வியாழன், 12 ஏப்ரல், 2018

காவல்துறை மீது தாக்குதல்: சீமான் கைது!

காவல்துறை மீது தாக்குதல்: சீமான் கைது!
minnamalam :ஐ.பி.எல். போராட்டக் களத்தில் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று கைது செய்து ரிமாண்ட் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
நேற்று முன் தினம் ஐபிஎல் கிரிக்கெட்டை எதிர்த்து சென்னையில் நடந்த போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினரைத் தாக்கியதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில், ‘சீருடை அணிந்த காவலர்களை தாக்குவதுதான் வன்முறையின் உச்சம். இது பேராபத்து’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஜினி பகிர்ந்த அந்த வீடியோவில் சீமானும் இருந்தார். இதுபற்றி சலசலப்புகள் எழுந்த நிலையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘நான் அந்த தாக்குதலை விலக்கிவிடவே அங்கே சென்றேன்’ என்று விளக்கம் அளித்தார் சீமான்.

ஐபிஎல் போராட்டக் களத்தில் கலந்துகொண்ட சுமார் 800 பேர் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சீமான் மீது மட்டும் கொலை முயற்சி, கலவரத்தை ஏற்படுத்துதல், பயங்கர ஆயுதங்களோடு தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சீமானை உடனடியாகக் கைது செய்யலாம் என்று காவல்துறை வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டபோது, ‘முதலில் பிரதமர் சென்னை வருகை நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்வோம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று காவல்துறை மேலிடம் சொல்லிவிட்டது.
இன்று பிரதமர் வருகையை எதிர்த்து சென்னை விமான நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் சீமான். எதுவும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம்போல் அவரைக் கைது செய்து பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர் போலீசார். கொஞ்ச நேரத்தில் விமான நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய பாரதிராஜா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்டோரையும் அதே மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இன்று மாலை 5 மணிக்குப் பிறகு பாரதிராஜா உள்ளிட்டோரிடம், ‘சார் நீங்க வெளியே போகலாம்’ என்று சொன்ன போலீஸார் சீமானையும் அவருடன் கைதான சிலரை மட்டும் வெளியே விட மறுத்துவிட்டனர். ஏன் என்று பாரதிராஜா கேட்க, ‘நீங்க போங்க சார். அவர் மேல இருக்குற கேஸ் உங்க மேல இல்லை’ என்று பதில் வந்திருக்கிறது.
இதற்குள் மண்டபத்தில் இருந்து, ‘சீமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப் போகிறார்கள்’ என்று தகவல் பரவியது. இன்று மாலை நாம் தமிழர் கட்சியினர் மண்டபத்தின் முன் கூடினர். அவர்களுடன் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் திரண்டு, ‘சீமானை வெளியே விடுங்கள்’ என்று போராடினர். சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த போலீசார் மண்டபத்துக்கு வெளியே நின்றவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்படியும் அகல மறுத்தவர்களை கைது செய்தனர்.
இன்று மாலை 6.45 வரை சீமானை காவல்துறையினர் மண்டபத்தில் இருந்து விடுதலை செய்யவில்லை. அதேநேரம் பாரதிராஜாவும் மற்றவர்களும் சீமானை வெளியே விடாவிட்டால் எங்களையும் விடாதீர்கள் என்று மண்டபத்துக்குள்ளேயே இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: