திங்கள், 20 நவம்பர், 2017

29 மாநிலங்களிலிருந்து விவசாயிகள் நாடாளுமன்ற முற்றுகை

நாடாளுமன்றம் முற்றுகை!மின்னம்பலம் :இந்தியாவில் 29 மாநிலங்களிலிருந்து விவசாயிகள் ஒன்றுகூடி, நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக, லட்சக்கணக்கான விவசாயிகள் இன்று (நவம்பர் 20) காலை ஊர்வலமாகப் புறப்பட்டார்கள்.
நதி நீர் இணைப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை என்பன உள்ளிட்ட பத்துக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை விவசாயிகள் முற்றுகையிடப்போகிறார்கள் என்ற செய்தியை
மின்னம்பலம்.காமில் நவம்பர் 14, 19 தேதிகளில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி, 29 மாநிலங்களிலிருந்து இன்று காலை, டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஒன்றுகூடிய லட்சக்கணக்கான விவசாயிகள் 11.00 மணியளவில் ஊர்வலமாகப் புறப்பட்டார்கள். தமிழக விவசாயிகள், தங்கள் கழுத்தில் எழும்புக் கூடுகளையும் , மண்டை ஓடுகளையும் அணிந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலம் ஜந்தர் மந்தர் சாலைக்குச் சென்று, அங்கே கூடியிருந்த பல்லாயிரம் விவசாயிகளை அழைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்கிறது. மாலை 4.00 மணி அளவில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசை விமர்சித்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களைப் பல்வேறு மொழிகளில் முழக்கமிட்டுச் செல்கிறார்கள் விவசாயிகள்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்துக்கு முன்பு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்லாயிரம் போலீஸார், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களுடன், தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி போலீஸுடன் துணை ராணுத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் எல்லை மீறினால் தடுக்கவும் தாக்கவும் தயாராகவிருப்பதாக டெல்லி போலீஸார் கூறியிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: