வியாழன், 24 நவம்பர், 2016

மன்மோகன் சிங் :பண ஒழிப்பில் நடந்த கொள்ளை ! பேரழிவு !


இன்று 6-வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு சபையிலும் ரூபாய் நோட்டு விவகாரத்தால் அமளி ஏற்பட்டது.நாடாளுமன்றத்தின் மேல்சபையிலும், ரூபாய் நோட்டு விவகாரம் எதிரொலித்தது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் நிராகரித்தார். அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசவும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியால் மேல்சபை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

12 மணிக்கு பிறகு சபை கூடியது ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதம் நடந்தது. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி வந்ததையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதத்தை நடத்த அனுமதித்தனர். 12 மணிக்கு அவை கூடியபோது, பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு வந்தார். எனவே, எதிர்க்கட்சிகள் இனி விவாதத்தை தொடங்கலாம் என நிதி மந்திரி அருண் ஜெட்லி கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து, முன்னாள் பிரதமரும் தற்போதைய எம்பியுமான மன்மோகன் சிங் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மன்மோகன் சிங் பேசுகையில் "நாட்டின் நலனுக்கான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விளைவுகளை குறைத்து மதிப்பிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இது மாறிவிட்டது. இதனால் அமைப்பு சாராத தொழில்கள் மற்றும் கூட்டுறவு சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டிக்கிறேன். இதனால், வேளாண்மை உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை கடுமையாக பாதிப்படையும் வாய்ப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2% குறையும். கறுப்பு பண ஒழிப்பு அறிவிப்பால் மக்களுக்கு 50 நாட்கள் மட்டுமே இன்னல் ஏற்படும் என மோடி தெரிவிக்கிறார். ஆனால், இந்த குறிகிய கால 5௦ நாட்களிலேயே பொருளாதார பேரழிவு ஏற்பட்டு சாதாரண மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மக்களுக்கு கொடுக்கப்பட்ட 50 நாள் அவகாசம் மிகவும் குறைவானது.
எந்த நாட்டிலாவது, வங்கியில், மக்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம், ஆனால் எடுக்க முடியாது என்ற நிலை உள்ளதா. இதை பிரதமர் எங்கேயாவது கண்டிருக்கிறாரா. இந்த ஒரு நடவடிக்கையே கண்டனத்துக்கு போதுமானதாகும். பிரதமர் மோடியின் அறிவிப்பு நிர்வாக சீர்கேட்டின் நினைவு சின்னமாகும்
எனவே, இதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆக்கப்பூர்வமான திட்டத்தை பிரதமர் கொண்டு வரவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் இதிலிருந்து மீள்வதற்கான நடைமுறை வழிகளை கண்டுபிடிக்க பிரதமர் உதவி செய்வார் என நம்புகிறேன்." என்றார் இந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தும் பேசினார்.
மன்மோகன் சிங்கின் ஆர்ப்பாட்டமற்ற அமைதியான தாக்குதலை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்தார். ஆனால், அதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் சபையின் நடவடிக்கையை மட்டுமே கவனித்து விட்டு உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டதும் யாரிடமும் சரியாக பேசாமல் இறுக்கமான முகத்துடன் அவையில் இருந்து சென்றார். மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: