வியாழன், 23 நவம்பர், 2017

சென்னை குவியல் குவியலாக மக்கள் வெளியேற்றம்.. அப்புறப்படுத்தும் தமிழக அரசு!

CPIM Chennai South : குவியல் குவியலாக மக்கள் வெளியேற்றம்:
சென்னையிலேயே அடுக்குமாடி
வீடுகள்: #CPIM வலியுறுத்தல்.
நீர்வழிக்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றப்படும் பகுதிக்கு அருகாமையிலேயே அடுக்குமாடி வீடுகளாக கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை கூவம் நீர்வழிக்கரையோரம் உள்ள பல்லாயிரக் கணக்கான வீடுகளை அப்புறப்படுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரசு விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்காமல், புதிய ஆலோசனைகளை ஏற்காமல் இந்த அப்புறப்படுத்தலை செய்து வருகிறது.
நகர்ப்புற ஏழைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டிய அரசு, குறைந்தபட்ச சலுகைகளைக் கூட வழங்காமல் வெளியேற்றுவது அரக்கத்தனமாகும்.
குழந்தைகளின் படிப்பு முடிவடையாத சூழலில், வேலைவாய்ப்புகள் பறிபோகிற நிலையில் சுமார் 30 கிலோமீட்டருக்கு வெளியே கொண்டு சென்று கட்டாய குடியமர்வு செய்வது பல்வேறு விதமான சமூக சிக்கல்களை உருவாக்கும்.
நீர்வழியின் மையத்திலிருந்து 50 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடுகளைத்தான் அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்குமாறாக ஏழை மக்களின் வீடுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆயிரம் விளக்கு தொகுதி, அண்ணாநகர் தொகுதி, சேப்பாக்கம் தொகுதிகளில் இந்த நடவடிக்கையை தீவிரமாக செய்கின்றனர்.
அதேநேரத்தில், வசதியானவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் 50 மீட்டருக்கு உள்ளேயே கட்டி இருக்கக்கூடிய கட்டிடங்களை அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர். ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்ற வகையில் அரசு நிர்வாகம் செயல்படுகிறது.
குடிசைகளை அப்புறப்படுத்தக் கூடிய இடங்களுக்கு அருகாமையிலேயே அடுக்குமாடி வீடுகளை கட்டிக் கொடுக்க முடியும். இதற்கான இடங்கள் உள்ளதை பல்வேறு அமைப்புகளும், மார்க்சிஸ்ட் கட்சி போன்ற நகர்ப்புற ஏழை மக்களுக்காக பாடுபடும் கட்சிகளும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளன. அண்மையில், மயிலாப்பூரில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம், சென்னை நகருக்குள்ளேயே 400 சதுரஅடி நிலத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இத்தகைய ஆலோசனைகளைக் கூட மாநில அரசும், நிர்வாகமும் பரிசீலிக்கத் தயாராக இல்லை.
தற்போது, கட்டாய மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடத்தில் வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உள்ளது. ஏற்கெனவே, கண்ணகிநகர், செம்மஞ்சேரி போன்ற இடங்களில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வாழ்வாதாரமின்றி வதைப்படுகின்றனர். ஒரே இடத்தில் இவ்வளவு குவியலாக அடுக்குமாடி வீடுகள் கட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆகவே, தற்போது அமைந்துள்ள ஏழைகளின் வீடுகள் உள்ள இடங்களிலும், அதற்கு அருகாமையிலும் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுக்க வாய்ப்பு இருந்தும் குவியலாக வெளியே விரட்டுவது மிகப்பெரிய வன்முறையாகும். எனவே, தற்போதைய வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
தற்போது, மக்கள் குடியிருக்கக்கூடிய இடங்களில் அல்லது அதற்கு அருகாமையில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். 50 மீட்டருக்கு வெளியே உள்ள வீடுகளை அகற்றும் சட்டவிரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். அந்தந்தப்பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கவுன்சிலர்களும் அரசின் இந்த முடிவை எதிர்த்து குரல் எழுப்புவதுடன் நகர்ப்புற ஏழைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
சென்னையில் அரசுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சதுரஅடி நிலங்களை பல பெருநிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. திறந்தவெளி (ஓஎஸ்ஆர்) நிலங்களைக் கூட தங்கள் சொந்த பயன்பாட்டிற்குள்ளேயே வைத்துள்ளன. அந்த இடங்களை பல நிறுவனங்கள் பட்டியலிட்டு காட்டியுள்ளன. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் அரசு நிர்வாகம் அதையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: