வெள்ளி, 30 செப்டம்பர், 2016

மிஸ்டர் கழுகு : அப்போலோ நிமிடங்கள்! - மன்னார்குடி மருத்துவர்கள்

விகடன்,காம் ;அப்போலோவில் முதலமைச்சர் ஜெயலலிதா அட்மிட் ஆகி ஒரு வாரத்துக்கு மேல் ஓடிவிட்டது. அரசாங்கம், அப்போலோ நிர்வாகம், ஜெயலலிதாவைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. முதல்வர் எப்போது மருத்துவ மனையைவிட்டு வருவார் என்பது இன்றுவரை முடிவாகவில்லை’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகார், குறிப்பு நோட்டில் ஆழ்ந்தார்.‘முதலமைச்சரின் உடல்நிலை பற்றி மத்திய அரசு அறிக்கை வாங்கியதாமே?’’/>‘‘மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நாள்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டு​தான் இருக்கின்றனர். ஆனால், அந்த அறிக்கைகள் மத்திய ஆட்சியாளர்களுக்குத் திருப்தி தரவில்லை. அந்த அறிக்கைகளில் கூடுதல் விவரங்கள் என எதுவுமில்லை. ‘அமைச்சர்​களுக்கே அப்போலோவில் 144 தடை. யாரும் ஜெயலலிதாவை போய்ப்  நேரடியாக பார்க்கவே முடிய​வில்லையே? பிறகு, எப்படி உண்மை​யான அறிக்கையை கொடுக்க முடியும்?’ என இங்குள்ள, அதிகாரிகள் சொன்னார்கள். இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தையே தொடர்பு கொண்டுப் பேசி, அறிக்கை கேட்டார்களாம்”
‘‘கொடுத்தார்களா?”
‘‘கொடுக்கப்பட்டு இருக்கலாம்! அதேபோல் கவர்னர் கேட்டபோதும் அவருக்கு முழு​விவரங்கள் தரப்படவில்லையாம். முதலமைச்சரைச் சுற்றி மன்னார்குடி குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரையும் அவர்கள் பார்க்க அனுமதிப்பதும் இல்லை. தொற்றுநோய் வல்லுநர் டாக்டர் ராமசுப்பிரமணியன், ஜெயலலிதாவின் ஆஸ்தான டாக்டர்கள் சாந்தாராம், பி.சி.ரெட்டி ஆகியோர் தலைமையில் செயல்படும் டாக்டர்கள் குழு ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்கிறது. இந்தக் குழுவில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகள் பிரபாவின் கணவர் டாக்டர் சிவக்​குமார்், டாக்டர் பாமா, மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சுப்பையா, டாக்டர் விஸ்வநாதன், டாக்டர் வெங்கட், டாக்டர் ரமேஷ் ஆகியோர் உள்ளனர். 18 வகையான மருத்துவப் பரிசோதனைகள் இதுவரை முடிந்துள்ளன. நுரையீரல், இதயம், கிட்னி, கல்லீரல் செயல்பாடுகள் பற்றிய அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப் பட்டிருக்கின்றன. அவற்றின் ரிசல்ட் இன்னும் முழுமையாக வரவில்லை என அறிக்கை கொடுத்துள் ளார்களாம். ஆனால், இந்த விவரங்களை உறுதிசெய்து கொள்வதற்காகவே, மத்திய அரசு மேலும் ஒரு வகையில் நூல்விட்டது. அதுதான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் அட்டன்டென்ட்ஸ். ஆனால், மத்திய அரசின் அந்த வியூகம் பலிக்க வில்லை. காரணம், பொன்.ராதாகிருஷ்ணனும் முதலமைச்சரைப் பார்க்கவில்லை. மாறாக, முதலமைச்சரின் செயலாளர் வெங்கட்ரமணனை மட்டும் பார்த்துவிட்டு, அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் ‘உடல்நலம் குணமடைய வாழ்த்துகள்’ என குறிப்பு எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டார்.”

‘‘மருத்துவக்குழுவைக் கண்காணிக்கும் மன்னார்குடி மருத்துவர்கள் யார்?”
‘‘டாக்டர் சிவக்குமார்தான், முதலமைச்சரின் சிகிச்சை தொடர்பான எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொள்கிறார். அப்போலோவில் அவர்தான் ‘ஆல் இன் ஆல்’ என்று வலம் வருகிறார். டாக்டர் சிவக்குமார், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரும்கூட. அவர், அங்கு பிளாஸ்டிக் சர்ஜனாக உள்ளார். டாக்டர் சிவக்குமார் தவிர, திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கியும் அவருடைய கணவர் டாக்டர் விக்ரமும் முதலமைச்சருக்கான சிகிச்சைகளை கவனித்துக்கொள்கின்றனர். இவர்களின் மேற்பார்வையில்தான், அப்போலோ டாக்டர்கள் குழு செயல்படுகிறதாம். இவர்கள்தான் ஜெயலலிதாவுக்கும் அப்போலோ நிர்வாகத்துக் குமான மீடியேட்டர்களாக உள்ளனராம். சில நேரங்களில் சீனியர் டாக்டர்களுக்கும் இவர்களுக்குமே மாறுபட்ட கருத்துக்கள் வந்துவிடுகிறதாம். தமிழகத்தில் பிரபலமான டாக்டர்களை ஒதுக்கிவிட்டு வெளிமாநில, வெளிநாட்டு டாக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகக் குறை சொல்லப்படுகிறது. அப்போலோவில் இருக்கும் பிரபல இதய மருத்துவரைத்தான் டெல்லி, மும்பை என அழைப்பார்கள். ஆனால் அவரை இங்கே ஒதுக்கிவிட்டார்கள். இ.என்.டி. தொடர்பாக மும்பையில் இருந்து ஒரு மருத்துவர் வந்தார். அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவர் பெயரைக் குறிப்பிட்டு ‘அவரது ரிப்போர்ட் எங்கே?’ என கேட்டுள்ளார். ‘அவரை நாங்கள் தொடர்பு கொள்வது இல்லை’ என சொல்லி இருக்கிறார்கள். ‘நானே அவரைத்தான் கலந்தாலோசனை செய்வேன். நீங்கள் அவரை அழைக்க மாட்டேன் என்கிறீர்களே’ என்றார். ஜெயலலிதாவுக்கு இதுவரை பார்த்த மருத்துவர்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். தொழில் முறை ரீதியாக அப்போலோவுக்கு வராத மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. வெளிநாட்டு, வெளிமாநில மருத்துவர்களாக இருந்தால் அவர்கள் ஆலோசனை கேட்கப்படுகிறது.’’
‘‘முதலமைச்சர் எப்போது வீடு திரும்புவார்’’

‘‘22-ம் தேதி மருத்துவமனைக்குப் போனார்.

23-ம் தேதி மதியம் வந்துவிடுவார் என்றார்கள். அப்படியே நாட்கள் தள்ளிப் போயின. 28-ம் தேதி புதன்கிழமை வீடு திரும்புவார் என சொல்லப்பட்டது. அந்த நாளில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து கிடைக்கும் என்பது ஜெயலலிதாவின் நம்பிக்கையாம். ஆனால், அவருடைய உடல்நிலை புதன்கிழமை மீண்டும் கொஞ்சம் பாதிக்கப்பட்டதால், அன்றும் அவர் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ‘சில நேரங்களில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது’ எனவும் தகவல்கள் கசிகின்றன. சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் வேறு அறைக்குப் போகச் சொல்லிவிட்டனர். முதலமைச்சருடன் ‘பாரா மெடிக்கல்’ பணியாளர்கள்தான் எப்போதும்  இருக்கின்றனர். அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பணியாளர்களின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு டாக்டர்களின் செல்போன் எண்களையும் போலீஸ் வாங்கி வைத்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, தற்போது போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் மருத்துவ உபகரண வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றனவாம். ஒரு ஹை கிளாஸ் மருத்துவமனையில் இருப்பதுபோல், அங்கே ஏற்பாடுகள் நடக்கின்றன. அது முடிந்ததும், ஜெயலலிதாவின் உடல்நிலையும் கொஞ்சம் தேறியதும் டிஸ்சார்ஜ் ஆவாராம். அதற்கு எப்படியும் இன்னும் ஒரு வார காலம் ஆகலாம் என்​கிறார்​கள்.”

‘‘ஓஹோ!’’
‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை இந்த விவகாரத்தில் இழுத்துவிட சிலர் முயற்சித்தார்​களாம். முதலமைச்சரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. ஆனால், வெளியில் செய்திகள் வருவது இல்லை. மேலும், மன்னார்குடி குடும்பம்தான் ஒட்டுமொத்தமாக மருத்துவமனையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுபற்றி, கருணாநிதியை ஒரு அறிக்கை வெளியிடச் சொன்னார்களாம். அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட கருணாநிதி, ‘இப்போதைக்கு அப்படிச் செய்வது நன்றாக இருக்காது’ என்று சொல்லிவிட்டாராம். இதில் எதிர்முகாம் எல்லாம் முக்கியமில்லை. அப்போலோ மருத்துவமனைதான் மிகவும் இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிறதாம்”

‘‘என்ன சிக்கல்?”
‘‘முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான தகவல்களை அவர்களால் வெளியில் சொல்ல முடியவில்லை. ‘நன்றாக இருக்கிறார்’ என மருத்துவமனை அறிவிக்கிறது. ஆனால், வெளியில் பரவும் வதந்திகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. இது அ.தி.மு.க. தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சையில் இருப்பதால் போலீஸ் நெருக்கடி வேறு அதிகமாக உள்ளது. இது மற்ற நோயாளிகள், அவர்களது உறவினர்களைப் பாதிக்கிறது.  புற நோயாளிகளின் வருகையே குறையத் தொடங்கிவிட்டதாம். வெளிநாட்டு, வெளிமாநில நோயாளிகளுக்கு ‘நம்மூர்’ அரசியல் எல்லாம் புரியாது அல்லவா? மருத்துவர்கள் நினைத்த நேரத்துக்கு மருத்துவ மனைக்குள் செல்ல முடியவில்லை. வெளியே போக முடியவில்லை. ஒரு மருத்துவரை இரண்டரை மணிநேரம் வெளியில் காக்க வைத்துத்தான் உள்ளே விட்டுள்ளார்கள். மருத்துவமனை நிர்வாகம் இதுசம்பந்தமாக கவலையோடு பல பிரச்னைகளைப் பேசி உள்ளதாம்.”

‘‘ம்.’
‘‘முக்கியஸ்தர்கள் எனக் கட்சியினர் இதுவரை நம்பிக்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களுக்கே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எதுவும் தெரியவில்லையாம். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளிவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்​களுக்கான பட்டியல், மருத்துவமனையில் மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம், சீனியர்கள்கூட முதலமைச்சரை பார்க்க முடியவில்லை என்ற தகவல்கள் எல்லாம் கேள்விப்பட்டு கட்சியினர் கடும் விரக்தியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருக் கிறார்கள். கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்பதை யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். அது அவர்களைக் கடுமை​யாக சோர்வடைய வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் என்றாலும், அ.தி.மு.க-வை அமோகமாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைத்த கொங்கு மண்டலத்தில், இந்த அதிருப்தியும் அவநம்பிக்கையும் கடுமையாக இருக்கிறது. காரணம் அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கொங்கு மண்டலத்தில் நடக்கும் விஷயங்கள் அ.தி.மு.க-வை தஞ்சை மாவட்டத்துக்கு நகர்த்தி விடும் என்ற அச்சம் கொங்கு மண்டலத்துப் பெருந்​தலைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த அச்சத்தை அவர்களது நல விசாரிப்புகளில் தெரிந்துகொள்ள முடிகிறது” என்ற புதுக்குண்டு தூக்கிப் போட்டபடி பறந்தார் கழுகார்! சில மணி நேரம் கழித்து ‘அலார்ட்’ என தலைப்பிட்டு ஒரு வாட்ஸ் அப் தகவலை அனுப்பினார்.
படம்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்,
அட்டைப் படம் :க.பாலாஜி

கருத்துகள் இல்லை: