சனி, 25 நவம்பர், 2017

கொடியேற்றிய முதல்வர்: போர்க்கொடியேற்றும் துணை முதல்வர்!

கொடியேற்றிய முதல்வர்: போர்க்கொடியேற்றும் துணை முதல்வர்!minnambalam :கட்சியின் சின்னமும், கொடியும் கிடைத்த பிறகு முதல்முறையாக மதுரையில் நடைபெற்ற கட்சிக் கொடியேற்று விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றுவந்த இரட்டை இலை தொடர்பான வழக்கில் எடப்பாடி-பன்னீர் அணிக்கு சின்னம் கிடைத்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர். வெற்றியைக் கொண்டாடும் விதமாக மதுரை கப்பலூரில் இன்று (நவம்பர் 25) முப்பெரும் விழாவும் நடைபெற உள்ளது.
இதையடுத்து மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள தோப்பூரில் அதிமுக கட்சிக் கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால் சின்னமும், கட்சிக் கொடியும் ஒருங்கிணைந்த அணியினருக்கு வந்த பின்னால் நடக்கும் முதல் கொடியேற்று விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்த முகநூலில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்த பன்னீர் ஆதரவாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன், "இரட்டை இலை மீட்பு... மாபெரும் கொண்டாட்டமாம்,முப்பெரும் விழாவாம், கட்சிக் கொடி ஏற்றுவார்களாம். யாருக்கும் அழைப்பும் இல்லை, தகவலும் இல்லை. தலைவர்கள் உள்பட. மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல" என்று குறிப்பிட்டுள்ளார்.
மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதனை தொடர்ந்து அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த ஆஸ்பயர் சுவாமிநாதனும் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளார். தொடர்ந்து தொலைகாட்சிகளுக்கு பேட்டியளித்த அவர், "மதுரையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அழைப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: