சனி, 14 ஏப்ரல், 2018

பிரகாஷ்ராஜ் காரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய பாஜகவினர்!


மின்னம்பலம் :பெங்களூரு குல்பர்கா நகரில் நேற்றிரவு நடிகர் பிரகாஷ்ராஜின் காரை வழிமறித்து பாஜகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பாஜக அரசு கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கர்நாடகத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக கர்நாடகத்தில் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் கர்நாடகாவில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ்ராஜ், "தான் எந்த கட்சியை சாராத நிலையிலும். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வகுப்புவாதத்தை வளர்த்து வரும் மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறேன்" என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பெங்களூரு குல்பர்கா நகரில் பிரகாஷ்ராஜ் சென்றுகொண்டிருந்த காரை முற்றுகையிட்ட பாஜகவினர் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், "இந்த நிகழ்வு நகைச்சுவை தொகுப்பை போல உள்ளது. அவர்களுக்கு பேச்சுவார்த்தையின் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் என்னை பயமுறுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் என்னை வலிமைப்படுத்துகிறது " என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: