வெள்ளி, 25 நவம்பர், 2016

மதுரை கீழடியில் கிடைத்த தொல்லியல் பொருட்கள் டேராடூன் (கடத்தல் ) கொண்டு செல்லப்படுகிறது


மதுரை: மதுரையை அடுத்த கீழடியில் கிடைந்த தொல்லியல் பொருட்களை, ஆய்வுக்காக உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையிலிருந்து 17 கி.மீ., தூரத்திலுள்ள கீழடியில், 110 ஏக்கரில் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல் அகழாய்வு நடக்கிறது. இந்நாகரிகம் 2000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. கீழடியில் 5,300 பழங்கால பொருட்களை தொல்லியல்துறையினர் சேகரித்துள்ளனர். கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை, பெங்களூருவிலுள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்ல, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது. பெங்களூருவிற்கு கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.



3 மாதத்தில் ஆய்வு:

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சென்னை அருங்காட்சியகத்தில் ஆய்வுக்கான வசதி இல்லாததால், கீழடியில் கிடைத்த தொல்லியல் பொருட்களை உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு முன் தொல்லியல் பொருட்களை புகைப்படம் எடுத்து, தொல்லியல் துறையிடம் வழங்க வேண்டும். 3 மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கீழடியில் அகழ்வாராய்ச்சி முழுமையாக முடிந்த பிறகே அருங்காட்சியம் அமைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தினமலர்,காம்

கருத்துகள் இல்லை: