திங்கள், 9 ஏப்ரல், 2018

சாதிக்கு ஒரு சட்டம் தேவையா?

சிறப்பு நேர்காணல்: சாதிக்கு ஒரு சட்டம் தேவையா?மின்னம்பலம்: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல்
சந்திப்பு: த.நீதிராஜன் (பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு), ஆந்திரப் பிரதேசத்தில் தனது பணியைத் தொடங்கியவர் (வயது 86). மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், நல்வாழ்வு அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றி 1990இல் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், ஆந்திர மாநில அரசின் சட்ட ஆலோசகர் மற்றும் இந்திய அரசின் கொள்கை உருவாக்கக் குழுக்களின் தலைவர் என அரசாங்கப் பொறுப்புகளில் தொடர்கிறார். நாடு தழுவிய அளவில் உள்ள மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் ஆலோசகராகப் பல பொறுப்புகளிலும் செயல்பட்டுவருகிறார்.
இந்தியச் சமுகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களான தலித்துகள், பழங்குடிகள், நாடோடி ஆதிவாசிகள், குற்றப்பரம்பரை இழிவு சுமத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையோர் உள்ளிட்டோரின் நலனுக்காகப் பல திட்டங்களையும் சட்டங்களையும் உருவாக்கியவர் . குறிப்பாக, தலித் மக்களுக்கான சிறப்புக் கூறு திட்டத்தை உருவாக்கியவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியவர். பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீட்டை அமலாக்கிய மண்டல் கமிஷனின் அறிக்கை செயல்பாட்டுக்கு வருவதிலும் முக்கியப் பங்காற்றியவர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் இன்றைய சூழலில் அவருடைய நேர்காணலைத் தொடராக வெளியிடுகிறோம். அவரோடு உரையாடி இந்த நேர்காணலைத் தொகுத்துள்ள த.நீதிராஜன், இதழாளர், சமூகச் செயற்பாட்டாளர். பி.எஸ்.கிருஷ்ணனின் ‘சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்’ என்னும் நூலைத் தமிழாக்கம் செய்தவர். வெவ்வேறு சமயங்களில் கிருஷ்ணனுடன் நீதிராஜன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இந்தத் தொடர் – ஆசிரியர்)

சாதிக்கு ஒரு சட்டம் என்ற நிலைமை இந்த நவீனகாலத்திலும் தேவையா?
பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் சாதிக்கு ஒரு சட்டம்தான் இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான். சுதந்திர இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் அறிவிக்கப்பட்டு விட்டதுதான். அது பெயரளவுக்குத்தான். ஆனால், மக்களின் வாழ்நிலைகள் இந்தியாவில் பல படிநிலைகளாக உள்ளன. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவிகிதம் முதல் முதியோர்களின் மரணங்கள் வரை சாதி ரீதியான ஏற்றதாழ்வுகள் இந்தியச் சமூகத்தில் நீடிக்கின்றன.
காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் கட்டளை. அதை அமலாக்குவதற்காகச் சில சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதனால் சாதிக்கு ஒரு சட்டம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு உயர் சாதிகளுக்கு ஆதரவாகச் சாதிக்கு ஒரு சட்டம் இருந்தது. தற்போது ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாகச் சட்டம் உள்ளது.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பது மக்களின் மொழி. உயர் சாதிகளுக்கு ஆதரவாகக் காலங்காலமாக இருந்த சட்டத்தால் ஏற்பட்ட சமூக விளைவுகளை ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவான சட்டங்கள் மூலம்தான் மாற்ற முடியும்.

வன்கொடுமைகள் நடப்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
இந்தியாவின் பருவகாலம் என்பது ஒரு வருடத்தின் குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட காலகட்டம்தான். இதுதான் இந்திய விவசாயத்துக்கான சூழல். இந்தப் பருவத்தில், ஒரு குறுகிய காலப்பகுதியில் அதிகமான உழைப்பு விவசாயத்துக்காகத் தேவைப்படும். அதனால் ஒரு பெரிய உழைப்பாளர் கூட்டத்தைச் சேமிப்பு பட்டாளமாக, வைத்திருக்க வேண்டிய தேவை இந்திய விவசாயத்துக்கு இருக்கிறது. இந்தியச் சாதிய சமூக அமைப்பு முறையின் வடிவத்துக்கும் நோக்கத்துக்கும் இந்த நிலை மிக மிக முக்கியமானது.
சமூகப் பொருளாதார ரீதியாகச் சிறைப்படுத்தப்பட்டிருக்கிற நிலை இது. இதிலிருந்து, தப்பிப்பதற்கு வழியே இல்லாத நிலையில் பட்டியல் சாதியினரை அப்படியே வைத்திருப்பதை இந்தியச் சாதி சமூகத்தின் அமைப்பு முறை உறுதி செய்கிறது. இத்தகைய நோக்கத்துக்காகக் கட்டாயப்படுத்தக்கூடிய ஒரு செயல்பாட்டு அமைப்பாகச் சாதி சமூகத்தின் அமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது. அதைக் கீழ்வருமாறு விளக்கலாம்.
சாதி சமூகத்தின் அமைப்பு முறையை ஒட்டுமொத்தமாக முழுமையாக எடுத்துக்கொள்வோம். தீண்டாமை என்பது சாதி சமூகத்தின் ஒரு கருவி, பட்டியல் சாதியினருக்கு எதிராகப் பல நூற்றாண்டுகளாகக் கடும் பாதிப்பை உருவாக்கிக்கொண்டு இன்றுவரை அது தொடர்கிறது.
விவசாயத்துக்கும் இன்ன பிற வேலைகளுக்கும் தேவையான உழைப்பை வழங்குபவர்களாகத் தீண்டப்படாத சாதிகளைக் கட்டாயப்படுத்தி முழுக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் பொருத்தமான கருவியாக, தீண்டாமையுடன் கூடிய சாதி முறை பல நூற்றாண்டுகளாக இயங்கி வருகிறது.
சாதி முறையை ஒழுங்குபடுத்துகிற கருவி என்ற முறையில் தீண்டாமையும் அதன் திறனும் ஓரளவு பலவீனமடைந்துள்ளன. இந்த நவீனக் காலத்தின் பின்னணியில் சாதிமுறையின் தத்துவத்தையும், அதற்கு உதவியாக இருக்கக்கூடிய உளவியலையும் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கின்றனர். அப்போதுதான் வன்கொடுமைகள் எனும் ஆயுதம் கையில் எடுக்கப்படுகிறது.
கடந்த 150 ஆண்டுகளாகச் சீர்திருத்தவாதிகள், தேசியவாதிகள், புரட்சிகர இயக்கங்கள் மற்றும் அம்பேத்காரிய, பெரியாரிய அமைப்புகள் தலித்துகளிடம் புத்துணர்ச்சியான விழிப்புணர்வைப் படிப்படியாகவும், உறுதிமிக்க முறையிலும் ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்கத்தின் காரணமாக இந்தியச் சாதி அமைப்பு முறையின் ஒழுங்கில் தாங்கள் வைக்கப்பட்டிருக்கிற நிலையை ஏற்கத் தலித்துகள் மறுக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு பரிணாமம் உண்டு. முதுகை ஒடிக்கும் அளவு சுமைகளைச் சுமக்கும் குத்தகை விவசாயிகளுக்காகவும், விவசாய வேலைகளுக்கான கூலிகளை உயர்த்துவதற்காகவும் நிலச் சீர்திருத்த இயக்கத்தினால் தெலங்கானா, கேரளத்தின் புன்னப்புரா வயலார், வங்கத்தின் தெபாகா இயக்கங்கள், தமிழகத்தின் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த விவசாயத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றில் இடதுசாரி இயக்கங்களைச் சார்ந்த ஏராளமான ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இதனால் இந்தப் பிரச்சினைக்கு வர்க்கப் போராட்டப் பரிணாமமும் ஏற்பட்டது.
உயர் சாதிகளிலிருந்தும் சமீப காலமாக சொந்த நிலம் வைத்திருக்கும் நிலைக்கு உயர்ந்துள்ள இடைநிலைச் சாதிகளிலிருந்தும்கூட நாட்டின் பல பகுதிகளில் உருவான ஆதிக்க வர்க்கங்களுக்குத் தலித்துகள் மீதான தங்களது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளப் புதிய கருவிகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இப்படித்தான் வன்கொடுமைகள் என்பவை (19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் முன் பகுதியிலும்கூட முன்னதாகவே அறியப்பட்டு இருந்தாலும்), 1950களில் மிகவும் விரிவான முறையில் முதன்முதலாகத் தோன்றின. தலித்துகளின் எதிர்ப்பு வளரும்போது வெறித்தனமான வன்கொடுமைகளும் வேகமாக வளர்ந்தன.
ஆங்கிலேயர் ஆட்சியில் வன்கொடுமைகள் இல்லையா?
தீண்டப்படாதவர்களால் தீண்டாமையின் ஒழுங்கு, சவாலுக்கு இழுக்கப்படும்போது, நவீன காலத்தில் நடந்த வன்கொடுமைகளை இந்தியாவின் பல பகுதிகளில் 19ஆம் நூற்றாண்டு வரை நம்மில் காண முடியும்.
ஆங்கிலேயர் காலத்தில் 1919இல் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய இந்தியாவில் ஒரு கமிட்டி சுற்றுப்பயணம் செய்தது.
தீண்டப்படாதவர்களுக்கு எதிராக அந்த நாள்களில் நடந்த பல்வேறு வன்கொடுமைகளை அது அறிந்தது. ஆனால், அவற்றுக்குச் சாட்சியம் அளிக்க எவரும் முன்வரவில்லை. ஆதலால், அவை எல்லாம் உலகத்துக்குத் தெரியாமலும் தண்டிக்கப்படாமலும் போய்விட்டன.
சாதியப் பயங்கரத்துக்கு எதிராக முன்வந்து சாட்சியம் அளிப்பது என்பது இன்றும் இயலாத நிலைதான். கர்நாடகாவில் காம்பள பள்ளி என்னுமிடத்தில் நடந்த வன்கொடுமையின் தொடர்பில் இது தெளிவாக வெளிப்பட்டது. அந்த வழக்கின் முக்கியமான சாட்சி தலைகீழாகப் பல்டி அடித்துவிட்டார். அதன் பிறகு அவர், “எனக்குப் பாதுகாப்பு தரப்பட்டால் நடந்த படுகொலை சம்மந்தமான எல்லா உண்மைகளையும் சொல்ல முடியும்” என்றார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு சைமன் கமிஷன் வந்தது. அப்போது பம்பாய் மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக டாக்டர் அம்பேத்கர் இருந்தார். ‘பகிஷ்கரித ஹிடகாரினி’ எனும் அமைப்பை நடத்தினார். அதன் சார்பில் 23.05.1928 அன்று ஓர் அறிக்கையை சைமன் கமிஷனிடம் அவர் அளித்தார். அதில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பலாய் எனும் தீண்டப்படாத சாதியினர் மீது பெருங்கூட்டமாக வந்து நடத்தப்பட்ட தாக்குதல், குடிசைகளைக் கொளுத்தியது, கொலாபா மாவட்டம், மகம் எனுமிடத்தில் உள்ள சவுகார் குளத்தில் குடிநீர் எடுக்க உரிமை கோரிய தலித்துகள் மீது தொடுக்கப்பட்ட பெரிய அளவிலான தாக்குதல்கள் உள்ளிட்டவை அந்த அறிக்கையில் இருந்தன.
சுதந்திரத்துக்குப் பிறகான வன்கொடுமைச் சம்பவங்கள் பற்றி...
(நேர்காணலின் தொடர்ச்சி நாளை...)

கருத்துகள் இல்லை: