சனி, 25 நவம்பர், 2017

ஆர் கே நகரில் திமுக சார்பாக மருது கணேஷ் மீண்டும் போட்டி? ஆலோசனை நடக்கிறது!

மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக டி.டி.வி.தினகரன் நேற்றைய தினமே அறிவித்துவிட்டார்.
வேட்புமனு தாக்கல் வரும் திங்களன்று தொடங்கவுள்ள நிலையில் ஏனைய கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், வட்டம், பகுதி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆர்.கே.நகர் தேர்தலின்போது திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். எனவே, மீண்டும் அவரையே வேட்பாளராக நிறுத்துவதா அல்லது வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்துவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: