வெள்ளி, 24 நவம்பர், 2017

அனிதா தற்கொலை: தமிழக டிஜிபிக்கு அழைப்பாணை !

அனிதா தற்கொலை: தமிழக டிஜிபிக்கு  சம்மன்!
மின்னம்பலம் :அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கத் தமிழக டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தோல்வியுற்ற அரியலூர் மாணவி அனிதா விரக்தியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். எனவே அனிதாவின் தற்கொலை தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 16 முதல் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆதிதிராவிட நல ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தலைமையில் அதிகாரிகள் அனிதாவின் குடும்பத்தினரிடமும், குழுமூர் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முருகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 24) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனிதா மரணம் குறித்து டிசம்பர் 12ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கத் தமிழக டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் முதன்மைச் செயலாளர், அரியலூர் ஆட்சியர், மற்றும் எஸ்.பி. ஆகியோரும் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: