சனி, 25 நவம்பர், 2017

BBC :பாகிஸ்தானில் கலவரம்: தொலைக்காட்சிகள் முடக்கம்.. போலீஸ் அதிகாரி கொலை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் கடந்த 20 நாள்களாகப் போக்குவரத்தை முடக்கி் போராடிவந்த இஸ்லாமியவாதிகளுக்கம்  பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மூண்ட மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீதினை பதவி நீக்கவேண்டும் என்று கோரி முக்கிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் பல வாரங்களாக மறித்து வருகிறார்கள். இதனால், தலைநகர் இஸ்லாமாபாத் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது.
போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் சனிக்கிழமை ரப்பர் குண்டுகளை சுட்டதோடு கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். அதிலும் கலைந்து போகாத போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினர்.
இதையடுத்து போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சேவைகளை பாகிஸ்தான் அரசு துண்டித்தது.

தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 2017ல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டம் 20 நாளாக நடந்து வந்தது. இந்த சட்டத் திருத்தத்தின்படி நடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய ஓர் உறுதிமொழியில் முகமது நபியே இறைவனின் கடைசி தூதர் என்று குறிப்பிடும் பழைய வாசகம் ஒன்று விடுபட்டிருந்தது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வாசகம் விடுபட்டது இஸ்லாமிய மறுப்பு எனவும், மத நிந்தனை எனவும் விமர்சிக்கப்பட்டது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்தை பதவி நீக்கவேண்டும் என்று கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்பான டெஹ்ரீக்-ஐ-லபைக் யா ரசூல் அல்லா கட்சியின் அஷ்ரஃப் ஜலாய் அணியும், சுன்னி டெஹ்ரீக் அமைப்பும் கோரி வருகின்றன.
கவனத்துக்கு வந்தவுடனேயே இந்தப் பிழையினை சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசு விளக்கமளித்தாலும், இதை கடும்போக்காளர்கள் ஏற்கவில்லை.


நவம்பர் 6-ம் தேதி லாகூரில் இருந்து 'நீண்ட பயணமாகத்' தொடங்கிய இந்தப் போராட்டம் இஸ்லாமாபாத்தில் முற்றுகையாக மாறித் தொடர்ந்தது. இஸ்லாமாபாத் நகரிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நகரில் தடி ஏந்திய இளைஞர்கள் மக்களைத் துன்புறுத்திக்கொண்டும் அச்சுறுத்திக்கொண்டும் செல்வதால் மக்கள் நடமாடுவது கடினமாகியுள்ளது என்று பிபிசி உருது சேவை செய்தியாளர் தபிண்டா கௌகாப் தெரிவிக்கிறார்.8,500 பாதுகாப்புப் படையினர் போராட்டக் காரர்களைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 370 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் நடவடிக்கைக்குப் பதிலடியாக போராட்டக்காரர்கள் நான்கு போலீஸ் வேன்களுக்கும் ஒரு பேருந்துக்கும் தீ வைத்ததாக பிபிசி உருது செய்தியாளர் ஷாசாத் மாலிக் தெரிவித்துள்ளார். re>இஸ்லாமாபாத்தின் முக்கியச் சாலை ஒன்றை ஆக்கிரமித்து போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை போலீசார் அழித்தனர்.
 

கலவரங்களின்போது 111 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒளிபரப்பக்கூடாது என்ற உத்தரவை மீறியதாகக் கூறி எல்லா செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பையும் பாகிஸ்தான் மின்னணு ஊடக முறைப்படுத்தல் ஆணையம் துண்டித்துள்ளது. அரசுத் தொலைக் காட்சியான பாகிஸ்தான் டிவி தவிர எந்த தொலைக்காட்சி சேனலும் தற்போது செயல்படவில்லை. இந்தக் கலவரத்தைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பல பத்திரிகையாளர்களும் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் போராட்டக்காரர்களை கலைக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கலைந்து செல்வதற்கு போராட்டக்காரர்களுக்கு பலமுறை அரசு கெடு விதித்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் அதை ஏற்றுக் கலையாததால் மீண்டும் மீண்டும் கெடுவை நீட்டித்தது. கடைசியாக விதித்த கெடு காலாவதியானதை அடுத்து இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையைப் பாதுகாப்புப் படையினர் தொடக்கினர்.போராட்டம் நடந்துவந்ததால், 
ஆம்புலன்ஸ் போக வழி இல்லாமல் போனதால் ஒரு நோயாளி இறந்தது உள்பட பல வழக்குகள் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டது. போராட்டம் நடந்துவந்த நாள்களில் சாலைகளில் தடைகள், சாலை மூடல்கள் ஆகியவை நேர்ந்துவந்ததால், பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது.

கருத்துகள் இல்லை: