புதன், 9 டிசம்பர், 2015

காப்பாற்றுங்கள்... கதறிய போன் குரல்! எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் இல்லத்தைச் சேர்ந்த 100-க்கும்

ம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீடும் இந்த மழையில் தப்பவில்லை. எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் இல்லத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழ்ந்தைகள் வெள்ளத்தில் தத்தளித்தனர். ஒரு வழியாக அவர்களைக் காப்பாற்றி தீயணைப்பு வீரர்கள் கரை சேர்த்தனர். எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன், ‘திடீர்னு வெள்ளம் வீட்டுக்குள்ளே வந்துடுச்சு. என்ன பண்றதுன்னு புரியல. தாத்தா சேர்த்துவெச்ச பொருள்கள் எல்லாம்  அடிச்சுட்டு போயிடுச்சு. நாங்க உயிர் தப்பிச்சா போதும்ங்கற நிலைமை. மேயருக்கு போன் செய்தோம். பெரிசா ரெஸ்பான்ஸ் இல்லை. அப்புறமா ஃபயர் சர்வீஸ் வந்துதான் எங்களைக் காப்பாத்தி எதிர்ல இருக்குற ஃப்ளாட்ல கொண்டுபோய் சேர்த்தாங்க” என்று சொல்லி இருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் இவர்!

காப்பாற்றுங்கள்... கதறிய போன் குரல்!
கடந்த செவ்வாய் அன்று இரவு 10 மணிக்கு முதல்வரின் செயலாளர் ஒருவர், அமைச்சர் தங்கமணியை வயர்லெஸ்ஸில் அவசரமாகத் தொடர்புகொண்டாராம். தாம்பரம், ஊரப்பாக்கம் ஏரியாவில் படகில் சென்று மீட்பு நடவடிக்கையில் இருந்த தங்கமணி பதறிப்போய் என்னவென்று கேட்டிருக்கிறார். ‘மண்ணிவாக்கம் அருகே ஒரகடம் செல்லும் ரோட்டின் குறுக்கே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நான்கு மணி நேரமாக நான்கு பஸ்கள் ஒரே இடத்தில் நகரமுடியாதபடி சிக்கித் தவிக்கின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருக்கிறார்கள். நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. உடனே போய் பயணிகளை காப்பாற்றுங்கள்’ என்று தகவல் சொல்லப்பட்டது. தடதடவென அமைச்சர்கள் வேலுமணி, பழனியப்பன், சின்னையா... மூவரும் ஸ்பாட்டுக்கு விரைந்துள்ளனர். காட்டாற்று வெள்ளம் பஸ்ஸின் ஸீட் வரை வந்துவிட்டதாம். சில விநாடிகள் தாமதித்து இருந்தாலும், பஸ்ஸை வெள்ளம் இழுத்துச் சென்றிருக்கும். நல்லவேளையாக, மீட்புப்பணி அதிகாரிகள் பட்டாளமே அங்கு வந்துவிட்டதாம்.
இரவு நேரத்தில் அங்கே தனியார் பஸ் ஒன்று பிரேக் டவுன் ஆகி நின்றுவிட... பின்னால் வந்த வேன், அரசு பஸ், லாரி என்று அடுத்தடுத்து முன்னே போகமுடியாமல் நின்றுவிட்டதாம். 102 பயணிகள் பஸ்களில் இருந்தார்களாம். காட்டாற்று வெள்ளம் ரோட்டை தாண்டி ஓடியதாம். நேரம் ஆக ஆக நீரின் மட்டம் உயர்ந்துகொண்டே வந்ததாம். நல்லவேளையாக, பயணிகள் அத்தனை பேர்களையும் காப்பாற்றிவிட்டனர்!
‘‘எங்களுக்கு நிறைய வேலை இருக்கு!”
உலக அதிசயமாக தமிழக அதிகாரிகள் கோட்டையில் நிருபர்களைச் சந்தித்தார்கள்.
தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுடன்  அனைத்துத் துறைகளின் செயலாளர்கள் இருந்தார்கள். அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் இருந்தார்கள். வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை துறைச் செயலாளர்கள் விளக்குவதற்காகக் கூடினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், ‘முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க...’ என்றே ஆரம்பித்தார்கள்.
சுகாதாரத் துறை செயலாளரான ராதாகிருஷ்ணன்  பேட்டி அளித்தபோது, மியாட் மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து குறிப்பிட்டார். மியாட் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால், நோயாளிகளை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்று அந்த மருத்துவமனைக்கு ஆதரவாக ராதாகிருஷ்ணன் விளக்கம் கொடுத்தார். அப்போது ஒரு நிருபர், ‘வளவள என்று பேசாதீர்கள். கரன்ட் இல்லாத காரணத்தால் ஆக்ஸிஜன் இல்லாமல்  அவர்கள் இறந்தார்களா என்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்”  என்று கேட்டார்.
அடுத்து,‘மியாட் மருத்துவமனை தாழ்வான பகுதியில் இருக்கிறது’ என்று ஞானதேசிகன் சொன்னபோது, ‘அப்படியென்றால் அந்த மருத்துவமனைக்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மழுப்பலாகவே அவர் பதில் சொன்னார்.
ஒட்டுமொத்தத்தில், கேள்விகளால் அரசு செயலாளர்கள் அனைவரும் துளைத்து எடுக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில், ‘நிறைய நேரம் உங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நாங்கள் செல்ல வேண்டும்’ என்று சொல்லி பேட்டியை அவசர அவசரமாக முடித்துவிட்டு, ஆளை விட்டால் போதும் என்று அதிகாரிகள் அத்தனை பேரும் அங்கிருந்து பறந்துவிட்டார்கள். விகடன்.com

கருத்துகள் இல்லை: