செவ்வாய், 8 டிசம்பர், 2015

சென்னை மழைக்கு எல் நினோ மட்டுமா ? காங்கிரீட் பாலைவனமாக சென்னை மாற்றப்பட்டிருக்கிறது..

இயற்கையின் விதிகளை புரிந்து கொள்ளுதல் அறிவியலின் சாரம். இந்த புரிதல் அதிகரிக்க அதிகரிக்க இயற்கையின் மீதான மனித சமூகத்தின் ஆளுமை அதிகரிக்கிறது. நேர்மறையில் இது இயற்கைக்கும் அதன் நீட்சியான மனித சமூகத்திற்கும் வளர்ச்சி குறித்த வழிகளை திறக்கிறது. அந்த வளர்ச்சியே இன்றைய நவீன வாழ்க்கைக்கு அச்சாரம். இன்னொருபுறம் அந்த வளர்ச்சி ஒரு சேர மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் சமமாக பயன்படுவதில்லை. வர்க்கங்களாகவும், ஏழை மற்றும் ஏகாதிபத்திய நாடுகளாகவும் பிரிந்து விட்ட உலகில் இயற்கைக்கும் மனித சமூகத்திற்குமான முரண்பாடு வெறும் வளர்ச்சியையும் மட்டும் கொண்டு வருவதில்லை, அழிவையும் சேர்த்து கொண்டு வருகிறது.
சென்னை மழை வெள்ளத்திற்கு இந்தக் காரணங்கள் அனைத்தும் அடிப்படையாக இருக்கின்றன. தமிழக அரசின் அலட்சியம் தோற்றுவித்திருக்கும் பயம் மக்களிடையே இருப்பதால் கால நிலை மற்றும் மழை, வானிலை குறித்த பல்வேறு புரளிகளையும், வதந்திகளையும், அறிவியல் பூர்வமற்ற கணிப்புகளையும் நம்புகிறார்கள். வதந்திகளாகவும் பேசுகிறார்கள்.

அது குறித்து புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வானிலை குறித்து நாம் சிறிது அறிய வேண்டும். சென்னை மழைக்கு காரணமாக பேசப்படும் எல் நினோ அதில் ஒன்று.
எல் நினோ என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பகுதியில் வழக்கத்திற்கு மாறான கடற்பரப்பின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் சூடேறிய நீரோட்டம் எல் நினோ (El Nino) எனப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலின் தட்பவெப்பம் வழக்கத்துக்கு மாறாக உயர்வதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு, கடலின் நீரோட்டம், கடற்பரப்பின் காற்றுவீச்சு இவற்றைக் உள்ளடக்கிய வாக்கர் சர்குலேஷன் (Walker circulation) எனப்படும் பிரமாண்டமான சுழல்வட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சூரிய வெப்பத்தால் நீர் சூடேறி அலைகள் மற்றும் வளிமண்டல காற்றின் காரணமாக கடலின் ஆழத்திற்கு வெப்பம் பரவாமல் ElNino-outlines
மேற்பரப்பில் மட்டும் பரவுகிறது. இதனால், ஆழ்கடல் பகுதியில் நீரின் வெப்பநிலை மேற்பரப்பிலும், ஆழத்திலும் சமமாக இருப்பதில்லை என்பதோடு கடலில் நீரோட்டங்கள் ஏற்படுகின்றன.
ஓரிடத்தில் உள்ள காற்று வெப்பத்தினால்  விரிவடைந்து எடைகுறைந்து மேலெழுகின்றது. இதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மற்றொரு இடத்திலிருந்து காற்று நகர்ந்து வருவதையே காற்று வீசுவதாக உணர்கிறோம், அறிகிறோம். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பமண்டலங்களில் இருந்து நிலநடுக் கோட்டை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் வியாபாரக் காற்றுக்கள் (Trade Winds) என்படுகின்றன.
இயல்பாக, மேற்கு வெப்பமண்டல பசிபிக் பகுதியானது அதாவது ஆஸ்திரேலியா – இந்தோனேசிய பகுதி, சூடான ஈரமானதெரு குறைந்த காற்றழுத்த அமைப்பாகும். வறண்ட குளிரான கிழக்கு வெப்பமண்டல பசிபிக் மண்டலம் அதாவது, தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் கடற்பகுதி, உயர் அழுத்தப் பகுதியாகும். இது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே ஒரு அழுத்த சரிவை (pressure gradient) ஏற்படுத்தி கடலின் மேற்பரப்பின் காற்றை கிழக்கிலிருந்து மேற்காக வீசச்செய்கிறது.
Walker_ElNinoமேற்கு வெப்பமண்டல பசிபிக் கடலின் சூடான நீரானது அதன் மீதான காற்றை சூடாக்குவதுடன் அதற்கு நீராவியின் மூலம் ஈரப்பதத்தை அளிக்கிறது. இக்காற்று மேலெழும்பி செல்லும் போது மேகமாக மாறுகிறது. இந்த மேகங்கள் மழையாகப் பொழிந்த பின் வறண்ட காற்று வளிமண்டல மேலடுக்கில் உயரழுத்தமாக மாறி கிழக்கே சென்று, பின் குளிர்ந்து மேற்கு நோக்கி பயணித்து சுழற்சி வட்டத்தை பூர்த்தி செய்கிறது. இச்சுழற்சியே வாக்கர் சர்குலேஷன் எனப்படுகிறது. இது உலகம் முழுமைக்கும் குறிப்பாக ஆஸ்திரேலியா, தென் அமெரிக்க நாடுகளில் மழை பொழிவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இவ்வழக்கமான நிகழ்வு தலைகீழாக மாற்றுவதே எல் நினோ – தென் திசை அலைவு (El Nino-Southern Oscillation) எனப்படுகிறது. எல் நினோவின் போது வழமைக்கு மாறாக கிழக்கு பசிபிக் வெப்பமண்டலம் சூடான அமைப்பாக மாறும். இதனால் உலகம் முழுவதும் பருவநிலையில் வழக்கத்திற்கு மாறான பெருமழை, கடும் வறட்சி போன்ற விளைவுகளை ஏற்படுகிறது. சராசரியாக இரண்டிலிருந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை எல் நினோ நிகழ்வுகள் நடந்தாலும், 1982-83-ம் ஆண்டும், 1997-98-ம் ஆண்டும் நிகழ்ந்தவையே இது வரை உட்சபட்ச எல்நினோ நிகழ்வுகளாக பதிவாகியிருந்தன.
எல் நினோவைப் போலவே இந்தியப் பெருங்கடல் வெப்பமண்டலத்தில் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு இடையில் வெப்பநிலை மாற்றமடைவது இந்தியப் பெருங்கடல் வெப்ப இருமுனை (Indian Ocean Dipole) எனப்படுகிறது.indian_ocean-dipole
எல் நினோ, இந்தியப் பெருங்கடல் வெப்ப இருநிலை, வினோதமான வானிலை, காற்று மேலடுக்கு விலக்கம் ஆகிய பல்வேறு நிகழ்வுகளின் அரிய ஒன்றினைவே கடந்த டிசம்பர் 1 மற்றும் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த அதி கனமழைக்கு காரணமென ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
நடப்பு 2015-ம் ஆண்டின் எல் நினோவால் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதி (தென் அமெரிக்காவின் மேற்கு கடல்) இதுவரை கடந்த எல் நினோக்களைக் காட்டிலும் மிக அதிக வெப்பமடைந்துள்ளது. மேலும், இவ்வாண்டு இந்தியப் பெருங்கடல் வெப்பமடைவது வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்ட ஆண்டாகவும் பதிவாகியுள்ளது. இந்த கடுமையான எல் நினோ நிகழ்வின் காரணமாக, இந்தியப் பெருங்கடலில் கிழக்கில் வெப்பமாகவும், மேற்கில் குளிர்ந்த நிலையும் கொண்ட நேர்மறை வெப்ப இருமுனை (Positive Dipole) உருவானதும் கூட தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வழுவான வானிலை அழுத்த அமைப்புகளை உருவாக்க காரணமாக இருந்திருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலடுக்கில் ஈரப்பத வெளியேற்றம் மிக வலுவாக இருக்கும் நிலைக்கு மேலடுக்கு விலக்கம் (Upper Level Divergence) என்று பெயர். மிக மிக அரிய ஒன்றிணைவாக கீழடுக்கில் காற்று ஈரப்பதம் மிக அதிகமாகப் பெற்ற அதே நேரம் மேலடுக்கு விலக்கமும் நிகழ்ந்ததும், ஒரே நாளில் 490மி.மீ வரலாறு காணாத மழை பெய்ய காரணமாக இருந்ததாக புனே வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குனர் முகபாத்யாய தெரிவித்துள்ளார்.
எல் நினோ உருவாவதற்கான காரணங்களை சந்தேகத்திற்கிடமின்றி அறிவியியல் உலகம் இன்னும் கண்டறியவில்லை. இன்னும் ஆய்வு செய்கிறது. ஆயினும், எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் – பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
நியூ சயிண்டிஸ்ட் (New Scientist) பத்திரிக்கையின் புள்ளி விவரங்களின் படி 1906-ம் ஆண்டிலிருந்து 2005-ம் வரையிலான காலத்தின் புவிவெப்பமடைதலுக்கு 22%-க்கும் மேல் அமெரிக்கா பங்களித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் மட்டுமே 30%-க்கும் மேற்பட்ட கரியமில வாயுவை வெளியேற்றி புவிவெப்படைதலுக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
புவி வெப்பமாதல், பெருங்கடல் வெப்பமாதல் பேன்றவையே இதைப் போன்ற பெருமழைக்கு எரிசக்தியாக இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் எரிக் ஹால்தஸ் (Eric Holthaus) தெரிவித்துள்ளார்.
இந்த கனமழைக்கு இத்தகைய காரணிகள் இணைந்து பங்களித்திருந்தாலும், ஏரிகளையும் அவற்றின் வடிகால்களையும் பராமரிக்காததுடன் அவற்றின் ஆக்கிரமிப்பிற்கு துணை நின்ற அரசு தான் இந்தப் பேரழிவிற்கு மிக மிக்கிய காரணம். ஏகாதிபத்திய நாடுகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்ட பிறகு, மேற்கத்திய நாடுகளின் நலனுக்கேற்ற வகையில் நமது பொருளாதாரம் சுரண்டப்படுகிறது, மாற்றப்படுகிறது. அப்படித்தால் சென்னை போன்ற ஊதிப்பெருக்கி உப்பவைக்கப்பட்ட செயற்கையான நகரங்கள் எந்த திட்டமிடலும், வசதிகளுமின்றி விரிகின்றன. சென்னை நகரம் நமது தமிழக மக்கள், தமிழக பொருளாதாரத்தின் நலனுக்காக உருவாகி வளரவில்லை என்பதே முக்கியம்.
இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுயநிதிக் கல்லூரிகள் அனைத்திற்குமான காங்கிரீட் பாலைவனமாக சென்னை மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஓட்டுக் கட்சிகள் முதல் அதிகார வர்க்கம் வரை கழிவை வாங்கிக் கொண்டு அழிவுக்கு துணை போகின்றனர்.
சென்னை மியாட் மருத்துவமனையில் நோயாளிகளின் படுகொலைக்கு அடையாற்றை மறித்துக் கட்டிடம் கட்டிய நிர்வாகமும், அதற்கு அனுமதியளித்த அரசுமே காரணமே அன்றி எல் நினோ அல்ல. இதே போல், பெரும்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துள்ள குளோபல் மருத்துவமனை, ஏரிகளை ஆக்கிரமித்துள்ள சத்தியபாமா, எஸ்.ஆர்.எம் கல்லூரிகள், கூவம் நதியை மறித்துக் கட்டப்படுள்ள ஷாப்பர்ஸ் ஸ்டாப் வணிக வளாகம்… என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
ஆகவே வானிலை பற்றிய அறிவு மட்டுமே மழை வெள்ள அழிவை தடுத்து விடாது. அரசியல் குறித்த அறிவும் தேவை.
– மார்ட்டின் வினவு.com

கருத்துகள் இல்லை: