வெள்ளி, 13 ஏப்ரல், 2018

‘எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது தேர்தலுக்காக அல்ல; மக்கள் பிரச்சினைகளுக்காகவே ...

தேர்தலுக்காக அல்ல; மக்களுக்காக இணைந்துள்ளோம்!மின்னபலம்: ‘எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது தேர்தல் கூட்டணிக்காக அல்ல; மக்கள் பிரச்சினைகளுக்காகவே ஒருங்கிணைந்துள்ளோம்’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முன்னெடுத்த காவிரி உரிமை மீட்புப் பயணம் கடந்த 7ஆம் தேதி திருச்சி மாவட்டம் முக்கொம்பில் தொடங்கியது. இரண்டாவது குழுவின் பயணம் 9ஆம் தேதி அரியலூரிலிருந்து தொடங்கியது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நடை பயணம் செய்த இரண்டு குழுக்களும் நேற்று கடலூரில் தங்களது பயணத்தை நிறைவு செய்தன.
இதைத் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் நிறைவுப் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்றது. இதில் கி.வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
திருமாவளவன் பேசுகையில், “தமிழகத்துக்குக் காவிரி நீர் கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுகிறார் பிரதமர் நரேந்திரமோடி. தமிழகத்தின் முதல் எதிரி பிரதமர் நரேந்திர மோடிதான். கர்நாடகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக நம்மை அவர் அடமானம் வைத்திருக்கிறார். இன்று தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க முடியாமல் ஹெலிகாப்டரில் வந்து சென்றுள்ளார் மோடி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அவர் இனி தமிழகத்தில் என்றைக்கும் காலடி எடுத்துவைக்க முடியாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.

பயணத்தின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நினைவுகூர்ந்தார். அதைத் தொடர்ந்து பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “காவிரிக்காக எதிர்க்கட்சிகள் சேர்ந்திருப்பது அரசியல்தான். இதிலென்ன தவறு?” என்று கேள்வி எழுப்பினார். “எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததால்தான் பிரதமர் மோடியால் சென்னையில் கால் வைக்க முடியவில்லை” என்றும் பேசினார்.
“மத்தியில் மோடிக் கூட்டம் ஆட்சிக்கு வரக் கூடாது. தமிழ்நாட்டில் இந்த எடுபிடிக் கூட்டம் ஆட்சிக்கு வரக் கூடாது, வரவும் முடியாது” என்று குறிப்பிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஸ்டாலின் எங்கள் வீட்டுப் பிள்ளை மாதிரி. அவர் என்னுடைய தம்பி. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர். இதை நான் சொல்லாமல் வேறு யார் சொல்வது?” என்று குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாகப் பேசவந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “பிரதமர் இன்று ஆகாயம் வழியாக வந்துவிட்டு ஆகாயம் வழியாகவே சென்றிருக்கிறார். அவரை விமான நிலையத்தில் சென்று வரவேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி மனம் வந்தது? தவிர்த்திருக்க வேண்டாமா? பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கறுப்புக் கொடி காட்டினால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதுபோல பச்சை கலரில் சால்வை அணிவித்து பிரதமரை வரவேற்கின்றனர். அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வழியனுப்பக் கூடிய கடைசி நேரத்தில் ஒரு மனுவைக் கொடுத்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
“பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். இதுவரை சந்திக்கவில்லை. பிரதமரைச் சந்திக்க முதல்வர் நேரம் கேட்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். அவர் கூறி இரண்டு நாள்களாகியும் இதை முதல்வர் மறுக்கவில்லை. அப்படியென்றால் இவர்கள் பிரதமரை சந்திக்கவே நேரம் கேட்கவில்லை. மத்திய அமைச்சரின் தகவலுக்கு மறுப்பு சொல்லக்கூட வக்கில்லாத முதல்வர் பதவியில் இருப்பது நியாயம்தானா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
“நாளை ஆளுநரைச் சந்திக்க உள்ளோம். ஆளுநரைச் சந்திக்க காரில் பேரணி போகலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால், அதில் சிறு மாற்றம். கார் பேரணியால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படலாம் என்று என்னிடம் பலர் போனில் கூறினர். இதையடுத்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசி பேரணியில் மாற்றம் செய்தோம். இன்று இரவே நாங்கள் சென்னை செல்கிறோம். நாளை (இன்று) அண்ணா அறிவாலயத்திலே ஒன்றுகூடி அதன்பிறகு ஆளுநரைச் சந்திக்க உள்ளோம். எனவே, எங்களுடன் யாரும் காரில் பேரணியாக வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றும் வேண்டுகோள் விடுத்தார். “எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம் என்றால், இது தேர்தலுக்காக அமைந்துள்ள கூட்டணி அல்ல; மக்கள் பிரச்சினைகளுக்காக ஒருங்கிணைந்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “காவிரி உரிமை மீட்புப் பயணத்துக்கு முக்கொம்பு செல்வதற்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கச் சென்றேன். அவரிடம் விவரத்தைக் கூறியபோது, என் கையைப் பிடித்து அழுத்தி புன்முறுவல் பூத்தார். தலையை அசைத்தார். அவரால் பேச முடியாது என்று உங்களுக்குத் தெரியும். அந்த நிலையில் நான் அவரிடம் சென்று அப்பா, நான் பயணம் செல்கிறேன் என்னை வாழ்த்துங்கள் என்று கூறினேன். உடல் நலிவுற்றிருக்கும் இந்த நேரத்தில் அவரால் இயல்பாகக் கையைத் தூக்க இயலாது. யாராவது உதவியாக வேண்டும். ஆனால் நான் வாழ்த்துங்கள் என்று கூறியவுடன் தானாக அவர் கை என் தலைக்கு சென்றது.
திமுக தலைவர் கருணாநிதி என்னை மட்டும் வாழ்த்தியதாக நினைக்க வேண்டாம். காவிரிக்காகப் போராடிய அத்தனை பேரையும் அவர் வாழ்த்தியுள்ளார். அவரின் வாழ்த்தோடு புறப்பட்டோம். அவருடைய வாழ்த்தோடு நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்” என்றும் ஸ்டாலின் உறுதியாகப் பேசினார்.

கருத்துகள் இல்லை: