திங்கள், 20 நவம்பர், 2017

போயஸ் கார்டனில் மீண்டும் வருமான வரித்துறை ரெய்டு?: ஜெயலலிதா அறையில் சோதனை செய்யவும் திட்டம்

தினகரன் : சென்னை: சசிகலா உறவினர்களை தொடர்ந்து ஓரிரு நாளில் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ெஜயலலிதா வசித்த அறையில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு ெசய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தோழி சசிகலா மற்றும் இளவரசி உறவினர்கள் மற்றும் பினாமிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையில், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனின் போயஸ்கார்டன் அலுவலகத்தில் அவர் பயன்படுத்திய அறை மற்றும் விவேக் பயன்படுத்திய அறையை சோதனை செய்ய வருமானவரி வரி அதிகாரிகள் எழும்பூர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதேநேரம் ஜெயலலிதா வசித்து வந்த அறையில் அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். அப்போது விவேக் அனுமதி பெறாமல் ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த கூடாது என அதிகாரிகளிடம் கூறி அவர்களை தடுத்தார். இதையடுத்து ஜெயலலிதா அறையை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


அதை தொடர்ந்து, ஜெயலலிதா அறையில் ரகசிய பாதாள அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தான் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனாேலயே சோதனையின்போது அதிகாரிகளை விவேக் தடுத்ததாகவும் தகவல் பரவியுள்ளது. இதனால் வருமானவரித்துறையினர் ஜெயலலிதா அறையில் சோதனை நடத்துவதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் பெற்று ஓரிரு நாளில் சோதனை நடத்தப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா அறையில் மீண்டும் ஒரு அதிரடி சோதனை நடத்த வருமானவரித்துறையினர் தயாராகி வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா அறையில் சோதனையின் போது கட்சியினர் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் வருமானவரி அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு பிறகே சசி குடும்பத்தினர் மீதான வருமானவரி சோதனை முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், வரி ஏய்ப்பு கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் வெளிநாடு முதலீடு, நகை, ரொக்க பணம் குறித்த தகவல் வருமானவரி துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: