வெள்ளி, 24 நவம்பர், 2017

Dr.ராமதாஸ் :தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது!

மின்னம்பலம் :ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டதாக, நேற்று (நவம்பர் 23) தேர்தல் ஆணையம் அறிவித்தது. இன்று ஆர்கேநகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை வெளியிட்டது. இவையிரண்டுக்கும் தொடர்புள்ளதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை, நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். இன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், மத்திய அரசின் தலையீட்டால் இரட்டை இலைச் சின்னம் கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இது குறித்து, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் ஆணையம் அதிகபட்ச நம்பகத்தன்மை மற்றும் வெளிடைத்தன்மையுடன் நடந்துகொண்டால்தான் இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படும். அதற்கு மாறாக, தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த முடிவுகள் அதன் மீதான நம்பகத்தன்மையை இதுவரை இல்லாத அளவில் சிதைத்திருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னமும், கட்சியின் பெயரும் கொடியும் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த சர்ச்சைகள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அதிமுகவின் இரு அணிகளும் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய சக்திகள்தான். இப்போதும் அதுதான் நடைபெறப்போகிறது.
இரட்டை இலைச் சின்னம் கிடைக்காத அணி இன்னும் சில மாதங்களில் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் இழக்கும். சின்னம் கிடைக்கப்பெற்றுள்ள அணி அதிகாரத்தின் கடைசி சொட்டு வரை அனுபவித்துவிட்டு, அதன்பின் முக்கியத்துவத்தை இழக்கும். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது அப்படிப்பட்டதல்ல” என்ற அவர், ஆணையம் அதிகபட்ச நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இது சர்ச்சையானவுடன், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறியதாகப் பிரச்சினையை திசைதிருப்புகிறார். அடுத்ததாக, இரட்டை இலை சின்னம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதுபற்றியும் ஆளுங்கட்சிக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்து, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அவசரஅவசரமாக அரசு விழாக்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதால்தான் அவசரஅவசரமாகத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டியிருந்ததாக, தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்திய பிறகே தேர்தல் நடத்த முடியும் என்பதை, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து கூடுதல் அவகாசம் பெற்றிருக்கலாம். அவ்வாறு செய்யத் தவறியது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது விழுந்த கரும்புள்ளியாக மாறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கதாகும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
“ஓட்டுக்கு ஒரு ரூபாய்கூடப் பணம் வழங்கப்படாமல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் இடைத்தேர்தலை நடத்துவதன் மூலம்தான், இழந்த பெருமையை ஓரளவாவது தேர்தல் ஆணையம் மீட்க முடியும். எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எந்தவித முறைகேடுமின்றி நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை: