாட்டிகளை தேடும் காவல்துறை


tamilthehindu :ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மைதானத்தில் பாம்புகளும் வரலாம் என்று பண்ருட்டி வேல்முருகன் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் பாம்பாட்டிகளைத் தயார் செய்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதும் ஐபிஎல் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும், போட்டியை நடத்த வேண்டாம் என பல்வேறு கோரிக்கைகள் அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள் சார்பாக வைக்கப்பட்டு  ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
ஒரு கட்டத்தில் போட்டி நடந்தால் வீரர்களை சிறைப்பிடிப்போம் என தமீமுன் அன்சாரியும், போட்டி நடக்கும் இடத்தில் புகுந்து போராட்டம் நடத்துவோம் என கருணாஸும் பேட்டி அளித்தனர். பேட்டி நடக்கும் இடத்தில் பாம்புகளும் வரலாம் என பண்ருட்டி வேல்முருகன் பேட்டி அளித்திருந்தார்.
இதையடுத்து போலீஸார் மைதானத்திற்குள் ஒருவேளை பாம்பு வந்தால் என்ன செய்வது என்று பாம்பாட்டிகளையும், பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான தீயணைப்புத்துறை வீரர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: