ஞாயிறு, 20 நவம்பர், 2016

மத்திய அரசை கண்டித்து 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் .. கலைஞர் அறிவிப்பு !

சென்னை, மக்கள் அவதிக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மக்கள் அவதி மத்திய பா.ஜ.க. அரசு, “அவசரக்கோலத்தில் அள்ளித்தெளி” என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று 8-11-2016 அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. ஏழையெளிய மக்கள், அன்றாடங் காய்ச்சிகள், வேலைகளுக்கும் செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள ஒரு சில ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன்னால் பல மணி நேரங்கள் “கியூ”வில் நிற்கின்ற கொடுமைகள் குறைந்தபாடில்லை.


வியாபாரிகள் எந்தவிதமான வியாபாரமும் இல்லாமல் தங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கின்றனர். பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் ஏழையெளிய, நடுத்தர மக்களின் துன்பங்களைக் களைய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வாதாடிய போதிலும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து எந்தப் பதிலும் கூறவில்லை. மற்ற மாநில முதல்-மந்திரிகள் இந்தப் பிரச்சினைக்காக மத்திய அரசை எதிர்த்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

24-ந்தேதி மனிதச் சங்கிலி

எனவே தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, தி.மு.க. சார்பில் வரும் 24-ந்தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மனிதச் சங்கிலி நடத்தப்படும்.

இந்த மனிதச் சங்கிலியில் கட்சி சார்பற்ற பொதுமக்களும், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்  dailythanthi.com

கருத்துகள் இல்லை: