புதன், 13 டிசம்பர், 2017

கரை ஒதுங்கிய மீனவர் உடல்கள் அடையாளம் காணமுடியாது சிதைந்துள்ளது ,, டி என் ஏ சோதனை செய்ய ...

மின்னம்பலம :ஓகி புயலில் இறந்து கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை டி.என்.ஏ. சோதனைக்குப் பின்னரும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில் ஓகி புயல் உருவானது. இதனால் கன்னியாகுமரியிலும் கேரளாவிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. கடலில் மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமாகியுள்ளனர். புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இதுவரை கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.

கடந்த 9ஆம் தேதி வரை கேரளக் கடல் பகுதியில் 34 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. இவற்றில் 3 உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டன. மீதமுள்ள 31 உடல்களும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனை, எர்ணாகுளம் அரசு மருத்துவமனை, கொல்லம் அரசு மருத்துவமனை, திருச்சூர் அரசு மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாததால், டி.என்.ஏ. சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு இறந்த மீனவர்கள் உடல் மற்றும் அதற்கு உரிமை கோரியவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. இதில் 12 மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மீதமுள்ள 19 மீனவர்களின் உடலில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டபோதிலும் அடையாளம் காண முடியவில்லை. இதனால் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாததால், அங்குள்ள தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கேரள அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கேரளாவில் ஓகி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: