ஞாயிறு, 26 நவம்பர், 2017

சில்க் சுமிதா: வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள்

 நான் ஒரு ‘நக்சலைட்’ ஆக வேண்டும் என்று எனக்குள் ஆசை வளர்த்தேன். அது நடக்கவில்லை. நாளும் நாளும் நெருங்கிய பிரச்சினைகளின் அலைகள் மோதி மோதி என் வாழ்க்கை திசைமாறிப் போனது. ஆனால், அந்த நெருப்பு என் நெஞ்சில் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது!’’
ஒரு கவர்ச்சி நடிகையிடம் இருந்து இப்படியொரு பதில் வரும் என்று நிருபர் எதிர்பார்க்கவில்லை. புகழின் வெளிச்சத்தில் நடக்கும் எந்த அழகியும் இப்படி ஆசைப்பட மாட்டார். விநோதமாய்ப் பார்த்த நிருபர், மறுபடியும் கேட்டார்...
‘‘நக்சலைட் ஆக வேண்டுமென்றா ஆசைப்பட்டீர்கள்..?’’
‘‘ஆம். உங்களுக்குச் சந்தேகமா?’’
‘‘நக்சலைட் என்றால் என்ன? யார் என்று உங்களுக்குத் தெரியுமா, மேடம்?’’
சுமிதா மவுனமாக இருந்தார்.
நிருபர் புரியும்படி சொன்னார்...
‘‘நக்சலைட் என்றால் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி என்று அர்த்தம்!’’
சுமிதாவிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது!
‘‘அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’’
நிருபர் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார். சுமிதா சொன்னார்...
‘‘இங்கே ஒரு வேடிக்கையான முரண்பாடு துருத்திக்கொண்டிருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே என் பக்கம் திரும்பி, ‘‘இவர் சல்வார்... பலவீனமானவர்கள்தான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறார்கள்;
சர்வாதிகாரிகள்தான் அப்பாவிகளைக் கூட ஆயுதம் தூக்க வைக்கிறார்கள் என்று!’’

நிருபர் தனது குறிப்பேட்டை மூடிவிட்டு, ‘‘நீங்கள் சொன்னதைஎல்லாம் நான் எழுதலாமா?’’ என்றார்.
‘‘உங்கள் சுதந்திரம் அனுமதிக்கும் வரை எழுதலாம்.’’
மறுநாள் சுமிதாவின் கவர்ச்சிப் படத்துடன் பத்திரிகையில் அவருடைய பேட்டி வந்தது.
‘நக்சைலைட் ஆகப்போகிறேன் -சில்க்!' சுமிதா சொன்ன வேடிக்கை கதை!
எப்படி இருக்கிறது இந்த வேடிக்கை?

திரையுலகில் சில்க் சுமிதா என்னும் கவர்ச்சிப் புயல் சுகமாகச் சுழன்றடித்த காலம் அது. திரையில் அந்த பட்டுப் பாதம் எட்டிப் பார்த்தால் போதும், ஆர்வக் கிளர்ச்சியின் உற்சாகம் மதகுடைத்துப் பாயும். அழகை ரசிப்பதும், கலையை வளர்ப்பதிலும் எப்போதும் எங்கேயும் முன்னணியில் நிற்பவர்கள் தம் உழைப்பால் பூமிக்கு அழகூட்டும் பாமர மக்கள்தான்.
ஹோமரையும் ஷேக்ஸ்பியரையும் அறிவுலகம் அறியுமுன் மெச்சிப் புகழ்ந்தவர்கள் இந்த வியர்வைக் குலத்தவரே! இவர்களின் ரசனையில் கூடக் கலாப்பூர்வமான மேதமை வெளிப்படும்.
சில்க் சுமிதாவின் ஜெயக்கொடி பறந்த அந்த நாட்களில்... ஒரு திரைப்படம் அவர்களைக் கவர்ந்துவிட்டால் உற்சாகமாக ஒரு குரல் ஓங்கி ஒலிக்கும்: ‘‘சிலுக்கைப் பெத்த ஆத்தாவுக்கு...’’
‘‘ஜே...’’ அரங்கமே அதிரும்; ஆரவாரம் பூக்களாய்ப் பொழியும். அழகை ஆராதிக்கும் அழகு இது. திரைப்படம் தங்களை வறுத்தெடுக்கிறது என்றால், விமோசனம் தேடும் குரலொன்று எழும்:
‘‘சாமியே...’’
‘‘சரணம் ஐயப்பா...’’
அரங்கம் முழுவதும் ஐயப்பனை நினைக்கும். ‘இறைவா, நின்னைச் சரணடைந்தோம்; எங்களை காப்பாற்று’ என்பது இதன் பொருள். மதுரையில் மாத்திரமல்ல; எல்லா ஊர்களிலும் இதே விதமான காட்சிகள்தான்.
இஸடோரா டங்கன், மர்லின் மன்றோ, ஜினாலோலா போன்ற கலைஞர்களின் வரிசையில் எங்கள் சில்க் சுமிதா. ஆனால், இந்தப் பேரழகிகள் அனைவரிலும் தனித்தும் உயர்ந்தும் சுடர்ந்த செந்தாரகை, பூவாய் மலர்ந்த புரட்சித் தீ - தோழர் விஜயலட்சுமி எனும் சில்க் சுமிதா.
தோழரை சந்தித்தேன்...
‘மலையூர் மம்பட்டியான்’ திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்தபோதுதான் சுமிதா எனக்கு அறிமுகமானார். நிறுவனத்தின் ஒப்பந்தப் பத்திரத்தில் நாம் விளம்பர ஓவியன் என்றாலும், படத்தின் அத்தனை துறைகளிலும் எனது பங்களிப்பு இருக்கும்.
தயாரிப்பாளர்கள் சிவ.இராமதாஸ், நாகராஜன், ராகவன் தம்பி, அலுவலக மேலாளர் மீனாட்சி சுந்தரம், பி.ஆர்.ஓ சுரா, தயாரிப்பு நிர்வாகி ஜே.துரை, நாயகன் தியாகராஜன், இயக்குநர் ராஜசேகர் அனைவரும் என் நண்பர்கள். எனது அரசியல், லட்சியங்களைக் கவுரவிக்கும் முறையில் என்னை இவர்கள் ‘தோழர்’ என்றே அழைப்பார்கள். இதனால் படக்குழுவினர் எல்லோருக்குமே நான் ‘தோழர்’தான்.
பாடல் காட்சியொன்றில் நடிப்பதற்காக சுமிதா வந்திருந்தார். உணவு நேரத்தில் நான் தனியே அமர்ந்திருந்தேன். சுமிதா என் அருகில் வந்தார். நேச பாவத்துடன் வரவேற்றேன். உட்கார்ந்தார்.
‘‘நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இங்கே எல்லோரும் உங்களை தோழர் என்றே அழைக்கிறார்கள். உங்கள் பெயர் தோழரா?’’
‘‘இல்லை... என் பெயர் இளவேனில். ‘காம்ரேட்’ என்பதற்கு இன்னும் சரியான தமிழ்ச் சொல் இல்லாததால் ‘தோழர்’ என்று அழைக்கிறார்கள்".
‘‘நீங்கள் கம்யூனிஸ்ட்டா?’’
‘‘வாழ்வையும், மனிதர்களையும், கலை இலக்கியங்களையும் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக மக்கள் நடத்தும் போராட்டங்களையும் நேசிப்பதற்கும், யோசிப்பதற்கும், சுவாசிப்பதற்கும் ஒருவன் கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டுமா... என்ன?’’
நான் பிடிகொடுக்காமல் பேசினேன். ஆனாலும், அவர் பிடித்துக்கொண்டார்.
சுமிதாவின் முகத்திலே பரவசத்தின் வசீகரம். சுற்றிலும் பார்த்துவிட்டுக் கண்சிமிட்டிக்கொண்டு ரகசியமாய்ச் சொன்னார்...
‘‘நானும்தான்...’’
விசில் சத்தம் கேட்டது. ‘லைட்ஸ் ஆன்’ என்று ஒளிப்பதிவாளர் ரங்கா குரல் கொடுத்தார். சுமிதா கேமராவுக்கு முன்பு போய் நின்றார். ‘நாகரா’ இசைத்தது.
‘‘வெள்ளரிக்காய்... பிஞ்சு ஒண்ணு’’ சுமிதா அபிநயித்தார். கேமரா கோணம் மாற்றப்படும் ஒவ்வொரு இடைவேளை யின் போதும் எங்கள் பேச்சு தொடர்ந்தது. மூன்று நாட்களாக அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. மூன்று நாட்களிலும் நிறைய பேசினோம். தோழமை தொடர்ந்தது. வேறு படங்களில் நடிக்கும் போதும் சந்திப்போம்; பேசுவோம்.
சினிமா, கவிதை, சோவியத் புரட்சி, மாக்ஸிம் கார்க்கி, காந்தி, நேரு, பகத்சிங், ஷேக் அப்துல்லா, 1948-ல் நடந்த தெலுங்கானாப் புரட்சி, ராஜேஸ்வர ராவ், பி.டி.ரணதிவே, அணி திரண்ட பெண்கள், அடக்குமுறைகள், மக்களின் மன உறுதி... இவ்வாறு கண்ணீரும், புன்னகையும் கலந்த ஏராளமான கதைகள்.
சுமிதா ஆர்வமாய்க் கேட்பார். சமயத்தில் அதிர்ச்சி தரும்படியும் கேட்பார்!
‘‘ராணுவ பலத்தில் நின்ற பட்டேல் இரும்பு மனிதரா? ராணுவத்தை எதிர்த்து நின்ற எளிய மக்கள் இரும்பு மனிதர்களா...?’’
ஆசைகளுக்கும் நிறமுண்டு ஒருநாள் விஜயா கார்டனில் படப் பிடிப்பு. தெலுங்கு பத்திரிகையில் இருந்து நிருபர் ஒருவர் வந்தார். (‘ஆந்திர பிரபா’ பத்திரிகை என்று ஞாபகம்) பேட்டிக்கு இசைவு தந்தார்.
‘‘ஒரே கேள்வி...’’ என்றார் நிருபர்.
‘‘கேளுங்கள்’’ என்றார் சுமிதா.
‘‘இப்போது தமிழ், தெலுங்கு, படங்களில் நீங்கள் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள். கதாநாயகர்கள் கூட உங்களுக்காகக் காத்திருக்கும் அளவுக்கு நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள். நினைத்ததை எல்லாம் நீங்கள் பெறமுடியும். இப்போதும் கூட உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்று ஏதாவது இருக்கிறதா?’’
‘‘ஆசைப்படாதவர் யார்?’’ ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்தவர் யார்? எனக்கும் ஓரு ஆசை இருந்தது. ஒரே ஓர் ஆசைதான். நான் ஒரு ‘நக்சலைட்’ ஆக வேண்டும் என்று எனக்குள் ஆசை வளர்த்தேன். அது நடக்கவில்லை. நாளும் நாளும் நெருங்கிய பிரச்சினைகளின் அலைகள் மோதி மோதி என் வாழ்க்கை திசைமாறிப் போனது. ஆனால், அந்த நெருப்பு என் நெஞ்சில் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது!’’
ஒரு கவர்ச்சி நடிகையிடம் இருந்து இப்படியொரு பதில் வரும் என்று நிருபர் எதிர்பார்க்கவில்லை. புகழின் வெளிச்சத்தில் நடக்கும் எந்த அழகியும் இப்படி ஆசைப்பட மாட்டார். விநோதமாய்ப் பார்த்த நிருபர், மறுபடியும் கேட்டார்...
‘‘நக்சலைட் ஆக வேண்டுமென்றா ஆசைப்பட்டீர்கள்..?’’
‘‘ஆம். உங்களுக்குச் சந்தேகமா?’’
‘‘நக்சலைட் என்றால் என்ன? யார் என்று உங்களுக்குத் தெரியுமா, மேடம்?’’
சுமிதா மவுனமாக இருந்தார்.
நிருபர் புரியும்படி சொன்னார்...
‘‘நக்சலைட் என்றால் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளி என்று அர்த்தம்!’’
சுமிதாவிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது!
‘‘அரசாங்கத்தால் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’’
நிருபர் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தார். சுமிதா சொன்னார்...
‘‘இங்கே ஒரு வேடிக்கையான முரண்பாடு துருத்திக்கொண்டிருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே என் பக்கம் திரும்பி, ‘‘இவர் சல்வார்... பலவீனமானவர்கள்தான் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறார்கள்;
சர்வாதிகாரிகள்தான் அப்பாவிகளைக் கூட ஆயுதம் தூக்க வைக்கிறார்கள் என்று!’’
நிருபர் தனது குறிப்பேட்டை மூடிவிட்டு, ‘‘நீங்கள் சொன்னதைஎல்லாம் நான் எழுதலாமா?’’ என்றார்.
‘‘உங்கள் சுதந்திரம் அனுமதிக்கும் வரை எழுதலாம்.’’
மறுநாள் சுமிதாவின் கவர்ச்சிப் படத்துடன் பத்திரிகையில் அவருடைய பேட்டி வந்தது.
‘நக்சைலைட் ஆகப்போகிறேன் -சில்க்!' சுமிதா சொன்ன வேடிக்கை கதை!
எப்படி இருக்கிறது இந்த வேடிக்கை?
 தி இந்து தமிழ்...

கருத்துகள் இல்லை: