சனி, 14 ஏப்ரல், 2018

காவிரி பிரச்னை தீர புது யோசனை... கேட்கத்தான் ஆளில்லை!" புலம்பும் விவசாய பிரதிநிதிகள்

காளிநதி, சாராவதி, சக்ராநதி, நேத்ராவதி, வாராஹி, மகாதாயி உள்ளிட்ட ஆறுகள் மூலம் சுமார் 2,000 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இதில்,900 டி.எம்.சி-க்கு மேல் மிக எளிதாக தமிழகத்துக்குத் திருப்பிவிட முடியும்.
விவசாயம்துரை.வேம்பையன்- RAJAMURUGAN - வீ.சிவக்குமார்-  விகடன் :
வீ.சிவக்குமார்காவிரியில் நம் 'நீர் உரிமை'யை நாம் பெற ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு! இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இன்னொருபக்கம் நீர்ப்பங்கீடு முறைக்குக் கள்ளிப்பால் ஊற்றிவிட்டு, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து பட்டை நாமம் சாத்துவதை செவ்வனே செய்து வருகிறது கர்நாடக அரசு.
இந்தச் சூழலில், ``கர்நாடக - தமிழக காவிரி பிரச்னை தீர அருமையான மாற்றுத் திட்டம் இருக்கு. தமிழகத்துக்கு 900 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீர் கிடைக்கக்கூடிய நவீன நீர் மேலேற்றுத் திட்டம் கைவசம் இருக்கு. ஆனால், அந்தத் திட்டம் பற்றி கர்நாடக - தமிழக முதல்வர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லியும் அதனைச் செயல்படுத்த யாரும் முன்வரவில்லை. ஒருவேளை காவிரி பிரச்னை தீர்ந்தால், டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று எடுத்து டெல்டாவைப் பாலைவனமாக்க முடியாது என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்னவோ?!" என்று நொந்து புலம்புகிறார்கள் தமிழக விவசாயச் சங்கப் பிரமுகர்கள்.

காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுவாமிமலை சுந்தரவிமலநாதனிடம் பேசினோம்.
சுவாமிமலை சுந்தரவிமலநாதன்"டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக உள்ள ஜீவநதி காவிரி. டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்கு அந்தத் தண்ணீர் பயன்படுவதோடு, சுமார் 14 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கர்நாடகாவில் மேகதாது, ராசிமணல் பகுதிகளில் அந்த மாநில அரசு அணைகள் கட்டுவதன் மூலம் தமிழகத்தின் காவிரி உரிமைக்குப் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. 177 டி.எம்.சி நீரை கர்நாடகம் நமக்குத் தர வேண்டும். அதற்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியும், மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக அந்தத் தீர்ப்பை நிறைவேற்றத் தயங்கிவருகிறது. இந்த நிலையில்தான், இரண்டு மாநிலங்களுக்கு இடையில் தண்ணீரை வைத்து ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் நோக்கில், தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமாகும் வகையிலான புதிய திட்டத்தை மத்திய - மாநில அரசின் பார்வைக்குக் கொண்டு போயிருக்கோம்" என்றவர் தொடர்ந்தார்.
"கர்நாடக அரசு, தங்கள் மாநிலப் பாசனப் பரப்பான 7 லட்சம் ஏக்கரை கடந்த 40 ஆண்டுகளில் படிப்படியாக 20 லட்சம் ஏக்கராக உயர்த்தியிருக்கிறது. 1972 ல் மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைப்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் 28.21 லட்சம் ஏக்கரும், கர்நாடகாவில் 6.81 லட்சம் ஏக்கரும், கேரளாவில் 53 ஆயிரம் ஏக்கரும் வேளாண் சாகுபடி செய்துவருகிறது. நதி நீர்ப் பங்கீடு குறித்து எங்கள் அமைப்பின் ஆலோசகரும், தமிழகப் பொதுப்பணித்துறையில் காவிரி வடிநிலக்கோட்ட கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றவருமான நடராஜன், மத்திய அரசுக்குப் பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு யோசனையை முன்வைத்தார்.
கர்நாடகத்துக்கு மொத்தம் ஏழு ஆறுகள் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. கிருஷ்ணா நதியிலிருந்து 966.44 டி.எம்.சி, காவிரியிலிருந்து 425 டி.எம்.சி, கோதாவரியிலிருந்து 49.9 டி.எம்.சி மற்றும் வடபெண்ணை, தென்பெண்ணை, பாலாறு இவற்றிலிருந்து 906 டி.எம்.சி நீர் கிடைக்கிறது. கர்நாடகாவில் மேற்கு நோக்கி ஓடும் 13 ஆறுகளைச் சேர்ந்த தண்ணீர் அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இவற்றுள் காளிநதி, சாராவதி, சக்ராநதி, நேத்ராவதி, வாராஹி, மகாதாயி உள்ளிட்ட ஆறுகள் மூலம் சுமார் 2,000 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இதில்,900 டி.எம்.சி-க்கு மேல் மிக எளிதாக தமிழகத்துக்குத் திருப்பிவிட முடியும். கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரைத் தேக்குவதற்கும், தடுப்பணைகள் கட்டுவதற்கும் அங்கே இயற்கையே பல மலைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இப்படித் தேக்கப்படும் நீரை பம்ப் செய்தோ அல்லது பாறைகளை குடைந்து, வாய்க்கால் வெட்டியோ தமிழகத்துக்குக் கொண்டு வரலாம். அத்துடன் இந்த நீரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி அணைகளுக்கும் திருப்பிவிட்டால், அந்த அணைகள் நிரம்பும்போது தண்ணீர் கிருஷ்ணாசாகர் அணைக்கு வந்து சேரும். அந்த அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி நமக்கு திறந்துவிட்டே ஆக வேண்டும். இதனால், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பது நிச்சயம்.
காவிரியும் விவசாயமும்
இந்த யோசனையை கர்நாடக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருந்தவரும், அம்மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகராக இருந்தவருமான பவானிசங்கர் உருவாக்கி, அதை செயல்படுத்த வைக்க பலமுறை வலியுறுத்தி வந்தார். ஆனால், அவருக்கு அங்கு பலத்த எதிர்ப்பு. அவரது யோசனை தமிழகத்துக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்தக் காவிரிப் பிரச்னைக்கே முற்றுப்புள்ளி வைக்கும். ஆனால், தண்ணீரை ஏன் கொடுக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே கர்நாடக அரசு இருக்கிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், கர்நாடக அரசு ராசிமணலில் 4,500 கோடி ரூபாய் செலவில்  அணை கட்ட வேண்டியதில்லை. அவர்களுக்கு தேவையான நீர் இந்தத் திட்டத்தின் மூலமே கிடைத்துவிடும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம். நேரடியாக சந்திக்க தேதி கேட்டிருக்கிறோம். நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து விளக்கி இருக்கிறோம். போதாக்குறைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன்னு பலரையும் சந்தித்து விளக்கி இருக்கிறோம். ஆனால், யாருமே இதை செயல்படுத்தத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உள்ளது என்று எந்த ஆய்வும் இல்லாமல் சொல்லி தண்ணீரைக் குறைத்து தீர்ப்பளித்துவிட்ட உச்சநீதிமன்றமும், இரண்டு மாநிலங்களின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய இந்தத் திட்டத்தை செயல்படுத்த எந்த உத்தரவையும் போடலை. இதை செயல்படுத்துவது அப்புறம் இருக்கட்டும். குறைந்தபட்சம் ஆய்வுக்குக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசின் உத்தரவுகளை பிறப்பிக்கும் அமைப்பாக உச்சநீதிமன்றம் மாறுவது, அதன்மீதான் நம்பிக்கையை குறைக்கிறது. இந்தத் திட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்த வைப்போம்" என்றார்.
 அடுத்துப் பேசிய நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் பாதிப்பு விவசாயிகள் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம்,ராமலிங்கம்
  "1980 ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, 'எந்த நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறதோ அதனை நீர்வரத்து அதிகம் இல்லாத இடங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என்ற அடிப்படையில் 'வாட்டர் டெவலப்மெண்ட் ஏஜென்சி' உருவாக்கப்பட்டது. கோதாவரி ஆற்றில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. நாகார்ஜுனசாகர் அணையை உயர்த்தியது எல்லாம் இந்தத் திட்டத்தின்படிதான். இதனால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் தங்கள் நீர் கட்டமைப்பைப் பெருக்கிக்கொண்டன. 10 டி.எம்.சி தண்ணீர் தேக்கப்படும் நீர்த்தேக்கங்களை எல்லாம் 60 டி.எம்.சி நீர் தேக்கப்படும் நீர்த்தேக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டன. ஆனால், அப்போது தமிழக அரசு மட்டும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளவில்லை. தற்போது, கர்நாடகாவிடம் வெறும் 192 டி.எம்.சி-க்காக கையேந்தும் நிலையில் இருக்கிறோம். விவசாயம் பாழானதால் தமிழ்நாட்டு அரிசிக் கடையில், ஆந்திரா பொன்னி, கர்நாடக பொன்னிதான் கிடைக்கிறது. தமிழக பொன்னி அரிசியைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அதனால், தமிழக விவசாயம் செழிக்க, மேற்கத்திய நாடுகளில் உள்ள திட்டமான நீர் மேலேற்றுத் திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு முயல வேண்டும். அதனால், கர்நாடகாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து வீணாகக் கடலில் கலக்கும் ஆறுகள் மூலம் தமிழகத்துக்கு விடிவுகாலம் ஏற்படுத்த முடியும். இந்தத் திட்டம் பற்றி மோடி கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு போயிட்டோம். கர்நாடக முதல்வர், தமிழக முதல்வர்களையும் சந்தித்து இந்தத் திட்டம் பற்றி சில விவசாய அமைப்புகள் சொல்லிவிட்டன. ஆனால், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத்தான் அவர்கள் முயற்சி செய்யவில்லை. ஒருவேளை காவிரி பிரச்னையைத் தீர்த்துவிட்டால், அரசியல் பண்ண விவகாரம் இல்லாமல் போய்விடும் என்று அஞ்சுகிறார்களோ என்னவோ. இருந்தாலும் காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தரக்கூடிய இந்தத் திட்டத்தை செயல்படுத்த வைக்கும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை" என்றார் அழுத்தமாக!.

கருத்துகள் இல்லை: