வெள்ளி, 30 செப்டம்பர், 2016

இந்தியாவும் பாகிஸ்தானும் அணுஆயுத போர் புரிந்தால்... 21 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள்?

மின்னம்பலம்.காம் : ஒவ்வொன்றும் 15 கிலோ டன் ஹீரோஷிமா
வெடிகுண்டுக்கு சமமான நூறு அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்து இந்தியாவும் பாகிஸ்தானும் போர் புரிந்தால் இருபத்தியோரு மில்லியன் மக்களுக்கு மேலானோர் நேரடியாக கொல்லப்படுவர். உலகின் பாதி ஒசோன் பாதுகாப்பு படலம் அழிக்கப்படும். ‘ந்யூக்ளியர் விண்டர்’ காரணமாக உலகம் முழுவதும் விவசாயமும், பருவமழையும் பாதிக்கப்படும். இந்திய ராணுவம் ஆயுதப்போரை கருத்தில் வைத்திருக்கிறது. ஆட்சியில் இருக்கும் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அணு ஆயுதப்போர் நடத்த வேண்டும் என அவசரப்படுத்துகிறார். பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதிலுக்கு இந்தியாவை ‘அழித்துவிடுவதாக’ அச்சுறுத்துகிறார். இந்நிலையில் 2007ஆம் ஆண்டு மூன்று அமெரிக்க பல்கலைக்கழகங்களால் நடத்தப்பட்ட இந்த கணிப்புகள், அணு ஆயுதப்போருக்கு நாம் கொடுக்கவிருக்கும் விலையை அழுத்தமாக நினைவூட்டுகிறது.


பாஜக மக்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, ‘செப்டம்பர் 23ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலால் நூறு மில்லியன் இந்திய மக்கள் மரித்தால், அதற்கு இந்தியா கொடுக்கும் பதிலடி பாகிஸ்தானையே அழித்துவிடும்’ என்று கூறினார். ஆனால் யதார்த்தத்தில் விளைவுகள் அதை விட பெரியதாக இருக்கும். குண்டு வெடித்த முதல் வாரத்தில் இந்தியா, பாகிஸ்தானில் 21 மில்லியன் மக்கள், கதிர்வீச்சு விளைவுகளால் மரிப்பர் என்கிறது ருட்ஜெர்ஸ் பல்கலைக்கழகம், கொலராடோ - போல்டர் பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகம் அனைத்தும் இணைந்து செய்த ஆய்வு.
2015 வரை கடந்த ஒன்பது வருடங்களாக, இந்தியாவில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை விட 2,221 மடங்கு அதிகம் இது என்கிறது, தென் ஆசிய தீவிரவாத தரவுகள் குறித்த ஆய்வு ஒன்று. இந்தியாவில் அணு ஆயுதம் உபயோகிக்கப்பட்டால், உலகம் முழுவதும் இருக்கும் இரண்டு பில்லியன் மக்கள் கால நிலை மாற்றங்கள் காரணமாக பெரும் பஞ்சத்துக்கு ஆளாவர் என்கிறது சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு மருத்துவர்களின் கூட்டமைப்பு ஒன்று. 2013ஆம் ஆண்டு நடத்திய ஆய்வு இது.
2015 நிலவரப்படி பாகிஸ்தானிடம் 110 அல்லது 130 அணு ஆயுதங்கள் இருக்கலாம். 2011ஆம் ஆண்டு 90 முதல் 110 மட்டுமே இருந்தது என்கிறது சர்வதேச படை வலிமைக்குறைப்பு சமூகம் ஒன்று. இந்தியாவிடம் 110 முதல் 120 அணு ஆயுதங்கள் இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. காஷ்மீரின் உரி நகரில் 18 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பிறகே போர் குறித்த பேச்சு தொடங்கியது. குறிப்பிட்ட தாக்குதல், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை சேர்ந்த நான்கு தீவிரவாதிகளால்தான் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவிக்கிறது.

இந்தியா போர் குறித்து பேசுவதால், பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர், “பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம்” என்று தெரிவித்தார். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் திறன்கள், முன்னர் இந்தியா போரில் இறங்காமல் இருக்க காரணமாக இருந்திருக்கிறது. “இறுதியில், இந்திய எடுக்கும் நடவடிக்கைகள், குறிப்பாக ராணுவ நடவடிக்கைகள், முந்தைய நிலைமையை மோசமானதாக இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்” என் மனோஜ் ஜோஷி எழுதுகிறார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களில் 66% கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் ஏற்றப்படும் வகைகள். பாகிஸ்தானின் ஹஃப்ட் வகை ஏவுகணைகள், இந்தியாவை மனதில் வைத்தே மேம்படுத்தப்பட்டது, மேம்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானின் பெரும் அணு ஆயுத ஏவுகணை தாக்குதல் (எங்கிருந்து ஏவப்படுகிறது என்பதை பொறுத்து) - புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை என நான்கு நகரங்களையே குறி பார்க்கும் என்கிறார் சமீர் படில்.
இந்த எம்.ஆர்.பி.எம்-கள் (நடுத்தரத் தொலைவு ஏவுகணை வகைகள்) இந்திய ராணுவத்தின் முக்கிய தளங்களையும் குறி பார்க்கும் எனவும் படில் தெரிவிக்கிறார். பாகிஸ்தானின் 40 அணு ஆயுதங்கள், கௌரி வகை எம்.ஆர்.பி.எம். உடன் இணைத்தே இயக்கப்படலாம். இந்த ஏவுகணைகள் 1,300 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கக்கூடியது. இதை வைத்துக்கொண்டு டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், மும்பை, புனே, நாக்பூர், போபால் மற்றும் லக்னோவைத் தாக்க முடியும் என்கிறது பெங்களூரூ கல்வி நிறுவனம் ஒன்றின் 2006ஆம் ஆண்டு ஆய்வு.
ஷஹீன் வகை எம்.ஆர்.பி.எம்-களோடு பொருத்தக்கூடிய அணு ஆயுதங்கள் எட்டு பாகிஸ்தானிடம் இருக்கிறது. இந்த எம்.ஆர்.பி.எம். 2,500 கிலோமீட்டர் பயணிக்கத்தக்கது. கிழக்கில் இருக்கும் கொல்கத்தா உட்பட முக்கிய இந்திய நகரங்களை குறிவைக்க முடியும். கஸ்னாவி வகை ஏவுகணைகளோடு பொருத்தி இயக்கப்பட்டக்கூடிய அணு ஆயுதங்கள் 16 பாகிஸ்தானிடம் இருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. 270 கிலோமீட்டர் பயணிக்கும் ஆற்றல் இருக்கும் இந்த ஏவுகணை, டெல்லியை சுற்றியிருக்கும் பகுதிகள், லூதியானா, அகமதாபாத் ஆகிய நகரங்களை குறிவைக்கும். பாகிஸ்தானிடம் 750 கிலோமீட்டர் பயணிக்கும் கண்டம் தாவும் ஷஹீன் 1 (ஃபால்கன்) வகை ஏவுகணைகள் 16 இருக்கின்றன. இவை லூதியானா, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத்தை எட்டும் ஆற்றல் உடையவை.

பாகிஸ்தானிடம், அணு ஆயுதங்களோடு பொருத்தக்கூடிய, 60 கிலோமீட்டர் செல்லக் கூடிய, நாசர் ஏவுகணைகள் ஆறு இருக்கின்றன. இந்த அணு ஆயுத ஏவுகணைகள், முன்னேறும் இந்திய ராணுவத்தின் படைகளைக் குறி வைக்கலாம் என்கிறார் படில். பாகிஸ்தானிடம் எட்டு 350 கிலோமீட்டர் பாபர் க்ரூஸ் ஏவுகணைகள் இருக்கின்றன. ஏறத்தாழ 36 அணு ஆயுதங்கள் (பாகிஸ்தானுடைய அணு ஆயுதங்களில் 28%) விமானங்களால் செயல்படுத்தப்பட வல்லவை. அமெரிக்கா தயாரித்த F-16 A/B விமானம் 24 அணு குண்டுகளை இடவல்லது. பிரெஞ்சு தயாரிப்பான Mirage III/V விமானம் 12 அணு குண்டுகளைச் சுமக்கும்.
இந்தியா, ப்ரித்வி மற்றும் அக்னி தொகுதி, கண்டம் தாவும் ஏவுகணைகள் 56 எண்ணிக்கைகளை இறக்கியிருக்கிறது. இவை இந்தியாவிடம் இருக்கும் 106 அணு ஆயுதங்களில் 53 சதவிகிதத்தை சுமக்கிறது. இந்தக் கணக்கில் நீர்மூழ்கிகளில் இருந்து ஏவப்படும் கண்டம் தாவும் ஏவுகணையான K-15 சகரிகா வகை அணு ஆயுதங்கள் உட்படுத்தப்படவில்லை; இவ்வகை ஏவுகணைகள், அணுசக்தியில் இயங்கும் ஏவுகணை செலுத்தும் நீர்மூழ்கிக் கப்பலான, ஐ.என்.எஸ். அரிஹந்துக்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

“பாகிஸ்தானின் சிறிய பூகோள அளவை கணக்கில் கொள்ளும்போது, இந்தியா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், கராச்சி, நவ்ஷேராவில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை அலுவலகத்தைத்தான் குறி வைக்கும்” என படில் தெரிவிக்கிறார். இருப்பினும், “இந்த அணு ஆயுதத் தாக்குதல்கள், காற்றின் திசையைப் பொறுத்து, இந்தியா மற்றும் ஆஃப்கான் எல்லையையும் தாக்க வாய்ப்பிருக்கிறது” என்றும் அவர் எச்சரித்தார். 250 கிலோமீட்டர் செல்லும் ப்ரித்வி ஏவுகணை, இந்தியாவின் 24 அணு ஆயுதங்களை கொண்டு செல்லும். இவை, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், சியால்கோட், தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியைத் தாக்க வல்லது என்கிறது, 2015ஆம் ஆண்டின் இண்டியாஸ்பெண்ட் (IndiaSpend) ஆய்வு ஒன்று.
இந்தியாவிடம் 20 அணுகுண்டு தாங்கிய அக்னி I SRBM மற்றும் எட்டு அக்னி II இடைநிலை தூர ஏவுகணைகள் இருக்கின்றன. இவை முறையே 700 மற்றும் 2,000 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கவல்லது. இவை,பெரும்பாலும் லாகூர், இஸ்லாமாபாத், முல்தான், பெஷாவார், கராச்சி, கட்டா, குவாடார் உட்பட அனைத்து பாகிஸ்தான் நகரங்களையும் தாக்கக்கூடியது. அக்னி III, IV மற்றும் V மொத்த பாகிஸ்தானையும் எட்டும் திறனுடையது. ஆனால், அவை சீனா நோக்கியே திசை திருப்பப்பட்டிருக்கின்றன. மேலும் இந்தியாவிடம், 350 கிலோமீட்டர் தனுஷ் எஸ்.ஆர்.பி.எம் (குறுகிய தொலைவு செல்லும் கண்டம் தாண்டும் ஏவுகணை) ஒன்று இருக்கிறது. இதையும் அணு ஆயுதங்களோடு இணைத்து இயக்கலாம். இந்தியாவின் விமானங்களால் 45% இந்திய அணு ஆயுதங்களைச் சுமக்க முடியும். இந்திய விமானப்படையின் ஜாக்குவார் போர் விமானங்களால் 16 அணு ஆயுதங்களைச் செலுத்த முடியும். பிரெஞ்சு கட்டமைப்பான மிராஜ் 2000 ஃப்ளீட், 32 அணு ஆயுதங்களை செலுத்தவல்லது.

கட்டுரையாளர் குறிப்பு: அபீத் சிங் சேத்தி, சுதந்திர ஊடகவியலாளர், ராணுவ ஆய்வாளர்
http://www.indiaspend.com/cover-story/the-global-cost-of-india-pak-nuclear-war-27563

கருத்துகள் இல்லை: