வெள்ளி, 15 டிசம்பர், 2017

ஜிஷா கொலை வழக்கில் அஸ்ஸாம் இளைஞருக்கு தூக்குத்தண்டனை! எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு!

விகடன் :கேரள மாணவி ஜிஷா, பாலியல் வன்கொடுமைசெய்து கொல்லப்பட்ட வழக்கில், அஸ்ஸாம் இளைஞர் அமீருல் இஸ்லாமுக்கு தூக்குத்தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரலில் கொலைசெய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். ஜிஷா வழக்கை விசாரிக்க ஏ.டி.ஜி.பி சந்தியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் விசாரணையில் அஸ்ஸாம் இளைஞர் அமீருல் இஸ்லாம் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அவர், கடந்த ஜூன் 16-ல் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்துவந்த நீதிபதி அனில் குமார், அமீருல் இஸ்லாம் குற்றவாளி என்று நேற்று ">தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமீருல் இஸ்லாமுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: