புதன், 15 ஜனவரி, 2014

நிதான வாசிப்பு என்பது ஒரு சமூக நிகழ்வு ! புதிய கருத்தாக்கம் அல்ல.

இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.
அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான்.
இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது. ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.
தாவும் மனம்
இணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது மனம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.
பெரும் புரட்சி
அண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர். இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”
‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.
ஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.
நிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா?
நிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.
ஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது. அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.
முப்பது நொடிகள்தான்
தன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.
பெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை. அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.
நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு
நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்
கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: பா. ஜம்புலிங்கம் tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: