வியாழன், 23 நவம்பர், 2017

கந்துவட்டிகாரர்களிடம் மாமூல் வாங்கும் கேடுகெட்ட ஏவல்துறை

மின்னம்பலம் : கந்து வட்டிக் கொடுமைகளுக்கு காவல் துறையும் வருவாய்த் துறையுமே பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கந்து வட்டியைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அந்தக் கொடுமை தொடர்வதற்குக் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம். கள்ளச் சாராய சாவு நேரிட்டால் எப்படி அந்தப் பகுதியில் உள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை அரசு பொறுப்பேற்கச் செய்கிறதோ அப்படி கந்து வட்டி தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தால் அந்தப் பகுதியில் உள்ள காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதைக் கந்து வட்டித் தொழிலில் முதலீடு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது மேலும் கறுப்புப் பணத்தை பெருகச் செய்கிறது. கறுப்புப் பண ஒழிப்பில் தீவிரமாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மத்திய அரசு வருவாய் புலனாய்வுத் துறையின் மூலம் கந்து வட்டிக்காரர்களை விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது PMLA சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

கந்து வட்டியை ஒழிப்பது என்பது ஏழை நடுத்தர மக்களுக்குப் பொருளாதாரத் தற்சார்பை உருவாக்குவதோடு தொடர்பு கொண்டது எனக் கூறியுள்ள திருமாவளவன், சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுச் சுழல் நிதி வழங்கப்பட்ட பிறகு கிராமப்புறங்களில் கந்து வட்டிக் கொடுமை சற்றே குறைந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, சுழல் நிதியின் அளவை அதிகப்படுத்துவதோடு நகர்ப்புறத்துக்கும் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறு குறு வணிகர்களே கந்து வட்டிக்குப் பணம் வாங்குவதில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுக்குச் சிறப்புக் கடன் உதவித் திட்டத்தை வகுப்பதன் மூலம் கந்து வட்டிக்காரர்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்க முடியும் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், “வளரும் நாடுகளில் வறுமை ஒழிக்கப்பட அங்குள்ள சிறு தொழில் முனைவோருக்கு வங்கிகள் அல்லாமல் சிறிய அளவில் கடன் உதவி வழங்கும் நுண் கடனுதவி நிறுவனங்களை (Micro Finance Corporations) அமைக்கலாம் என்று முகமது யூனுஸ் என்பவர் பங்களாதேஷில் நடைமுறைப்படுத்திக் காட்டிய திட்டம் நல்ல பலனைத் தந்தது. அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை தமிழக அரசு நமக்கேற்ற விதத்தில் வடிவமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அரசியல் கட்சியினர், காவல் துறையினர் ஆதரவில்லாமல் கந்துவட்டிக்காரர்கள் அந்தத் தொழிலைச் செய்ய முடியாது எனக் குற்றம்சாட்டியுள்ள திருமாவளவன், “கந்து வட்டிக்காரர்கள் – அரசியல்வாதிகள் – காவல் துறை அதிகாரிகள் என்ற கூட்டணியை உடைப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ்நாட்டில் கந்து வட்டியின் காரணமாக இன்னொரு மரணம் நிகழுமேயானால் அது இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டும். இதை உணர்ந்து காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: