ஞாயிறு, 10 டிசம்பர், 2017

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடாம் .. தோல்வி பயத்தில் மோடியின் பாகிஸ்தான் பூச்சாண்டி

தினமணி :குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக தொடங்கி உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி பேசிவருகிறார்கள். முதல்கட்ட பிரசாரம் முடியும்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடியை மணிசங்கர் அண்மையில் விமர்சித்துப் பேசியிருந்தார்.& அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை இழிவானவர் என்று தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்த விமர்சனத்தை சுட்டிக்காட்டி, குஜராத்தியரான தம்மை காங்கிரஸ் மிகவும் மோசமாக விமர்சிப்பதாகவும், ஆதலால் குஜராத் மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகவும், காங்கிரஸூக்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மணிசங்கர் அய்யரின் கருத்துகளுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப, தமது கருத்துகளுக்காக மணிசங்கர் அய்யர் கடந்த வியாழக்கிழமை வருத்தம் தெரிவித்தார்.
எனினும், காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் அய்யர் வியாழக்கிழமை இடை நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் அடிப்படை உரிமை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் அவரிடம் பறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. மணிசங்கர் அய்யரும் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். 
அதன்பின்னரும் நடைபெற்று இரண்டாம் கட்ட பிரசார பொதுக்கூட்டங்களில் மணிசங்கர் அய்யர் பேச்சு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் பாஜகவினர்.  
மறுபுறம் பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர குஜராத்திற்காக பேசவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது என்ற புதிய குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தி உள்ளார். 
குஜராத் மாநிலம் பாலன்பூரில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி சர்தார் அர்ஷாத் ரபிக், அகமது படேலை குஜராத் முதல்வராக்க வேண்டும் என விரும்புகிறார்? என கேள்வி எழுப்பி உள்ளார். 
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசிய பின்னர் மணிசங்கர் அய்யர் என்னை கீழ்தரமாக விமர்சனம் செய்கிறார். மணிசங்கர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்ததாக மீடியா தகவல்கள் வெளியாகி உள்ளது. 
பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மணிசங்கர் அய்யர் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டம் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக நடந்துள்ளது. அதற்கு மறுநாள்தான் மணிசங்கர் அய்யர் என்னை ஒரு "நீச்" என மோசமாக விமர்சனம் செய்தார் என்று குற்றம்சாட்டி உள்ளார். 
ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவம் குஜராத் தேர்தலில் தலையிடுகிறது, மற்றொருபுறம் பாகிஸ்தான் தலைவர்கள் மணிசங்கர் அய்யருடன் கூட்டம் நடத்துகிறார்கள். அதன்பின்னர் குஜராத் மக்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் உங்களுக்கு சந்தேகத்தை எழுப்பவில்லையா? என்று மோடி கேட்டார். இதற்கான சரியான பதிலை மக்களாகிய நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். 
வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் பனஸ்கந்த மாவட்டம் உள்ளிட்ட இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 14 ம் தேதி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: