சனி, 25 நவம்பர், 2017

போலி நீதிபதி ... பட்டப்படிப்பையே முடிக்காதவர் 22 ஆண்டுகள் நீதிபதியாக இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்

சட்டப் படிப்பையே முடிக்காதவர் நீதிபதி!மின்னம்பலம் :வழக்கறிஞர்களிடையே போலிகள் அதிகம் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை அண்மையில் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 90 ஆயிரம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 56 ஆயிரம் பேர் கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்ப்புக்குச் சமர்பித்துள்ளனர். 4000ம் பேர் சம்மந்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சியடையவில்லை என்றும் 2000ம் பேர் போலி வழக்கறிஞர்கள் என்றும் தெரியவந்தது. 742 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நீதித் துறையில் போலி வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அண்மைக் காலமாகச் சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் படிப்பு இல்லாமல் தமிழ்நாடு நீதித் துறையில் 21 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் நீதிபதியாகப் பணியாற்றியது வெளிச்சத்துக்கு வந்து அதிரவைத்துள்ளது.
மதுரை மாவட்டம் உலகநேரியைச் சேர்ந்த நடராஜன் கர்நாடகாவில் உள்ள மைசூர் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சாரதா சட்டக் கல்லூரியில் இளநிலை பொதுச் சட்டத்தைத் தொலை தூரக் கல்வி மூலம் படித்துள்ளார். 1975-78ம் ஆண்டுகளில் மூன்றாம் ஆண்டு மட்டுமே வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் பிப்ரவரி 15, 1982 அன்று நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 22 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பணியாற்றி பின் ஜூன் 30, 2003 அன்று ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். அவருக்கு MS1739 / 2003 என்ற சேர்க்கை எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவருடைய சான்றிதழ்களைச் சரிபார்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பார் கவுன்சில் அதிகாரிகள் அவர் தன் படிப்பை முறையாகப் பூர்த்திசெய்யவில்லை என்பதைக் கண்டறிந்தனர். இது குறித்து விளக்கம் கேட்டு ஜனவரி 4, 2016 இல் நடராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், நீதித் துறையிலிருந்து ஏன் உங்களை நீக்கக் கூடாது என்று கேட்டுள்ளனர்.
“21 ஆண்டுகளாக நீதிபதியாகப் பணியாற்றிய ஒருவரை நீதித் துறையில் இருந்து நீக்குவது சரியானதல்ல” என்று பார் கவுன்சில் அனுப்பிய நோட்டீஸுக்கு நடராஜன் பதில் அளித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட சட்டப் படிப்பையே முடிக்காமல் 21 ஆண்டுகள் ஒருவர் நீதிபதியாகப் பணியாற்றியிருப்பது அமைப்பில் உள்ள ஓட்டையை அம்பலப்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: