வியாழன், 12 ஏப்ரல், 2018

தலைமுறைகளை கடந்த காவிரி போராட்டம் .. ராட்சத கறுப்பு பலூன்

காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல், தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி
ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், கருணாநிதி, ஸ்டாலின், திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்துள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஒருபுறம் காவிரி மீட்பு பயணம் என அறிவித்து மு.க.ஸ்டாலின் நடை பயணத்தை இன்று காலை தொடங்கியுள்ளார். ;திமுக முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் அமைக்கப்பட்டது. 20 அடி அகலமும், 15 அடி உயரமும் கொண்ட அந்த ராட்சத பலூனில் 'தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ' என்ற வாசகம் எழுதப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது அனைத்தும் ஒருபுறம் இருக்க, தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்பை சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். அதிலும், குழந்தைகளுக்கும் அவர்கள் கருப்பு சட்டை அணிவித்துள்ளனர். அதில் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: