சனி, 25 நவம்பர், 2017

ஆர் கே நகரின் அவலம் தீருமா? திமுக வேட்பாளர் மருது கணேஷ் பேட்டி.

மக்கள் கோபம் வெற்றியைப் பெற்றுத் தரும்!
மின்னம்பலம் :ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அரசின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும், அதுவே தனக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்றும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளராக மருது கணேஷ் இன்று (நவம்பர் 25) அறிவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதற்காகக் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.

“அரசின் மீதும் ஆட்சியின் மீதும் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அந்தக் கோபம் எங்களுக்கு வெற்றியை பெற்றுதரும். தோழமைக் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. இந்தத் தேர்தலில் பிரச்சாரமே செய்யத் தேவையில்லை. ஏனெனில் கடந்த முறையே எல்லாப் பிரச்சினைகள் பற்றியும் பிரச்சாரம் செய்துவிட்டோம். இங்கு இப்போதும் நிறையப் பிரச்சினைகள் உள்ளன. மழைக் காலத்தில் வெள்ளம் செல்லச் சரியான கால்வாய் வசதி இல்லை. மெட்ரோ ரெயில் பணியால் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. சுத்தமான குடிநீர் இல்லை. இது குறித்தெல்லாம் பிரச்சாரம் மேற்கொள்வோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஸ்டாலின் முதல்வராவதற்கு இந்த வெற்றி முன்னோட்டமாக இருக்கும்” என்று மருது கணேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: