ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்ததில் நீதிமன்ற முறைகேடுகள .. உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் குற்றச்சாட்டு

சொத்து குவிப்பு வழக்குதீர்ப்பு மேல் முறையீட்டை ஒரு வருடம் தாமதிக்காமல் வந்திருந்தால் ஜெயலலிதாவும் தண்டனை அனுபவித்திருப்பார் _செல்லமேஸ்வரர்..
தினத்தந்தி: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு பற்றி சுப்ரீம்
கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக அப்போது நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீதிபதி செல்லமேஸ்வர், பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்காக வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து நீதிபதி செல்லமேஸ்வர் கூறியதாவது:- எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது. எதை வைத்து இதை நான் கூறுகிறேன் என்றால் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு, இளைய நீதிபதிகளை கொண்ட அமர்வு. இதற்கு அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அந்த அமர்வே விசாரித்தது. ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டுக்கு பிறகே அந்த அமர்வு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு என்ன பயன் தரும்?


விசாரணைக்காக வழக்கு களை அமர்வுகளுக்கு ஒதுக்குவது குறித்த அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருப்பதால், அவர் அந்த அதிகாரத்தை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். விருப்பத்தின் அடிப்படையில் வழக்குகள் ஒதுக்கப்பட்டால், அது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை பாதிப்பதாக அமைந்து விடும்.

தலைமை நீதிபதி மீது பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது பற்றியும், பின்னர் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது பற்றியும் நீதிபதி செல்லமேஸ்வரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், நமது நீதித்துறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வது அவசியம் என்றும், நீதித்துறையில் எழுப்பப்படும் கேள்விகளுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் கண்டன தீர்மானம் கொண்டு வருவது தீர்வாக அமையாது என்றும் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், வருகிற ஜூன் 22-ந் தேதி தான் ஓய்வுபெற இருப்பதாகவும், அதன்பிறகு அரசாங்கத்திடம் இருந்து எந்த பதவியையும் தான் எதிர்பார்க்கப்போவது இல்லை என்றும் கூறினார்

கருத்துகள் இல்லை: