திங்கள், 29 ஜூன், 2015

ஊழல் டெக்னிக்கில் ஆண்களை பின்னே தள்ளி சுஷ்மா சுவராஜ் & வசுந்தரா ராஜி கும்பல் முன்னேறியது!

பாரதிய ஜனதா கட்சி முதலாளிகளின் கட்சி என்பதை புதிதாக கண்டு பிடித்துச் சொல்லத் தேவையில்லை. இந்துத்துவ இயக்கங்களின் மூளை பார்ப்பனியம் என்றால் அவற்றின் இதயம் பரிவார இயக்கங்களின் புரவலர்களாகிய பனியாக்கள். பனியா முதலாளிகளுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் உள்ள நேரடி உறவு பழைய விசயமென்றாலும், அது இப்போது கள்ள உறவாக சந்தி சிரிப்பது கொஞ்சம் புதிய விசயம்.
மன்மோகன் சிங் அரசின் நிலக்கரி ஊழலை “கோல்கேட்” என்று அழைத்த ஊடகங்களை தற்போதைக்குப் பிடித்தாட்டுவது ’லலித்கேட்’ எனப்படும் மோடி அரசின் ஊழல். லலித்கேட் ஊழலைப் புரிந்து கொள்ள அதன் வரலாற்றை கொஞ்சம் பார்த்து விடுவோம்.

கிரிக்கெட் பணமரம்
கிரிக்கெட்டை பணம் காய்ச்சி மரமாக மாற்றுவது என்ற முதலாளிகளின் ’ஆராய்ச்சி’.
இந்தியர்களின் கிரிக்கெட் பித்தை தூண்டி விட்டு முக்தி நிலை அடைய வைத்த அதே தொண்ணூறுகளில்தான் ‘விளையாட்டை’ உருவியெறிந்து விட்டு கிரிக்கெட்டை பணம் காய்ச்சி மரமாக மாற்றுவது எப்படியென்ற ’ஆராய்ச்சி’யும் முதலாளிகளால் துவங்கப்பட்டது.
கூடவே பிரபலமாகி வந்த தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சி முதலாளிகள், விளையாட்டை நேரலையாய் ஒளிபரப்புவது மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் விளம்பர வருவாயை இனம் கண்டனர். இதில் பங்கை சுருட்ட ருப்பர்ட் முர்டாச் துவங்கி இந்திய முதலாளிகள் வரை போட்டா போட்டியில் இறங்கியிருந்தனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பது பழைய மன்னர் பரம்பரையிலிருந்து அரசியல் கட்சிகளில் தலைவர்களாய் வளர்ந்தவர்கள் மற்றும் புதிய தரகு முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு உண்டு களித்திருக்கும் ரோட்டரி கிளப்பாக இருந்தது. கோடிக்கணக்கான இந்தியர்களிடம் இரசனையை திணித்து கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் இந்த வாரியம் அரசினுடையது அல்ல. போட்டிகளை நேரலையாய் ஒளிபரப்புவது உள்ளிட்டு கிரிக்கெட் விளையாட்டின் வர்த்தகத்தை கட்டுப்படுத்து வரையிலான அனைத்து நிதி நடவடிக்கைகளும் இயல்பாகவே இரகசியத் தன்மையோடும் முத்லாளிகளின் ஏக போக கூட்டமைப்புகளால் (Cartels) கட்டுப்படுத்தக் கூடியதாகவுமே இருந்தது.
ஐ.பி.எல் பணமழை
முதலாளிகளிடையே சிண்டிகேட்டுகள் – கூட்டணிகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்ககான கோடிரூபாய்கள் கருப்பிலிருந்து வெள்ளையாகவும், கொள்ளையாகவும் புரண்டது.
மேற்கண்ட பின்புலத்தில் நேரலை ஒளிபரப்பு உரிமையைக் கோரி போட்டியில் இறங்கிய ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா, அப்போட்டியில்  தோற்றுப் போகிறார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பாடம் புகட்ட நினைத்த சுபாஷ் சந்திரா 2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் லீக் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உள்நாட்டு மட்டும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் தொழிலின் லாபத்தை தங்கள் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து ஒருவர் பறிக்க முயல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத பி.சி.சி.ஐ, பல்வேறு வழிகளில் வீரர்கள் ஐ.சி.எல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்தது. அதே நேரம், அதே வடிவத்திலான போட்டி அமைப்பாக ஐ.பி.எல்லை அறிமுகம் செய்கிறார்கள் – அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பாரதிய ஜனதாவின் அரசியல் செல்வாக்கின் பின்புலத்தில் திடீர் வளர்ச்சியை அடைந்திருந்த லலித் மோடியின் பொறுப்பில் ஐ.பி.எல் விடப்பட்டது.
ஏற்கனவே பி.சி.சி.ஐ நிர்வாகத்தில் இருந்த பரம்பரைப் பணக்காரர்களின் பழைய ஏக போக கூட்டமைப்பை உடைத்து தனக்கென்று புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தியிருந்த லலித் மோடி, பழைய முதலைகளின் ஆத்திரப்பார்வையினூடாகவே 2008-லிருந்து 2010 வரையிலான ஐ.பி.எல் போட்டிகளை நடத்தினார். ஐ.பி.எல்லை தனது சிந்தனையின் குழந்தை (Brain Child) என்று விவரித்த லலித் மோடி, அதனை தெள்ளத் தெளிவாக கொள்ளை நடத்துவதற்கான ஒரு அரங்காக வடிவமைத்தார். கேளிக்கை நிறைந்த அவரது பிரம்மாண்டமான வாழ்க்கையிலிருந்து கிடைத்த கிரியா ஊக்கிகளின் அதை சாத்தியப்படுத்தியது என்றாலும் அது தவறில்லை.
ஐ.பி.எல் மோசடி
திருடர்களின் போட்டியே ஐ.பி.எல் திருட்டை காட்டிக் கொடுத்து விட்டது.
ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் எட்டு அணிகளின் உண்மையான முதலாளிகள் யார், அணிகளை வாங்கவும், வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் புரட்டப்படும் தொகையின் கணக்கு என்ன, எந்த அணியில் யார் எவ்வளவு முதலீடு செய்துள்ளனர் போன்ற விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டன. முதலாளிகளிடையே சிண்டிகேட்டுகள் – கூட்டணிகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்ககான கோடிரூபாய்கள் கருப்பிலிருந்து வெள்ளையாகவும், கொள்ளையாகவும் புரண்டது.
இந்தக் கொள்ளையின் குருஜி லலித் மோடி, பலருக்கும் கேமென் தீவுகள் உள்ளிட்ட வரியில்லா சொர்க்கங்களில் இருந்து மர்மமான வழிகளில் தருவிக்கப்பட்ட கருப்புப் பணத்தை ஐ.பி.எல் அணிகளில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்து கொடுத்த விவகாரம் ஆரம்பத்திலேயே அம்பலமாகியது. லலித்மோடியின் திடீர் ’வளர்ச்சியைப்’ பார்த்து குமைந்து கொண்டிருந்த பழம் பெருச்சாளிகளே இந்த ஊழலை உலகறியச் செய்தனர். அதாவது திருடர்களின் போட்டியே திருட்டை காட்டிக் கொடுத்து விட்டது.
லலித் மோடி அடித்த கொள்ளையின் அளவு ரூ 1700 கோடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டு அமலாக்கத்துறை, சி.பி.ஐ என்று அரசின் பல்வேறு புலனாய்வுத் துறைகளின் விசாரணை வளையத்திற்குள் அவர் கடமைக்காக கொண்டு வரப்பட்டார். அதாவது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வெளிப்படையாக நடந்த கொள்ளை என்பதாலும், பங்கு சண்டையாலுமே இந்த சட்டப்பூர்வ விசாரணை நடந்தது.
மூன்றாவது ஐ.பி.எல் சீசன் 2010 ஏப்ரல் 24-ம் தேதியன்று முடிவடைந்த சில நாட்களிலேயே லலித்மோடியின் மீதான புகார்கள் பட்டியலிடப்பட்டு ஒரு நீண்ட விளக்க கடிதம் ஒன்றை பி.சி.சி.ஐ அனுப்பியது. இதுவும் போட்டி மற்றும் வேறு வழியின்றி நடந்த ஒரு விவகாரம். இறுதியில் 2010 மே மாதம் இங்கிலாந்துக்கு ஓடிய லலித் மோடி இன்று வரை ’பாதுகாப்புக்’ காரணங்களை முன்னிட்டு இந்திய மண்ணை மிதிக்க இந்திய அரசு மற்றும் பா.ஜ.க, காங்கிரசு கட்சிகளின் அனுமதியோடு மறுத்து வருகிறார்.
மோடி குழுமங்களின் தலைவர் கே.கே மோடியின் மூத்த மகனான லலித்மோடி, முதலாளிகளின் மட்டத்தில் ஒரு மைனராக அறியப்பட்டவர். முதலாளிகளின் சமூகத்தின் ’தோல்வியுற்ற’ முதலாளியாகவும் அறியப்பட்ட லலித் மோடியை முதன் முதலாக உலகம் அறிந்து கொண்டது அவர் அமெரிக்காவில் கொக்கெய்ன் போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட போது தான்.
லலித் மோடி - மினால் மோடி
சொத்துக்கு சேதாரம் வரக்கூடாது என்று இந்த ‘கலகத்தை’ ஏற்றுக் கொண்டனர்.
1985-ம் ஆண்டு அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவராக லலித்மோடி இருந்த போதுதான் மேற்கண்ட போதை திருவிளையாடல் காதை நடந்தேறியது. தந்தை கே.கே மோடி தனது செல்வாக்கான அமெரிக்க தொடர்புகளை வைத்து மகனை மீட்டு இந்தியா அழைத்து வந்தார்.
மோடி குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி தனது தாய் பினா மோடியின் தோழியும், தன்னை விட 10 வயது மூத்தவருமான மினாளை திருமணம் செய்து கொண்டார் லலித் மோடி. மைனர் மோடியின் மைனர் தனங்களை அனுமதித்த மோடி குடும்பம், அதிகாரப்பூர்வ மணத்திற்கு வட இந்திய பார்ப்பனிய கட்டுப்பெட்டித்தனத்தை கைவிடவில்லை. இருப்பினும் சொத்துக்கு சேதாரம் வரக்கூடாது என்று இந்த ‘கலகத்தை’ ஏற்றுக் கொண்டனர்.
என்றாலும் லலித் மோடி துவங்கிய தொழில்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்தன. அப்போது தோல்வியடைந்த மைனராக இருந்த லலித் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர் ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா. ஒரு முதலையின் சோகம் இன்னொரு முதலைக்குத்தான் தெரியும்.
2003-ம் ஆண்டு ராஜஸ்தானில் பதவிக்கு வந்த பாரதிய ஜனதாவின் வசுந்தரா ராஜே, லலித்மோடியின் மனைவியான மினாளின் நெருங்கிய தோழி. தன்னைப் பார்த்துச் சிரிக்கும் சக முதலாளிகளின் முன் தனது திறமையை நிரூபித்துக் காட்ட சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த லலித் மோடி ராஜஸ்தானுக்கு தனது முகாமை மாற்றுகிறார். நாளொன்றுக்கு 1,25,000 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படும் தாஜ் குழுமத்திற்குச் சொந்தமான ’ராம்பாக் மாளிகை’ ஹோட்டலின் இளவரசர் சூட்டில் தங்கிய லலித்மோடியை “சூப்பர் முதலமைச்சர்” என்றே அன்றைக்கு அழைத்தனர். ஆக “மக்கள் முதல்வருக்கு” முன்னாடியே ராஜஸ்தானில் இந்த வரலாற்றை பா.ஜ.க ஆரம்பித்திருந்தது. என்ன இருந்தாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே புஷ்பக் விமானத்தை கண்டுபிடித்த இந்து ஞான மரபல்லவா!
சூப்பர் முதலமைச்சர்
வசுந்தரா ராஜே சிந்தியாவின் “சூப்பர் முதலமைச்சர்” ஆக இருந்தார் லலித் மோடி
மாநில அரசாங்கத்தில் நகரும் எந்த ஒரு கோப்பும் லலித்மோடியின் பார்வைக்கு வந்த பின்னரே நகர்ந்தன. அரசாங்க அதிகாரிகள் கோப்புகளோடு ராம்பாம் ஹோட்டலின் முன்னே வரிசை கட்டினர். பெரும் தரகு முதலாளிகள் பலரை மாநிலத்திற்கு அழைத்து வந்த மோடி, அவற்றிற்கான நிலக் கையகப்படுத்தலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மாநிலத்தின் மதுக் கொள்கைகளைத் தளர்த்தி சாராய வணிகத்தில் தனது மறைமுக முதலீடுகளைக் கொட்டினார். ஹெரிடேஜ் சிட்டி கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிழல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் துவக்கிய லலித்மோடி, ராஜஸ்தானின் பாரம்பரிய பெருமை மிக்க கோட்டைகளை வாங்கிக் குவித்து ஓட்டல்களாக அவற்றை மாற்றத் துவங்கினார்.
ராஜஸ்தானின் சுரங்கங்கள் பலவற்றை வசுந்தரா ராஜே சிந்தியாவின் உதவியோடு கைப்பற்றிய லலித் தனது நிழல் நிறுவனங்களைக் கொண்டு அவற்றில் முதலிடச் செய்து, மாநிலத்தின் சுரங்கத் தொழிலைக் கட்டுப்படுத்தினார். முதல்வரின் மகனோடு தொழில் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு ஐந்தாண்டுகளில் மொத்த மாநிலத்தையும் பா.ஜ.கவின் உள்ளூர் தளபதிகளின் துணையோடு மொட்டையடித்தார்.
வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங்கோடு நெருக்கமான தொழில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட லலித் மோடி, அதன் மூலம் சிக்கலான வழிகளில் கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டுள்ளார். தலையைக் கிறுகிறுக்க வைக்கும் இந்த நிதி சுழற்சி நடவடிக்கையை புரிந்து கொள்ள நியாந்த் ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் என்ற துஷ்யந்தின் நிறுவனத்திற்கும் மோடியின் அனந்தா ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பரிவர்த்தனைகளைக் குறிப்பிடலாம்.
துஷ்யந்த் சிங்
ராஜேவின் மகன் துஷ்யந்தின் நியாந்த் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன் கொடுத்தார் லலித் மோடி.
அனந்தா ஹோட்டல்சின் போர்டு உறுப்பினர்களாக இருப்பது இரண்டே பேர்கள் –  மோடியும் அவரது மனைவும் மினாளினியும். அதே நேரம், மொரீசியஸ் தீவில் உள்ள வில்டன் என்ற உப்புமா கம்பெனியின் வசம் அனந்தா ஹோட்டலின் 99.5 சதவீத பங்குகள் உள்ளன. இந்த வில்டன் நிறுவனம் பங்குப் பரிவர்த்தனை மற்றும் நிதி முதலீட்டு நடவடிக்கைகளுக்காகவென்றே ஏற்படுத்தப்பட்ட ஒரு நிழல் நிறுவனம். இந்நிறுவனத்தின் மூலம் சுற்று வழிகளில் முதலீடு என்ற பெயரில் துஷ்யந்தின் நியாந்த் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. பத்துரூபாய் முகமதிப்பு உள்ள நியாந்த் ஹோட்டலின் பங்கை 96,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார் மோடி.
இரண்டாயிரங்களின் துவக்கத்திலிருந்தே இந்திய கிரிக்கெட் வாரியத்தினுள் நுழையும் வழியைத் தேடிக் கொண்டிருந்த லலித்மோடி, அதற்கான வழியாக ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் வாரியத்தை இனங் காணுகிறார். ஆனால் அந்த சமயத்தில் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக அம்மாநிலத்தின் பழைய பெருச்சாளிகளான ருங்தா குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் ருங்தா இருந்தார். அம்மாநில கிரிக்கெட் வாரியம் மொத்தத்தையும் ருங்தா குடும்பத்தினரே கட்டுப்படுத்தினர்.
ருங்தா குடும்பத்தினரை மாநில கிரிக்கெட் வாரியத்திலிருந்து வெளியேற்றவும் அதனுள் லலித்மோடியை நுழைக்கவுமான வேலையை வசுந்தராவே முன்னின்று மேற்கொண்டார். மாநில கிரிக்கெட் வாரியத்தின் பதிவைக் காலாவதியாக்கி, மறுபதிவு செய்ய வேண்டுமென்றும், அதில் வாரியத்தின் எல்லா உறுப்பினர்களும் வாக்களிக்க கூடாது என்றும், மாவட்ட வாரியத்தின் தலைவர்கள் மாத்திரம் வாக்களித்தால் போதுமென்றும் புதிதாக சட்டத்தையே ஏற்படுத்தினார் வசுந்தரா ராஜே. இதைத்தான் போலிஜனநாயகம் என்று சொன்னாலும் ஜனநாயகத்தை வெள்ளேந்தியாக நம்பும் கனவான்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு 2005ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியைக் கைப்பற்றிய மோடி, அதன் பின் பி.சி.சி.ஐயின் பொறுப்புகளில் தாவத் துவங்கினார்.
லலித் மோடி, நரேந்திர மோடி
ஒருவேளை லலித் மோடி மட்டும் தனது மைனர்த் தனத்தையும், கொள்ளை தொழிலையும் கொஞ்சம் நேர்த்தியாக செய்திருந்தால் நரேந்திர மோடிக்கு பதிலாக இவரே பிரதமாகியிருப்பார்.
2003 – 2008 காலகட்டத்தில் லலித் மோடி ராஜஸ்தானில் மேற்கொண்ட ‘தொழில் நடவடிக்கைகளையும்’ கிரிக்கெட் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், அவர் அரசியலிலும் தலையிட்டு தங்கள் அடிமடியிலேயே கைவைக்கும் அளவுக்கு உயரத் துவங்கிய போது பதறிப் போனார்கள். தேர்தலில் யாருக்கு சீட்டு வழங்குவது, மறுப்பது என்பது தொடர்பாக வசுந்தராவின் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு மோடி மாறியது பாரதிய ஜனதாவில் உட்கட்சிக் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ்சின் முதுகுக்குப் பின்னே பதுங்கிக் கொள்வதே மிகச் சிறந்த அரசியல் பாதுகாப்பு என்கிற சிந்தாந்தத்தின் அடிப்படையில் காலம் காலமாக செயல்பட்டு வந்தவர்கள் போர்க் கொடி தூக்கினர்.
ஒருவேளை லலித் மோடி மட்டும் தனது மைனர்த் தனத்தையும், கொள்ளை தொழிலையும் கொஞ்சம் நேர்த்தியாக செய்திருந்தால் நரேந்திர மோடிக்கு பதிலாக இவரே பிரதமாகியிருப்பார்.
2008 தேர்தல் சமயத்தில் வசுந்தரா ராஜே, லலித் மோடியையும் அவருக்கு எதிராக கட்சிக்குள் உருவாகியிருந்த கோஷ்டியையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியிருந்தது – இதில் தான் பரிந்துரைத்த சிலருக்கு தேர்தல் சீட்டுகள் மறுக்கப்பட்டதை லலித் மோடி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவில்லை. எனினும், என்றைக்காவது பயன்படும் என்ற முன்யோசனையோடு வசுந்தராவோடான தனது உறவை அவர் பராமரித்து வந்தார். 2008 தேர்தலில் வசுந்தரா ராஜே மண்ணைக் கவ்விய நேரத்தில் லலித் மோடி ஐ.பி.எல் சூதாட்டத்தில் தீவிரமாக ஆழ்ந்திருந்தார்.
லலித் மோடி ஐரோப்பாவில்
”என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது”
ஐபிஎல் முறைகேடுகள் முற்றி 2010-ல் இங்கிலாந்துக்கு தஞ்சம் புகுந்த லலித் மோடியை அவரது எதிர் கோஷ்டிகள் மன்னிக்கத் தயாராக இல்லை. அந்த எதிர்கோஷ்டியில் அன்றைக்கு முன்னின்ற காங்கிரசின் ஜோதிராதித்ய சிந்தியாவும் பாரதிய ஜனதாவின் அருண் ஜேட்லியும் ஐ.பி.எல் சூதாட்டப் பணத்தில் பங்கு கிடைக்காத பிரிவைப் பிரதிநிதித்துவப் படுத்தினர். இவர்களின் பின்னே இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனும், ப.சிதம்பரமும் இருந்தனர். சசி தரூர் கொச்சி அணியின் மறைமுகப் பங்குதாரராக இருந்ததை அம்பலப்படுத்தி தங்கள் பெயரைக் கெடுத்த லலித் மோடியின் மேல் காங்கிரசு ஆத்திரத்தோடு இருந்த சமயத்தில் ஊழல்களில் ஈடுபட்டு லலித் மோடியே காங்கிரசுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்; விளைவாக ஊழல் முறைகேட்டுப் புகார்களும் வழக்குகளும் வரிசை கட்டின.
ஆரம்பித்த அதே இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார் லலித் மோடி. ராய்பகதூர் குர்ச்சரன் மோடியின் பேரனும், புகழ்பெற்ற மோடி குழும முதலாளி கே.கே மோடின் மகனுமான லலித் மோடி அத்தனை சீக்கிரத்தில் சளைத்துப் போகிறவர் அல்ல. இங்கிலாந்தில் குடியேறிய லலித் தனது தோல்விகளை வெற்றியாக காட்ட ஆடம்பரமான வாழ்கை முறையைத் தேர்ந்தெடுத்தார். அப்படி தெரிவு செய்யுமளவு அவரது நிதி உலகமெங்கும் வெயிட்டாக இருந்தது.
இங்கிலாந்திலிருந்து தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் மூலம் உலகின் ஓய்வுக் கேளிக்கை இலக்குகளுக்குப் பறக்கத் துவங்கினார். ”என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது” என்பதே அவர் சொல்ல விரும்பிய செய்தி. இந்தியாவில் நடந்து வந்த விசாரணைகளின் போக்கில் லலித்மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட போது, அதைத் தனக்கு ஏற்பட்ட அவமரியாதையாக எடுத்துக் கொண்டார்.
வசுந்தரா ராஜே சிந்தியா
லலித் மோடியின் ஊழல்கள் இந்தியாவெங்கும் நாற்றமெடுக்கத் துவங்கி சரியாக ஒருவருடம் கழித்து 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவரது குடியேற்றத்திற்கு பரிந்துரை செய்து வசுந்தரா ராஜே இங்கிலாந்து அரசின் குடியமர்வுத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லலித்மோடி, வழக்குகளை இங்கிலாந்திலிருந்தே எதிர்கொண்டார். இதை விசாரணைக்கு வரவேண்டிய ஜென்டில்மென் என்று ஊடகங்களை பேச வைத்தார். இந்தியாவுக்குச் செல்வது தனது உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடும் என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தனது லண்டன் வாழ்க்கையை நீட்டித்துக் கொண்டார். இந்நிலையில் லலித் மோடியின் ஊழல்கள் இந்தியாவெங்கும் நாற்றமெடுக்கத் துவங்கி சரியாக ஒருவருடம் கழித்து 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவரது குடியேற்றத்திற்கு பரிந்துரை செய்து இந்தியத் தலைவர் ஒருவர் இங்கிலாந்து அரசின் குடியமர்வுத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்.
“இந்திய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்படக் கூடாது என்கிற ஒரே நிபந்தனையின் பேரில் லலித்மோடியின் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்படும் யாதொரு குடியேற்ற விண்ணப்பத்தையும் நான் ஆதரிக்கிறேன்”
கடிதத்தை எழுதியவர் வசுந்தரா ராஜே சிந்தியா; கடிதம் எழுதப்பட்ட போது அவர் மாநில எதிர்கட்சித் தலைவர். தற்போது இந்தக் கடிதத்தின் நகலை வெளியிட்டுள்ள லலித்மோடி, கடிதம் எழுதியது மட்டுமின்றி கான்சர் நோயால் வாடும் தனது மனைவியை சிகிச்சைக்காக இங்கிலாந்திருந்து வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்று உதவியதும் வசுந்தரா ராஜே தான் என்று தெரிவித்துள்ளார்.
விவகாரம் துவங்கிய போது சுஷ்மா சுவராஜின் லலித்மோடி தொடர்பு மட்டும் தான் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது – இப்போது ஏன் வசுந்தராவை தேவையில்லாமல் உள்ளே இழுத்துள்ளார் லலித்மோடி? அது தான் ஒரு மைனரின் கெத்து.
இரண்டாம் முறையாக பதவிக்கு வந்த வசுந்தரா, முதல் முறை உதவியதைப் போல் தனக்கு உதவவில்லை என்றும், மீண்டும் ராஜஸ்தான் அணியின் தலைவராக 2014-ம் ஆண்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்டு அது மாநில கிரிக்கெட் வாரியத்திற்கும் பி.சி.சி.ஐக்கும் மோதலாக வெடித்து, அந்த மோதலில் தனது பதவி பறிக்கப்பட்ட போது மாநில முதல்வராக இருந்த வசுந்தரா போதிய அளவில் தனக்கு உதவி செய்யாமல் ஒதுங்கிக் கொண்டதை மோடி மறக்கவில்லை. அது தான் போகிற போக்கில் சுஷ்மா மட்டுமில்லை, பல கட்சிகளில் உள்ள பலரும், ஏன் ராஜஸ்தான் மாநில முதல்வரே கூட எனக்கு உதவியுள்ளாரே என்று இழுத்துப் போட்டுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜைப் பற்றிப் பேசும் போது அவரது தாயுள்ளத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சுஷ்மா சுவராஜின் நடத்தையில் பொங்கிவழியும் தாயன்பைப் பற்றி சமீப காலமாக ஓயாமல் பாடம் எடுத்து வருகின்றனர் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்.
சுஷ்மா ஸ்வராஜின் தாயன்பை பற்றி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்லித் தான் இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அவருக்கு நிறைய செல்லக் குழந்தைகள் உள்ளனர். அந்த செல்லக் குழந்தைகளில் கருநாடகத்தின் கனிம வளக் கொள்ளை ரெட்டி சகோதரர்களும் அடக்கம். அவ்வப்போது, இந்தக் குழந்தைகள் (பதவிப்) பசியில் சிணுங்கினால் தில்லியிலிருந்து அடுத்த விமானத்தில் பறந்து வரும் சுஷ்மா ஸ்வராஜ் தன் செல்லக் குழந்தைகளின் பசியாற்றிவிட்டே அடுத்த வேலையைப் பார்ப்பார். அவரது தாயுள்ளத்தைக் கண்டு வியந்து மகிந்த ராஜபக்சேவே நெக்லெஸ் பரிசளித்துள்ளார் எனும் போது, வேறு யாருடைய சான்றிதழும் தேவையே இல்லை.
–    தொடரும். வினவு.com
– தமிழரசன்.

கருத்துகள் இல்லை: