வியாழன், 29 செப்டம்பர், 2016

விழுப்புரம் . மருந்து தெளித்த வெண்டைக்காய்: இரு மாணவர்கள் பலி!

மின்னம்பலம்,காம் ; பயிர்களுக்கு இடப்படும் ரசாயன உரங்களும் பூச்சி கொல்லி மருந்துகளும் விஷத்தன்மை கொண்டன. இந்த பூச்சி கொல்லிகள் பயிர்களில் சிறு அளவில் இருந்தாலே நமக்கு புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் தனியார் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த குறிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருடைய மகன் அய்யனார் (8), அம்மன்கொல்லைமேட்டை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் ராஜதுரை (11) ஆகிய இரண்டு பேரும் கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
அதை தொடர்ந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் இருவரும் வி‌ஷம் காரணமாக இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, திருக்கோவிலூர் துணைப் போலீஸ் கண்காணிப்பாளர் கீதா விசாரணை நடத்தினார். விசாரணையில், விடுதியின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வெண்டைக்காய் செடிக்கு பூச்சி மருந்து அடித்திருப்பதை அறியாமல் அதனை பறித்து சாப்பிட்டதால் இரண்டு மாணவர்களும் இறந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து, பாதுகாப்பற்ற முறையில் விடுதி நடத்தியதாக பள்ளி நிர்வாகி செல்வராஜ் (48), ஆசிரியை ராஜேஷ்வரி மற்றும் அதிக வி‌ஷத்தன்மை கொண்ட மருந்தை அடித்ததற்காக விவசாயி ராதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சி விடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெல்ல மெல்ல நம்மை கொல்லும் விஷமாக மாறும். பூச்சிக்கொல்லியை மருந்தை குடித்தால் உடனே மரணம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே பூச்சிக்கொல்லி மருந்து உணவு, நீர், காற்றுப் போன்றவை வழியாக நம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும். அப்போது நமக்கு உடனடி மரணம் ஏற்படவில்லை என்றாலும்கூட உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் என பல இடங்களில் இந்த நஞ்சு பரவும்போது ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகிறது. இதையெல்லாம்விட இப்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது என்பதுதான் உண்மை. அதிக மகசூலுக்காக தெளிக்கப்படும் மருந்துகளால் பயிர்கள், பூச்சிகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் அழிகின்றனர்.
கேரளாவில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, முந்திரி தோட்டங்களில் என்டோசல்பான் மருந்தைப் பயன்படுத்தி வந்தனர். இந்த கொடியப் பூச்சி மருந்தால் 500 பேர் பலவித நோயினால் இறந்தனர். மேலும், 4000க்கும் மேற்பட்டோர் பலவிதமான உடல் பாதிப்புகளால் அவதிப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: