வெள்ளி, 3 ஜூலை, 2015

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்க பாக். தீவிரவாத இயக்கங்கள் 'சதி' - தமிழக அரசு மனு!

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகம்மது, இந்தியன் முஜாஹிதீன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு பேராபத்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகம்மது, இந்தியன் முஜாஹிதீன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளது. வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனங்கள் மூலமாக அணையைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அணைகள், மின் கட்டமைப்புகளைத் தாக்கி பொருளாதாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவை. இவ்வாறு தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனு மீது 4 வார காலத்தில் பதிலளிக்குமாறு கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: