திங்கள், 11 டிசம்பர், 2017

நலிந்து கொண்டுவரும் நெசவு தொழில் ...

tamilthehindu :பட்டுப் புடவை என்றாலே காஞ்சிபுரம் நினைவுக்கு வரக் காரணமாக அமைந்த நெசவுத் தொழில் நலிவடையத் தொடங்கிவிட்டது. ஆயிரக்கணக்கில் இத்தொழிலில் ஈடுபட்ட பல பெண்கள் தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் பணியாளர்களாக மாறியுள்ளனர் அல்லது எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.
“நான் கைத்தறி நெசவுத் தொழில்தான் செய்து வந்தேன். குறைந்த அளவே வருமானம் கிடைத்தது. எங்கள் வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இடப் பற்றாக்குறை, மழை நேரத்தில் வீடுகள் ஒழுகுவதால் தறியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை. எனவே, நான் இந்த நெசவுத் தொழிலை விட்டுவிட்டு உணவகம் ஒன்றில் வேலைக்குச் சென்றுவிட்டேன்” என்கிறார் காஞ்சிபுரம் திருப்பக்கூடல் தெருவில் வசிக்கும் யசோதா.
இதே பகுதியைச் சேர்ந்த சுந்தராம்பாள், “நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெசவுத் தொழிலைச் செய்துவந்தேன். போதிய வருமானம் இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அத்தொழிலை விட்டுவிட்டேன். வேறு எங்கும் வேலைக்குச் செல்லவில்லை” என்றார்.
இப்படிப் பாரம்பரியமாகச் செய்துவந்த நெசவுத் தொழிலைக் கைவிட நேர்ந்தவர்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் என்ன? தீர்வு ஏதாவது இருக்கிறதா?
பெண்கள் அதிகமாக ஈடுபட்ட தொழில்
காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவைகள் புகழ்பெற்றதில் பெண் நெசவாளர்களின் பங்கு மிகப் பெரியது.
காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் பயன்படுத்தப்படும் ஜரிகைகள் தரம்மிக்கவை. பெரும்பாலான காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் இருபுறமும் ஜரிகை பார்டர் இருக்கும். சேலை, முந்தி ஆகியவற்றைத் தனித் தனியே நெய்து இவற்றைத் திறம்படச் சேர்ப்பர். இவ்வாறு தனிச் சிறப்புடன் நெய்யப்படும் பட்டுச் சேலைகளுக்குப் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டனர். விவசாயத்துக்கு அடுத்து, பெண்கள் அதிகம் ஈடுபட்ட தொழிலாக நெசவு இருந்தது. தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வந்து பட்டுச் சேலைகளை வாங்கியதால் லாபகரமான தொழிலாகவே இருந்தது.

பட்டுச் சேலைகள் நெய்யும் முன் நூலைச் சுற்றும் நவநீதம்
விசைத்தறியால் வந்த வினை
ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. பல உரிமையாளர்கள் விசைத்தறியை நோக்கிச் சென்றுள்ளனர். அதேபோல் போலிப் பட்டுப் புடவைகள் காஞ்சிபுரம் பட்டு என்ற பெயரில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட பட்டுச் சேலைகள் கூட்டுறவுச் சங்கங்களில் தேங்கத் தொடங்கின. இதனால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சேலை நெய்து கொடுத்த தொழிலாளர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் இந்தத் தொழிலைவிட்டு நெசவாளர்கள் பலர் தொடர்ச்சியாக வெளியேறி வேறு வேலைக்குச் செல்கின்றனர். குறிப்பாக, அருகில் உள்ள ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் பெருகிவரும் தொழில் நிறுவனங்கள் அதிக அளவு பெண்களை வேலைக்கு எடுப்பதால், அந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.
350 கோடி லாபம், 100 ரூபாய்க் கூலி
இது குறித்துப் பேசிய பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த ராதா “பட்டு நெசவுத் தொழிலில் தற்போது போதிய வருமானம் இல்லை. நாள் முழுவதும் வேலை செய்தால்கூடக் கூலி ரூ.100 கிடைப்பதே சிரமமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டவர்கள் மட்டுமே இப்போது தொடர்கிறோம். புதிதாக யாரும் வருவதில்லை” என்றார்.
“பட்டு ஜவுளி வியாபாரம் மூலம் ஆண்டுக்கு ரூ.350 கோடிக்கு வியாபாரம் நடைபெறுகிறது. ஆனால், வளர்ந்துவரும் இந்த வியாபார லாபத்தை ஜவுளி உற்பத்தியாளர்களும் இடைத்தரகர்களும் பகிர்ந்துகொள்கின்றனர். இதில் லாபத்தின் பங்கு நெசவாளர்களுக்கு வருவதே கிடையாது. இதனால் பெண்கள் பலர் நெசவுத் தொழிலை விட்டு தொழில் நிறுவனங்களை நோக்கி நகர்கின்றனர்” என்கிறார் இதே பகுதியைச் சேர்ந்த கமலா.
தனது வீட்டிலேயே 3-க்கும் மேற்பட்ட தறிகளை வைத்திருந்தவர் உப்பேரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகதேவன், இவருடைய மனைவி சிவபூஷணம். முதியவர்களான இவர்கள் தற்போது ஒரேயொரு தறியை மட்டுமே பயன்படுத்துகின்றனர். “இப்போது தறி நெய்வதற்கு ஆள் கிடைப்பதில்லை. ஜவுளி உரிமையாளர்கள் விசைத் தறியை நோக்கிச் சென்றுவிட்டனர். கைத்தறி துணிகளுக்கு நெய்து கொடுத்தால் அவர்கள் கொடுக்கும் சொற்பத் தொகையில் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் கூலியை எங்களால் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். எங்களின் அடையாளத்தை இழக்கக் கூடாது என்பதற்காக ஒரு தறியை வைத்துக்கொண்டு தொடர்ந்து நெய்துவருகிறோம்” என்றார்.
இதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் கூறியபோது, “நான் சிறுவயதில் இருந்தே இந்த நெசவுத் தொழிலைப் பழகிவிட்டேன். எனக்கு வேறு வேலை தெரியாது. இதில் நாள்தோறும் ரூ.50 முதல் 100 வரைதான் வருமானம் கிடைக்கிறது. வேறு வழியில்லாமல்தான் இந்தத் தொழிலில் நீடித்து வருகிறேன்” என்றார்.

பயனற்ற நிலையில் இருக்கும் கைத்தறி இயந்திரத்துடன் நவநீதம்
போலிகள் தடுக்கப்பட வேண்டும்
காஞ்சிபுரத்தின் முக்கிய அடையாளம் பட்டு நெசவு. அதைச் சார்ந்து தொழில்செய்பவர்கள் நெசவாளர்கள். ஆனால், இந்த நகரம் தற்போது அதன் முக்கிய அடையாளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. “காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை வாங்குவதற்காகத்தான் பல வர்த்தகர்களும் பொதுமக்களும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். அவர்களிடம் வெளியூர் சேலைகள் காஞ்சிபுரம் சேலைகள் என்று ஏமாற்றி விற்கப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நெசவாளர்களைக் காப்பாற்ற முடியும்” என்று இந்தப் பகுதியில் தொன்றுதொட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவருபவர்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: