செவ்வாய், 12 டிசம்பர், 2017

ஸ்டாலின்: கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்! ஆர் கே நகரில் உருவான கூட்டணி டெல்லி வரை ....

மு.க.ஸ்டாலின்: கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்!மின்னம்பலம் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக அமைந்திருக்கும் இந்தக் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என்று திமுக சார்பில் நடத்தப்பட்ட பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஆர்.கே.நகரில் நேற்று (டிசம்பர் 11) திமுக சார்பில் நடத்தப்பட்ட பரப்புரைக் கூட்டத்தில் அதன் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, உரிமையை இழந்துகொண்டிருக்கிற தமிழகத்தைக் காப்பாற்ற, நடைபெற்றுவரும் குதிரைபேர ஆட்சிக்கு முடிவு கட்டவே தமிழகத்திலுள்ள கட்சித்தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“நமக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. அந்தக் காயத்திலிருந்து வடிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டுத் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் இழைக்கும் கொடுமைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க, ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். இது ஒரு தொடக்கம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறவிருக்கிறது என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த அணி தொடர வேண்டும். மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர்கள் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள மக்கள் அனைவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இது எதிர்காலத்திலும் தொடரும்.
டெல்லி பாஜக அமைத்திருக்கும் ஆட்சி மேடையில் ஓபிஎஸ்ஸும் ஈபிஏஸ்ஸும் அமர்ந்திருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு எதிராக அமைந்திருக்கிற மேடை அது. அந்த மேடையில் ஏறும் வாய்ப்பு கிடைக்காமல் தொப்பியை இழந்து நிற்கிறார் ஒருவர். இன்று தமிழகம் சூறையாடப்பட்டதற்கு அந்த கூட்டாளியும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
எட்டு மாதங்களுக்கு முன்பு வரை, இவர்கள் ஒன்றாக இருந்தவர்கள்தான். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த நேரத்தில், இந்த கூட்டாளிகள் தானே உடன் இருந்தார்கள். அதை மறுத்திட முடியுமா? அம்மா உடற்பயிற்சி செய்கிறார்; இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என்று சொன்னார்கள்.
இப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா மரணத்தை மூடி மறைத்ததில், ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா ஆகியோர் மூன்று குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டிருக்கின்றனர்.
டிசம்பர் 5 முதல்வர் மறைந்தார் என்று சொன்னவுடன், இரவோடு இரவாக முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்தார் ஓபிஎஸ். 62 நாள்கள் ஆட்சியில் இருந்தபோது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று அவர் சொல்லவே இல்லை. மாறாக, ரிச்சர்ட் பீலேவை அழைத்துவந்து முறையாக ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை நடந்தது என்று சொல்ல வைத்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தை மறைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும்தான். டெல்லியிலேயே கட்டப்பஞ்சாயத்து நடந்து, அதன்பின் தமிழக ஆளுநரே இருவரையும் அழைத்துக் கைகளை கோக்க வைத்தார். 17.08.2017 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஜெ. மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், சொன்னபடி நீதிபதியை நியமிக்கவில்லை.
அது ஏன் என்று ஓபிஎஸ் கேட்கவில்லை. காரணம், ஜெயலலிதாவை விட பதவிதான் அவருக்கு முக்கியம். எல்லா கட்சி தலைவர்களும் விசாரணை கமிஷன் எங்கே என்று கேட்டோம். 40 நாள்கள் கழித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமர்த்தப்பட்டது.
ஆனாலும், அந்த விசாரணை கமிஷனால் லண்டனில் இருக்கும் மருத்துவரையோ, எய்ம்ஸ் மருத்துவர்களையோ, மத்திய அமைச்சர்களையோ, பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகரையோ சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடியுமா? இது வெறும் கண் துடைப்பு நாடகம்தான்.
இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தல் ஆர்.கே.நகரில்தான் வந்திருக்கிறது. 12.04.2017 அன்று இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, அனைவரும். பிரசாரத்தில் ஈடுபட்டனர். திடீரென்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஓர் அமைச்சரின் வீட்டில் 89 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரம் வருமான வரித்துறைக்குக் கிடைத்திருப்பதாகச் செய்தி வெளியானது. முதலைமைச்சர் எடப்பாடியைத் தொடர்ந்து 11 அமைச்சர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள்.
இப்போது, நாங்கள் ஒன்றுசேர்வதற்காகத்தான் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றிருக்கிறார் ஒருவர். இதைத் தேர்தல் ஆணையம் விளக்கிடுமா?
நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்பாபு, ஆர்.கே.நகர் தாய்மார்கள் கையில் ஒரு விண்ணப்பப் படிவத்தைத் தந்திருக்கிறார். ஸ்கூட்டி வேண்டும் என்பவர்கள், அதில் எழுதிக்கொடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் இது,
வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்காக, இந்த விண்ணப்பப் படிவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொடுக்கிறார். தேர்தல் ஆணையம் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கும் சூழல் உண்டாகும். குட்டிக்கரணம் அடித்தாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸால் டெபாசிட்கூட வாங்க முடியாது.
இன்னும் கொஞ்ச நாள்களில் ரேஷன் கடைகளே இல்லை எனும் அறிவிப்பு வரலாம். கன்னியாகுமரியில் மீனவ நண்பர்களின் குடும்பங்கள் பரிதவிக்கிறது. சாலையில் அமர்ந்து தாய்மார்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஓகி புயல் வரப்போகிறது என்று ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்த நிலையிலும், தமிழக அரசு அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. ஆனால், ஒவ்வொரு வாரமும் இரண்டு ஊர்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. ஆனால், எந்த சூழலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் நடத்துகிறீர்கள்? நெடுவாசலிலோ, கதிராமங்கலத்திலோ ஆறுதல் சொல்ல முதல்வர் ஈபிஎஸ் போனதுண்டா?
ஆளுநருக்கு மாவட்டம் மாவட்டமாக செல்லும் உரிமையை யார் கொடுத்தது? இனி எந்த இடத்துக்கு ஆளுநர் சென்றாலும், திமுக போராட்டம் நடத்தும் என்று அறிவித்தேன். முன்பு ரூ.89 கோடி, குட்கா விவகாரத்தில் ரூ.40 கோடி என அடுத்தடுத்து வருமானவரித் துறை பணத்தைக் கைப்பற்றியது. இப்போது ஓபிஎஸ்ஸின் வண்டவாளம். சேகர் ரெட்டி மூலமாக சிபிஐயிடம் சிக்கியிருக்கிறது.
இந்தக் கொடுமையில் இருக்கிற தமிழகத்துக்கு விடிவு காலத்தை உருவாக்க, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமையப்போகிறது. அதனால் வழக்கறிஞர் மருதுகணேஷுக்கு வாக்களித்து திமுகவுக்கு வெற்றியைத் தர வேண்டும். திமுகவின் 90ஆவது சட்டமன்ற உறுப்பினராக மருதுகணேஷ் ஆகிட வேண்டும். கொளத்தூர் என் செல்லப்பிள்ளை; ஆர்.கே.நகர் என் வளர்ப்புப்பிள்ளை” என்று தனது உரையில் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை: