திங்கள், 11 டிசம்பர், 2017

அசாம் ரயில் மோதி 6 யானைகள் பலி!

ரயில் மோதி 6 யானைகள் பலி!மின்னம்பலம் :அசாம் மாநிலத்தில் ரயில் மோதி 6 யானைகள் நேற்று முன் தினம் (டிசம்பர் 9) உயிரிழந்தன.
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள பலிபரா என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் கவுகாத்தி - நஹர்லகூன் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது யானைக் கூட்டம் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு குட்டி யானை உட்பட 6 யானைகள் இறந்தன.
விபத்து நடந்த பகுதி யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதி. அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இடம் தற்போது 70 சதவீதம் அழிந்துவிட்டதால், காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையத் தொடங்கிவிட்டதாக உலக வனவிலங்கு நிதியத்தின் அதிகாரி கூறியுள்ளார்.

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் அசாமின் ஆசிய யானைகள், அழிந்துவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின்படி 2011இல் 5620 யானைகள் இருந்தன. 2013-2016ஆம் ஆண்டு வரை அசாமில் விபத்து உட்பட பல்வேறு காரணங்களால் 140 யானைகள் இறந்தன. ரயில்கள் மோதி யானை இறக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், யானை இறப்புகள் குறையவில்லை. குறிப்பாக நாடு முழுவதும் ரயில் மோதி யானைகள் இறப்பது அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள ஜுஜியான் பகுதியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று யானைகள் காம்ரூப் விரைவு ரயில் மோதி இறந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால், வெள்ளத்தால் அங்குள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் யானைகள், யானை குட்டிகள், காண்டாமிருகங்கள் உட்பட 334 வன விலங்குகள் உயிரிழந்தன.

கருத்துகள் இல்லை: