திங்கள், 11 டிசம்பர், 2017

ஆர் கே நகர் .... குக்கரில் விசில் சத்தம் அதிகமாக கேட்கிறது?

டிஜிட்டல் திண்ணை!மின்னம்பலம்: "ஆர்.கே.நகரில்
இருக்கேன். கண்களால் பார்த்ததையும், காதால் கேட்டதையும் சொல்கிறேன்!" என்று வந்து விழுந்தது முதல் மெசேஜ். தொடர்ந்து வந்தது அடுத்த மெசேஜ்.
"ஆர்.கே.நகரை சுற்றி சுற்றி வந்தாலும் திரும்பிய பக்கமெல்லாம் கண்களில் படுவது குக்கர் தான். பெண்கள் குரூப் குரூப்பாக குக்கரை தூக்கிக் கொண்டு பிரசாரம் செய்கிறார்கள். 'ஒருநாளைக்கு ஒரு தலைக்கு 300 ரூபா கொடுக்கிறாங்க... மதியம் சாப்பாடு வாங்கிக் கொடுத்துடுறாங்க... நாங்க எடுத்துட்டு போற குக்கரும் அவங்கதான் வாங்கிக் கொடுத்தாங்க. பிரசாரம் முடியும் வரை குக்கரை எங்களையே பத்திரமா வெச்சிருக்க சொன்னாங்க. முடிஞ்சதும் நாங்களே குக்கரை எடுத்துக்கலாம்னும் சொல்லிட்டாங்க. பிரசாரத்துக்கு போற எல்லோருமே இந்த தொகுதிக்காரங்கதான். வெளி ஆட்கள் யாரும் இங்கே வரலை. இங்கேயே தலைவருக்கு போதுமான ஆட்கள் இருக்காங்க. அதனால் வெளியே இருந்து யாரையும் வர சொல்லவே இல்ல..' என்று சொன்னார் குக்கரை தலையில் சுமந்தபடி பிரசாரம் செய்யும் பெண் ஒருவர்.
அதேபோல, குக்கருடன் ஓட்டு கேட்டு போகும் பெண்கள் எல்லோரும், ' நம்ம அம்மா வீட்டு தம்பி நிற்குது. அம்மா செஞ்சதைவிட நமக்கு அதிகமா செய்யும். குக்கருக்கு ஓட்டுப் போடுங்க... குக்கர் இல்லாத வீடு இன்னைக்கு இருக்குமா... அந்த குக்கரை நாம ஜெயிக்க வெச்சா எப்பவும் நம்ம வீட்டுல விசிலடிக்கும்' என்றெல்லாம் சொல்லி வாக்கு கேட்கிறார்கள். குக்கரையும், தினகரனையும் ஆர்.கே.நகர் மக்கள் ரசிப்பதை பார்க்க முடிந்தது.

தினகரனை பொறுத்தவரை இது வாழ்வா... சாவா என்ற கௌரவ பிரச்னை. அதனால், கடைசி நேரத்தில் ஓட்டுக்கு வெயிட்டாக கொடுத்துவிடலாம் என சொன்னதாக சொல்கிறார்கள். ' வீட்டுக்கு வீடு 14 லிட்டர் குக்கர் கொடுக்கலாம்...' என சிலர் ஐடியா கொடுத்திருக்கிறார்கள். கடந்தமுறை, எடப்பாடி அணியில் தினகரன் நின்றபோது ஒரு ஓட்டுக்கு ரூபாய் நான்காயிரம் வரை கொடுத்தாங்க என்றிருக்கிறார்கள். அதற்கு தினகரனோ, ' எலெக்‌ஷன் கமிஷன் பிடிச்சா ஆதாரத்துடன் மாட்டிக்குவோம். அதெல்லாம் வேண்டாம். போன தடவையே 85 சதவீத வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் கொடுத்திருக்கோம். இப்ப கடைசி நேரத்துல எவ்வளவுன்னு முடிவு பண்ணிக்குவோம். எப்பவும் போல ஆளை கணக்கு பண்ணி பணமாவே கொடுத்துடலாம்' என சொன்னதாக சொல்கிறார்கள்." என்று முடிந்தது அந்த மெசேஜ்.
" ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனன் என்ன செய்கிறார்? " என்ற கேள்வி ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து வந்தது.
பதில் வாடஸ் அப்பில் இருந்து வந்தது. போனமுறை இரண்டு அணியும் பிளவுப்பட்டு இருந்தது. அப்பவும் பன்னீர் அணியில் மதுசூதனன் நின்னார். தேர்தல் நிறுத்தப்படும் என்று ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தச் சொல்லிட்டார் பன்னீர்.
"இப்ப மதுசூதனன் வேட்பாளர் என்று சொல்வதை விட, எடப்பாடி தான் வேட்பாளர் என்று சொல்லி ஆக வேண்டும். எடப்பாடிக்கு எந்த அளவுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை எடைபோடும் தேர்தலாகவே எடுத்துக் கொள்ளலாம். அதனால், 'பணமும் தங்கநாணயமும் கொடுக்கும் பொறுப்பை தனி ஒரு நபரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அது முறையாக போய் மக்களுக்கு சேர்ந்ததா என்பதை விசாரிக்க கூட முடியாது. அதனால், ஒவ்வொரு அமைச்சரும் இதை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட வார்டுகளில் எல்லாம் முறையாக போய் சேர்ந்ததா என்பதை கண்காணிக்கவும் வேண்டியது அவசியம். கடைசி நேரத்தில் மக்கள் கைக்கு எல்லாம் போய் சேரணும்..' என்றும் எடப்பாடி தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். பிரசாரத்தை பொறுத்தவரை, மதுசூதனனுக்காக களத்தில் இறங்கி ஓட்டு கேட்டபடி வருவது வெளியூர் ஆட்கள்தான். அந்தப் பகுதியை சேர்ந்தவர்களை அதிகம் பிரசாரத்தில் பார்க்க முடியவில்லை. " என்று முடிந்தது மெசேஜ்.
இரண்டு மெசேஜ்களையும் காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து, "திமுக?" என்று கேள்வியை போட்டது. பதிலும் வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது.
" திமுகவை ஆர்கே நகரில் தேட வேண்டி இருக்கிறது. வேட்பாளர் மருதுகணேஷ் தான் பத்து பேருடன் சுற்றிக் கொண்டு இருக்கிறார். அவருக்காக பிரசாரத்துக்கு வரும் ஆட்கள் வருவதும் தெரிவதில்லை... போவதும் தெரிவதில்லை. திமுகவின் கூட்டணியில் இருப்பதாக சொல்லப்படும் கட்சிகளின் ஆட்களும் சரி... ஆதரவு கரம் நீட்டிய கட்சிகளின் ஆட்களும் சரி... யாரையும் ஆர்கே நகரில் பார்க்க முடியவில்லை. கூட்டணியில் இருப்பவர்கள் பிரசாரத்துக்குதான் வரவில்லை... ஒட்டாவது போடுவங்களா... என்ற கேள்வியும் புலம்பலும் மருது கணேஷ் நண்பர்களிடம் கேட்க முடிந்தது.
ஓட்டுக்கு பணம் கொடுக்கலாமா... கொடுப்பார்களா என எந்த கேள்விக்கும் திமுக தலைமையில் இருந்து பதில் இல்லையாம். போன தடவை ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்தோம். அதுவும், 50 சதவீத வாக்காளர்களுக்கு தான் போய் சேர்ந்தது. அதனால் ஸ்டாலினை பொறுத்தவரை, ' மக்கள் ஆதரவு நமக்கு இருக்கு. இப்போ பணம் கொடுத்து ஜெயிக்க தேவை இல்லை. நாமதான் ஜெயிப்போம்' என சொல்லி வருகிறாராம்" என்று அந்த மெசெஜ்ஜும் முடிய, ' சரி. ஒரு வரியில் ஆர்.கே.நகர் தற்போதய நிலவரத்தை சொல்லும்!" என ஃபேஸ்புக் கேட்க.. ' குக்கரில் விசில் சத்தம் அதிகமாக கேட்கிறது!" என்று சொல்லிவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: