சனி, 16 டிசம்பர், 2017

ஆய்வு பணிகளை பாதியில் நிறுத்திய ஆளுநர் ... கடலூரில் திமுக, விசிகவினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்


தினகரன் : கடலூர்: கடலூரில் நேற்று ஆய்வு செய்ய வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆய்வு பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு சுற்றுலா மாளிகைக்கு கவர்னர் சென்றார்.தமிழகத்தில் முதன் முறையாக கடந்த மாதம் 14ம் தேதி கோவையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இதை பொருட்படுத்தாத கவர்னர் இனி எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் என அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து நெல்லை, குமரியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட கவர்னர், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே நேற்று கடலூரில் ஆய்வு செய்ய வந்தார்.விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் கடலூர் சுற்றுலா மாளிகையில் வந்து தங்கினார். கடலூர் கலெக்டர் பிரசாந்த்  கவர்னரை வரவேற்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் அதிகார வரம்பு மீறலை கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்ததன் பேரில் கடலூரில் நேற்று காலை கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுகவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பாரதி சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் முன் காலை முதலே திமுகவினர் குவிந்தனர். இவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர். ஏராளமான போலீசார் திமுக அலுவலகத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டனர்.இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்து கவர்னர் தங்கியிருக்கும் சுற்றுலா மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே பாரதி சாலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கவர்னரின் கான்வாய் வாகனம் பாரதிசாலையை தவிர்த்து 5 கிலோ மீட்டர் சுற்றி நெல்லிக்குப்பம் சாலை, கம்மியம்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர் சாலை வழியாக வண்டிப்பாளையம் சென்றடைந்தது. அங்கு கற்பகவிநாயகர் தெருவில் சாலையோரம் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஆளுநர் அந்த வழியாக சுற்றுலா மாளிகைக்கு திரும்பினார். அப்போது எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. திமுகவினர் கருப்புக்கொடி காட்டியதால் அப்பகுதி காலை 9 மணியிலிருந்து 10.40 மணி வரை பரபரப்பாக  காணப்பட்டது. இதனால் காலை 9.30 மணிக்கு  கடலூர் பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பாதியில் திரும்பிய கவர்னர் சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அவர் செல்லும் பாதையில் அவரது காரை முற்றுகையிட்டு கருப்புக்கொடி காட்ட திமுகவினர் திட்டமிட்டு இருந்ததால், அவர் மாற்று பாதை வழியாக கடலூர் வண்டிப்பாளையம் சென்று ஆய்வு பணியை ேமற்ெகாண்டார்.

ஆய்வால் ஓட்டம் பிடித்த இளம்பெண்: கவர்னர் விளக்கம்
வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகரில் கழிவறை திட்டப்பணிகளை பார்வையிட, ஒரு குடிசை வீட்டுக்குள் கவர்னர் சென்றார். அங்கு இளம் பெண் ஒருவர் கீற்று தட்டிகளால் மறைக்கப்பட்ட இடத்தில் குளித்து கொண்டிருந்தார். கவர்னரும், அதிகாரிகளும் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் வீட்டுக்குள் ஓடினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பெண்ணின் தாய் பாப்பாத்தி கூறுகையில், எனது மகள் குளித்து கொண்டிருந்த போது, இப்பகுதிக்கு அத்துமீறி நுழைந்தது கண்டனத்துக்குரியது. கவர்னர் ஆய்வை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது, என்றார். கவர்னர் மாளிகை விளக்கம்: கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கடலூர் மாவட்டத்தில் கவுரி என்பவரின் வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிவறையை பார்வையிட தமிழக கவர்னர் சென்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளும் தமிழக கவர்னருடன் சென்றிருந்தனர். அந்த நிகழ்வு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண் மாவட்ட வருவாய் அலுவலர் முன் செல்ல, அவரை பின்தொடர்ந்து தமிழக கவர்னர் கழிவறையை பார்வையிட சென்றுள்ளார். இதற்கான முழு ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்கொண்டார். கழிவறையில் யாரும் இல்லை என்பதை பெண் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கவர்னர் அங்கு சென்றார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கவர்னர் சந்திப்பு திடீர் ரத்தால் பொதுமக்கள் போராட்டம்
கவர்னர் பன்வாரிலால் புரோகித் தங்கியிருந்த கடலூர் சுற்றுலா மாளிகை முன்பு பலர் மனுக்கள் வழங்க திரண்டனர். அவர்களுக்கு அனுமதி சீட்டு  வழங்கப்பட்டிருந்தது. பாஜகவையும் அதன் சார்பு அமைப்பினரையும் மட்டுமே  சந்தித்த நிலையில்  திடீரென மக்கள் சந்திப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  சுற்றுலா மாளிகை முன்பு திரண்டிருந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்த முற்பட்டபோது  இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கவர்னர் வெளியே  வந்து மனுக்களை பெற்றார்.

கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் கவர்னரிடம் பெண்கள் குமுறல்
கடலூர் வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகரில் ஆய்வு செய்த கவர்னரிடம் அப்பகுதி பெண்கள் கூறும்போது, இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆய்வு செய்யும் நீங்களாவது எங்களுக்கு உரிய தீர்வு ஏற்படுத்திக்கொடுங்கள் என்றனர். பெண்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பியவண்ணம் இருந்ததால் கவர்னர் உடனே அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இதற்கிடையே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் பெரும்பாலானவை கருப்பு கொடி போராட்டத்தால் முடங்கியதால் அடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் கோடிசெட்டிதெரு வரை சென்ற கவர்னரின் வாகனம் அங்கு சிறிதுநேரம் சாலையோரம் நிறுத்தப்பட்டு மீண்டும் சிதம்பரம் சாலை வழியாக சென்றது.

ஆய்வு செய்ய கவர்னர் வரவில்லை: கலெக்டர் பிரசாந்த் விளக்கம்

கடலூர் கலெக்டர் பிரசாந்த் தினகரன் நிருபரிடம் கூறுகையில், “கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவில்லை. திட்டங்கள் தொடர்பான விளக்கங்களோ, முடிவுகளையோ தெரிவிக்கவில்லை. மாவட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளவே கடலூர் வந்திருந்தார். இதில் மாவட்டத்தின் சிறப்புகளை பற்றி கேட்டறிந்தார். இவ்வாறு அவர் கூறினா

கருத்துகள் இல்லை: