சனி, 26 நவம்பர், 2016

நெல்லை விவசாயி தற்கொலை.. சீட்டு பணத்தை வங்கியில் ஏற்க மறுப்பு ? அதை குறி வைத்த போலீஸ் ...?

நெல்லை பேட்டை அருகே கம்மாளன்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து விசாரிக்கும் விதமாக கம்மாளன்குளத்தை சேர்ந்த விவசாயிகளை காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர் அதில் ரமேஷ் (வயது 36) என்பவரும் ஒருவர்.
இந்நிலையில் சீட்டு கட்டியதில் இந்த மாதம் ரமேஷுக்கு சீட்டு கிடைத்துள்ளது. அதன் மூலம் அவர் கையில் கிடைத்த பணம் 1,10,000 ரூபாய். இந்தத் தொகையில் பெரும்பாலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் இருந்தததால், இதனை மாற்றினால்தான் விவசாயத்திற்கு வாங்கிய கடன்களை கொடுக்க முடியும் என கடந்த சில நாட்களுக்கு முன் ரமேஷ் இந்த பணத்தை அருகே உள்ள ராமையன்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்த சென்றுள்ளார்.
வங்கியில் இந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர் அதற்கான விவரம் சொல்லியுள்ளார். அவர்கள் ஏற்கவில்லை.
அதோடு நெல்லை டவுன் க்ரைம் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் ரமேஷை அழைத்து விசாரித்துள்ளனர். ரமேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் ஏற்கவில்லை. இந்த பணம் கொலை செய்ய உனக்கு கிடைத்த கூலியா என்றும் உன்னை சும்மாவிடமாட்டோம் தலைகிழாக தொங்கவிட்டு அடிப்போம் உனது இடுப்பு எலும்பையும் காலையும் ஒடித்துவிடுவோம் என்று ரமேஷையும் அவர் குடும்பத்தையும் வீட்டிற்கு வந்தும் காவல்நிலையத்திற்கு வரவழைத்தும் மிரட்டியுள்ளனர்.
கடன் வாங்கி விவசாயம் செய்யும் ரமேஷ் தனது பணத்தை மாற்றி எப்படி கடனை கொடுப்பது என்ற குழப்பம் ஒரு புறமும் காவல்துறையினரின் தொடர்ந்து மிரட்டல் ஒருபுறமுமாக மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். முடிவாக 24.11.16 அன்று விஷம் குடித்து விட்டார்.  விஷம் அருந்தியது தெரிந்து மருத்துவமனை சேர்க்கப்பட்ட நிலையில் இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார் .
மத்திய அரசின் தவறான முடிவும் காவல்துறையின் அணுகுமுறையும் தான் இந்த விவசாயின் தற்கொலைக்குக் காரணம். அதோடு ரமேஷ் தலித் சமுகத்தை சார்ந்தவர் என்பதால் காவல்துறையினர் மிகவும் மோசமாக சாதியரீதியாக அணுகியுள்ளனர் . ரமேஷின் தற்கொலை அரசும் காவல்துறையும் சேர்ந்து செய்த திட்டமிட்ட படுகொலை. ரமேஷின் மனைவியும் இரு பெண் குழந்தைகளும் இன்று அனாதரவாய் நிற்கிறார்கள்.
முருகன் கன்னா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர். thetimestamil.com

கருத்துகள் இல்லை: